ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி உரிமையில் கோட்டை விட்ட எடப்பாடி அரசையும் வஞ்சித்த மோடி அரசையும் கழுவி ஊற்றுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ தனது சொந்த நில நீர் பாசனத்திற்காக காவிரி நீரை திருடுவதில் முன்னின்று செயல்படுகிறார் என குற்றம் சாட்டுகிறார்கள், அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட மக்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடக்கூடாது என்பதில் கர்நாடகம் தெளிவாக இருக்கிறது. தேர்தல் தொடர்பான கூட்டம் ஒன்றில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, ""காவிரி மேலாண்மை வாரியம் கூடாது என கர்நாடக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அனந்தகுமாரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதை மீறி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமானால் அது கர்நாடக மக்களுக்கு செய்யும் துரோகம். இதை மீறி மத்திய அரசு அமைக்கட்டும் பார்க்கலாம்'' என சவால் விட்டுள்ளார்.
சித்தராமையாவின் சவாலுக்கு நடுநடுங்கிப் போன மத்திய அரசு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த ஆறு வார கெடு முடிந்த பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ""கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அங்கே பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் காவிரி நீரை பகிர்ந்து கொள்ளும் திட்டம் (ஸ்கீம்) என ஒன்றை குறிப்பிட்டுள்ளது. அது காவிரி மேலாண்மை வாரியம் தானா? காவிரி மேலாண்மை வாரியம்தான் திட்டம் என்றால் அதன் உறுப்பினர்கள் யார்? காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமா? அல்லது அதில் மாற்றங்கள் செய்து மத்திய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியுமா? எங்களுக்கு காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான திட்டத்தை அறிவிக்க மேலும் மூன்று மாதம் அவகாசம் வேண்டும்'' என ஏற்கனவே தெளிவாக்கப்பட்டுள்ள அம்சங்களுக்கான விளக்கங்களை அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.
அதற்கு எதிராக தமிழக அரசு மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் "மத்திய அரசு குறிப்பிட்டது போல விவரங்கள் எதுவுமில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை தீர்ப்பு வெளியான ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும். இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் கோர்ட் அவமதிப்பு செய்துவிட்டது மத்திய அரசு' என மொட்டையாகவும் தட்டையாகவும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
தி.மு.க. ஆட்சியில் 1990-ல் பிரதமர் வி.பி.சிங்கை வலியுறுத்தி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் "மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.
2016-ம் ஆண்டு ஜெ. முதல்வராக இருந்தபோது, அதற்கான கோரிக்கை எழுப்பினார். அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா? என கேட்டது. அப்பொழுது அதை மத்திய அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி ஏற்றுக் கொண்டார். மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தார். ஜெ. மருத்துவமனையில் இருந்த நிலையில், கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. உடனே அந்தர் பல்டி அடித்த மத்திய அரசு, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை' என்றது. அன்று முதல் இன்று வரை உச்சநீதிமன்றம் "காவிரி நதிநீர்ப் பங்கீடு என்றால் காவிரி மேலாண்மை வாரியம்' என தெளிவாக தனது தரப்பில் குறிப்பிட்டு வந்துள்ளது. இந்த பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்ய தமிழக அரசின் வழக்கறிஞரான சேகர் நாப்டே தயாராக இல்லை என வருத்தப்படுகிறார்கள் சுப்ரீம் கோர்ட்டில் பணிபுரியும் தமிழக வழக்கறிஞர்கள்.
இத்தனைக்கும் மனு தாக்கலுக்கு முன்பு காவிரி தொடர்பாக தமிழக அரசு ஆறு வார கெடு முடியும் நாளில் அமைச்சரவை கூட்டம் நடத்தியது. அதில் சேகர் நாப்டே வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். அதற்குப் பிறகும் ஏனோதானோவென ஒரு மனுவை அவர் தயாரித்துள்ளார். சேகர் நாப்டே ஒரு கிரிமினல் வழக்கறிஞர். அவர் சரியாக வாதாடாததினால்தான் காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவு குறைந்து போனது. "ஏன் இப்படி மனு தயாரித்தீர்கள்' என டெல்லி பத்திரிகையாளர்கள் சேகர் நாப்டேவிடம் கேட்டபோது "மத்திய அரசை வன்மையாக எதிர்த்து மனு எதுவும் த ôக்கல் செய்யக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதால்தான் இப்படி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது' என்கிறார். எடப்பாடி அரசின் நிலைப்பாட்டினால் காவிரியில் தமிழகத்தின் உரிமை அடமானம் வைக்கப்பட்டு, டெல்டா விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி நீரை பாசனநீர், குடிநீர் என இரண்டாக பிரித்துள்ளது. "குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை' எனக் கூறி, காவிரியில் கர்நாடகத்துக்கு வழங்கும் நீரில் 3.5 டி.எம்.சி. நீரை பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காக அளித்துள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல் கேரளாவின் கோழிக்கோடு நகரத்திற்கும் காவிரி நீரை பகிர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வேண்டும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் நீரை தனது நிலங்களுக்கு பாய்ச்சி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கே எதிராக செயல்படுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என குற்றம் சாட்டுகிறார்கள் அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட மக்கள்.
""சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்தில் உள்ளது நெடுங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ளது கோம்புக்காடு என்கிற கிராமம். காவிரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து மூன்று மாதங்களுக்கு பாசனத்திற்கான நீர் திறந்து விடப்படும். அப்படி திறந்து விடப்படும் நீரை குதிரம்பேடு, பூலாம்பட்டி, கோனேரிபட்டி ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்டி அந்த தடுப்பணைகளில் தேங்கும் நீரை சுழற்சி முறையில் செலுத்தி ஜெனரேட்டர்கள் மூலம் 150 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு தயாரிக்கிறது. இதில் பூலாம்பட்டி, கோனேரிபட்டி தடுப்பு அணைகளில் மூன்று மாதமும் மின்உற்பத்தி நடப்பதற்காக தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த நீர், ஒரு கால்வாய் மூலம் கோம்புக்காடு கிராமத்தை அடையும். தடுப்பணை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து மீன்களை பாதுகாக்கவும் பொதுமக்கள் குடிப்பதற்காகவும் திறந்து விடப்படும் தண்ணீரும் அதே கால்வாய் மூலமாக கோம்புக்காட்டை அடையும்.
இப்படி வருடத்தில் 365 நாளும் காவிரி பாயும் கோம்புக்காடு கால்வாய் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியும் பெரிய பொக்லைன் எந்திரங்களை கொண்டு எழுபதடி ஆழத்திற்கு தோண்டினார். அதில் 16 அடி விட்டமுள்ள மூன்று குழாய்களை புதைத்தார். பின்னர், 700 குதிரை சக்தியுள்ள ராட்சஷ மோட்டார்களை பொருத்தி அவற்றை கால்வாயின் எதிரே 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட கிணற்றுடன் இணைத்தார். வருடம் முழுவதும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் பாசன நீர், குடிநீர் இரண்டையும் தனது கிணற்றில் விழச் செய்தார்.
கோம்புக்காட்டிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளரி வெள்ளி. அதில் எடப்பாடி பழனிச்சாமி வகையறாக்களுக்கு 500 ஏக்கர் நிலம் உள்ளது. பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சித்தூரில் நூறு ஏக்கர் நிலமுள்ளது. இந்த இரண்டு ஊர்களிலுள்ள நிலங்களுக்கும் கோம்புக்காட்டிலிருந்து குழாய் அமைத்து கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கொண்டு செல்வது போல எடப்பாடி அமைத்திருக்கிறார்'' என்கிறார்கள் கோம்புக்காடு மக்கள்.
""எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல அவரது மச்சான் வெங்கடேசன் என்பவரும் காவிரி நீரை தன் சொந்த நிலத்திற்கு பயன்படுத்துவதற்காக ஒரு பெரிய கிணறை தேவூர் என்ற இடத்தில் அமைத்து வருகிறார் என அந்த கிணறையும் காண்பித்தார்கள். பெரிய குழாய்களுடன் அந்த கிணறும் தயாராகிக் கொண்டிருந்தது. இது தவிர எடப்பாடிக்கு நெருக்கமான அசோக் என்பவரும் ஏழு கிணறுகள் அமைத்து தனது நிலங்களுக்கு வருடத்தில் 365 நாளும் காவிரியில் வரும் பாசன நீர், குடிநீர் என இரண்டையும் பல கிலோமீட்டர் தூரம் குழாய் அமைத்து பாய்ச்சி வருகிறார்'' என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
கோம்புக்காட்டில் சுரங்கம் அமைத்து காவிரி நீர் எடுக்கும் எடப்பாடி அதற்காக அமைத்துள்ள கிணறு வேப்பமரத்துப்பட்டி சிறு விவசாயிகள் சங்கம் என்கிற சங்கத்தின் பெயரில் "எஸ்.ராஜு நீர் உந்து நிலையம்' என்கிற பெயரில் அமைந்துள்ளது. யார் பெயரிலானது இந்த சங்கம் என அங்கிருந்தவர்களை கேட்