தமிழக வரலாற்றில் இது கரும்புள்ளி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை ஆளுங்கட்சி மதிக்கவில்லை. அத்துடன், பிரதமர் இந்த நிகழ்வுக்கு வர மறுத்தும்கூட, தேதி தீர்மானிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கின் முதல் குற்றவாளியான ஜெ.வின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க பாலிடெக்னிக் தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஊழல்மயமாகிவிட்ட அரசை நடத்தும் எடப்பாடி தீவிர அக்கறை காட்டியதற்குப் பின்னணி உண்டு.
ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் பிரதமர் மோடி திறந்து வைப்பார். அதற்காக அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது என கடந்த வருடம் அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. டெல்லியில் மோடியை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தனித்தனியாக சந்தித்தபோதும் இந்த கோரிக்கைக்கு இருவருமே அழுத்தம் கொடுத்திருந்தனர். மோடியிடமிருந்து க்ரீன் சிக்னல் இல்லை.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது, ‘’ மோடியும் ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் கூட்டணிக்கு ஜெ. ஒத்துழைக்கவில்லை. பா.ஜ.க. அரசின் திட்டங்களுக்கும் ஒத்துழைக்கவில்லை. இதனால், ஜெ. நம்பகத்தன்மையில்லாதவர் என நினைத்தார் மோடி. ஜெ. அப்பல்லோவில் இருந்தபோதும் மோடி வரவில்லை. மரணத்திற்குப் பிறகும் குற்றவாளி எனத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டவர் ஜெ. எடப்பாடி அரசு பற்றிய கவர்னர் புரோஹித்தின் வாராந்திர ரிப்போர்ட்டும் மோடிக்கு எச்சரிக்கை செய்தபடியே இருக்கிறது. இதற்கு வலுச் சேர்ப்பது போல ஐ.பி. ரிப்போர்ட்டும் இருப்பதால் சமீபகாலமாக எடப்பாடி அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான், ஜெயலலிதா படத்தை பேரவையில் மோடி திறந்து வைப்பதன் மூலம் அவரது ஆதரவை மீண்டும் பெறலாம் என்கிற திட்டத்தில் கேரள கவர்னர் சதாசிவத்தின் மூலம் முயற்சித்தார் எடப்பாடி. சதாசிவமும் இது குறித்து அமித்ஷாவிடம் பேச, அவரும் அரைகுறை மனதுடன் மோடியிடம் விவரத்தை சொல்லியிருக்கிறார்.
"ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஊழல் வழக்கில் அவர் குற்றவாளியாக இருப்பதால் அவரது படத்தை திறந்து வைக்க விரும்பவில்லை' என்றவர், "தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகும் எடப்பாடி அரசு நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவும் விருப்பமில்லை' என்பதைச் சொல்லியிருக்கிறார் மோடி. மோடியின் நீண்டநாள் வெறுப்பு வெளிப்பட்டுள்ளது'' என சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி அரசுக்கு இதுவரை உதவி வந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமனும் பொன்.ராதாகிருஷ்ணனும் கூட, எடப்பாடி அரசிடமிருந்து விலகியிருப்பதே நல்லது என அண்மையில் மோடிக்கு தகவல் தந்துள்ளனர் என்கிறது டெல்லி தகவல்கள்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்று பிப்ரவரி 16-ல் ஒரு வருடம் ஆகப்போகிறது. அந்த நாளில் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி, ஜெ. படத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டது. கவர்னரிடம் தேதியை சொன்னபோது, "18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் பெரும்பான்மை இல்லாத அரசாக, பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டாம். தீர்ப்பைப் பார்த்துவிட்டு பட்ஜெட் தாக்கல் செய்யலாம். அவசரமில்லை' என கடிவாளம் போட்டார் கவர்னர். தீர்ப்பு எப்படி வருமோ, பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமோ என்ற தயக்கத்தில் உள்ள எடப்பாடி, தன் ஆட்சியில், ஜெயலலிதா படம் திறக்கப்பட வேண்டும் என்ற திட்டத்துடன் திங்கட்கிழமை படத்திறப்பு என அறிவித்தார். எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்குப் போக முடியாதபடி, சனி-ஞாயிறு விடுமுறை குறுக்கிடும் என்பதுதான் அவரது திட்டம்.
குற்றவாளியின் படம் திறக்க வரமுடியாது என மோடி தெளிவுபடுத்திவிட்ட நிலையில், கவர்னரும் அதே வழியில் செயல்படுவார் என்பதால், எடப்பாடியே திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. சென்ட்டிமெண்டாக அதனை தவிர்த்த எடப்பாடி, தன்னிச்சையாக எடுத்த முடிவுதான் சபாநாயகர் தனபால் திறந்துவைப்பார் என்ற அறிவிப்பு. அழைப்பிதழ் பார்த்த சபாநாயகரோ, சர்ச்சையில் தன்னை சிக்க வைக்கிறார்களோன்னு யோசித்தார்'' என பின்னணிகளை விவரித்தனர்.
""அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்கக்கூடாது என்கிற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதன் முடிவு தெரியாமல் பேரவையில் அவரது படத்தை திறப்பது மரபல்ல!''’ என்கிறார் சட்டப்பேரவைச் செயலாளர் பூபதியிடம் எதிர்ப்புக் கடிதம் கொடுத்த தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்.
ஜெ. படத் திறப்பு பற்றி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளார் டி.டி.வி.தினகரன். அவரது ஆதரவாளரான வெற்றிவேல் நம்மிடம், ""தமிழர்களின் உரிமைகளுக்காக பேரவையில் பல தீர்மானங்களை நிறைவேற்றி சட்டப்போராட்டங்களை நடத்திய ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதனால், மக்கள் எண்ணத்திற்கு மாறான எதிர்ப்பினை ஸ்டாலின் கைவிட வேண்டும். அதே நேரத்தில், ஜெயலலிதாவின் படத்தை திறக்கும் யோக்கியதை எடப்பாடிக்கோ அவரது அரசுக்கோ இல்லை. இந்த ஆட்சி கவிழப்போகிறது. எங்களிடம் ஆட்சி வரப்போகிறது. அப்போது கோலாகலமாக புதிய படம் திறப்போம்'' என்கிறார்.
ஜெயலலிதா என்றாலே தவறான முன்னுதாரணம் என்பது அவரது மரணத்திற்குப் பிறகும் தொடர்கிறது.
-இரா.இளையசெல்வன்