""எங்களுக்குள் கருத்து வேற்பாடுகள் கிடையாது; என்னிடம் ஆலோசித்துவிட்டே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி'' என துணைமுதல்வர் ஓ.பி.எஸ். சொன்னாலும், இருவருக்குமிடையே மோதல்கள் அதிகரித்தபடிதான் இருக்கிறது. இதனால், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை சற்று ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் அ.தி.மு.க.வுக்குள் பஞ்சாயத்துப் பண்ண ரெடியாகியிருக்கிறது டெல்லி.
ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமான சீனியர்கள் நம்மிடம், ""தினகரனின் குடைச்சலை சமாளிக்கவும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் ஓ.பி.எஸ். அணியினர் மீண்டும் இணைய வேண்டுமென விரும்பினார் எடப்பாடி. அதற்கேற்ப டெல்லியில் காய்கள் நகர்த்தப்பட்டன. (மோடி- ஓ.பி.எஸ். சந்திப்பில் நடந்தது என்ன என்பதை அப்போதே நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது)
தர்மயுத்தத்தின்போது தன்னைத் தூக்கி நிறுத்திய சீனியர்களுக்குரிய மரியாதை கட்சியிலும் ஆட்சியிலும் இருக்கவேண்டும் என ஓ.பி.எஸ். சொன்னதையும் ஏற்றுக்கொண்ட பிரதமர், இதுகுறித்து எடப்பாடிக்கும் அறிவுறுத்தினார். ஆனால், கட்சியில் சில நெளிவுசுளிவுகளுக்காக சில பதவிகளை ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடி, ஆட்சி அதிகாரத்தில் அதனை இப்போது வரை அனுமதிக்கவில்லை. துணைமுதல்வர் பதவியுடன், உள்துறையும் பொ.ப.துறையும் வேண்டும் என ஓ.பி.எஸ். அடம்பிடித்தபோதும் தர மறுத்தார் எடப்பாடி. இதையறிந்த டெல்லி, வீட்டுவசதித்துறையை ஏற்குமாறு சமாதானப்படுத்தியது. அரசின் அனைத்து முடிவுகளையும் ஓ.பி.எஸ்.சுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என எடப்பாடிக்கும் டெல்லி அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தவில்லை. "கட்சி விசயங்களில் மட்டும்தான் கலந்தாலோசிப்பேன்' என முடிவெடுத்தார் எடப்பாடி. இதனை சீனியர் அமைச்சர்கள் இருவர் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு தெரிவிக்கவும் செய்தார். இதனையறிந்து அப்-செட்டானார் பன்னீர்.
குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் விடப்படும் டெண்டர்கள் எடப்பாடி அலுவலகமே முடிவு செய்தது. அதாவது, ஜெயலலிதா இருந்தபோது டெண்டர் விவகாரங்களை அவரது செயலாளராகவும் பிறகு தலைமைச்செயலாளராகவும் இருந்த ராமமோகனராவ் கவனித்துக்கொண்டது போல, எடப்பாடியும் தனது அதிகாரிகள் மூலமாகவே அனைத்து டெண்டர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார். இதில், ஓ.பி.எஸ்.சிடமிருக்கும் வீட்டுவசதித்துறையும் சி.எம்.டி.ஏ.வும் அடங்கும். "ஒரு கோடிக்கும் அதிகமான எந்த டெண்டர்களாக இருந்தாலும் முதல்வரின் நாலெட்ஜ் இல்லாமல் முடிவு செய்யக்கூடாது' என துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது முதல்வரின் அலுவலகம். தவிர, "ஓ.பி.எஸ். மகன்களின் சிபாரிசுகள் எதுவும் ஏற்கக்கூடாது' எனவும் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவுப் போடப்பட்டது.
இதனால் தனது ஆதங்கத்தை ஆதரவாளர்களிடம் மனம்விட்டு ஓ.பி.எஸ். பேசியபோது, "பஞ்சாயத்து செய்த பிரதமரிடமே முறையிடுங்கள்' என யோசனை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, இரண்டு முறை ஓ.பி.எஸ். டெல்லிக்கு படையெடுத்தும் அவருக்கு பிரதமர் அப்பாயின்ட்மெண்ட் தரவில்லை. நொந்துபோய் சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ்.
எடப்பாடி அரசு மற்றும் அமைச்சர்கள் பற்றி கவர்னர் கொடுத்த ஊழல் ரிப்போர்ட்டுகளும், எடப்பாடியின் ஊழல் அரசை பாதுகாப்பதன் மூலம் பாஜகவை மக்கள் வெறுக்கிறார்கள் என மத்திய உளவுத்துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டுகளும் எடப்பாடி அரசின் விவகாரங்களிலிருந்து விலகி நிற்கும் முடிவை நோக்கி மோடி அரசைத் தள்ளியது. அதனால் ஓ.பி.எஸ்.சுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கப்படவில்லை. ஓ.பி.எஸ். கோபத்தில் இருக்க, அவரை சந்திக்க மோடி மறுத்ததை அறிந்து எடப்பாடியும் கொங்கு பெல்ட்டும் குதூகலப்பட்டது. எடப்பாடி தரப்பிலான மரியாதையும் ஓ.பி.எஸ்.ஸுக்கு குறைந்தது. தனக்கு பிரதமர் அப்பாயின்ட்மெண்ட் கொடுக்காததற்கு எடப்பாடிதான் காரணம் என நினைத்தார் பன்னீர்.
சமீபத்தில் தனது துறை சார்ந்த சுமார் 2,000 கோடி மதிப்பிலான 5 முக்கிய டெண்டர் விவகாரங்களில் தீவிரம் காட்டினார் ஓ.பி.எஸ். ஆனால், முதல்வரின் செயலாளர்கள், "அந்த டெண்டர்களில் சி.எம். இண்ட்ரஸ்ட் காட்டி வருகிறார். நீங்கள் அதில் தலையிட வேண்டாம்' என ஓ.பி.எஸ்.சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த... இதனையறிந்து ஏகத்துக்கும் டென்ஷனாகிவிட்டார் பன்னீர்.
கடந்த சில வாரங்களாகவே யாரிடமும் கலகலப்பாகப் பேசவில்லை பன்னீர். எடப்பாடி புறக்கணிப்பதையும் டெல்லி தவிர்ப்பதையும் ஆதரவாளர்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார். அப்போது சீனியர்கள் சிலர், "இதனை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தினால்தான் புரியவர்களுக்குப் புரியும்' என சொன்னார்கள். டெல்லியின் பாராமுகத்தால் கோபத்தில் இருந்த ஓ.பி.எஸ்., தேனி கூட்டத்தில், டெல்லியை சீண்டும் வகையில் பேசினார்''‘என்று விரிவாக விவரித்தனர்.
முதல்வருக்கு நெருக்கமான சீனியர்களிடம் விசாரித்தபோது, ""ஆட்சி அதிகாரத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கக்கூடாதுங்கிறதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. ஓ.பி.எஸ்.சின் துறையிலுள்ள ஒவ்வொரு விசயத்திலும் முதல்வர் அலுவலகம் தலையிடுவதில்லை. ஆனால், டெண்டர் விவகாரங்களில் முடிவெடுக்கும்போது எடப்பாடிக்கு தெரியாமல் எதிவும் இருக்கக்கூடாது என்பதால்தான் தலையிட வேண்டியிருக்கிறது. சி.எம்.டி.ஏ.வில் நகரும் கோப்புகளில் பல ஊழல்கள் இருக்கின்றன. தவறான கோப்புகள் வெவ்வேறு ரூபங்களில் சரிசெய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு விசயத்தில் இவை அம்பலமானால் அரசுக்கு மேலும், மேலும் கெட்ட பெயர்தான் ஏற்படும் என்பதால் தலையிட வேண்டியதிருக்கிறது.
இதுகுறித்து அண்மையில் முதல்வரை சந்தித்தார் பன்னீர். அப்போது சீனியர் அமைச்சர்களும் உடனிருந்தனர். டெண்டர் விவகாரம் குறித்து இ.பி.எஸ்.சிடம் ஓ.பி.எஸ். தனது ஆதங்கத்தைக் கொட்டியபோது, "ஆட்சியைக் கவிழ்க்க பலவழிகளில் பலரும் முயற்சிக்கிறார்கள். ஆனா, ஆட்சியைக் காப்பாற்ற நான் மட்டும்தான் முயற்சிக்கிறேன். எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள நான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற என்ன பாடுபட வேண்டியதிருக்கிறது தெரியுமா? இப்போகூட இந்த வருடத்துக்கான செட்டில்மெண்ட்டை (50 எல்) நான்தான் செய்திருக்கிறேன். இந்தச் சிக்கல்களை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனா, அதிகாரமில்லை... அதிகாரமில்லைன்னு மட்டும் வருத்தப்படுகிறீர்கள்' என ஆரம்பித்து நிறைய விசயங்களைக் கொட்டியுள்ளார் எடப்பாடி.
அதற்கு எதுவும் பதில்பேசாத ஓ.பி.எஸ்., "18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வழிகளை ஆராய்வதில் காட்டும் அக்கறை, நான் உட்பட 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில் காட்டப்படுவதில்லை' என ஆதங்கத்தை வெளிப்படுத்த, "அரசு தரப்பில் எடுக்கும் சாதகமான முயற்சிகள் தெரிந்தும் முதல்வரை சந்தேகிக்கிற மாதிரி பேசறீங்களே'ன்னு கேள்வி எழுப்பினார்கள் அமைச்சர்கள்.
திருப்தியடையாத ஓ.பி.எஸ்.சுக்கு, தானும் தன் குடும்பத்தாரும் அதிகாரம் செலுத்த முடியாமல், எடப்பாடி தரப்பினரின் கை ஓங்கியிருப்பதைப் பொறுக்கமுடியவில்லை. தான் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில் பாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதை உணர்ந்திருக்கும் ஓ.பி.எஸ்., இது குறித்து டெல்லியின் உதவியை கேட்டுப்பெற திட்டமிட்டும் டெல்லி மறுத்துவிட்டது. ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான வழக்கிலும், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கிலும் பாதகமான தீர்ப்பு வரும் என்றுதான் எடப்பாடியிடம் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால், சாதகமான தீர்ப்பினைப் பெற கடைசிக்கட்ட முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அதற்கு பலன் கிடைக்காமல் போனால், 18 எம்.எல்.ஏ.க்களில் 10 பேரிடம் பேசவேண்டியதை பேசி வைத்திருக்கிறார் எடப்பாடி. இது ஒருபுறமிருக்க... 12 எம்.எல்.ஏ.க்கள் விசயத்தில் எந்த சாதகமும் கிடைக்கவில்லையெனில் அதனை சமாளிக்க 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற சசிகலாவின் உதவியை மீண்டும் கோரவும் தூதுவிடப்பட்டுள்ளது''‘என சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவையெல்லாம் சேர்ந்துதான், ஓ.பி.எஸ்.ஸை பொதுமேடையில் பேசவைத்தது. அணிகள் இணைப்பில் மோடியின் தலையீடு இருந்ததை ஓ.பி.எஸ். வெளிப்படையாக போட்டுடைத்ததில் தங்களது இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்த டெல்லி, மத்திய உளவுத்துறையினர் மூலம் ஓ.பி.எஸ்.சிடம் விவாதித்துள்ளது. இதனையடுத்து, பாண்டிச்சேரிக்கு 25-ந் தேதி வரும் பிரதமர் மோடி, ஒருநாள் முன்னதாக சென்னை வந்து அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் பன்னீருக்குமிடையே உள்ள பஞ்சாயத்தை தீர்த்து வைக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லும் தமிழக பா.ஜ.க.வினர், அ.தி.மு.க. விவகாரங்களிலும் எடப்பாடி அரசிலும் தலையிடாமல் இருப்பது பா.ஜ.க.வுக்கு அரசியல்ரீதியாக நல்லது. எடப்பாடியின் ஊழல் அரசுக்கு எதிராக எங்களைப் பேசச்சொல்லிவிட்டு தற்போது ஜெயலலிதாவின் திட்டமான மானிய விலை ஸ்கூட்டி திட்டத்தை துவக்கி வைக்க மோடி வருவது எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் அலுவலகத்தை வலியுறுத்தி வருகிறோம்''‘என்கிறார்கள்.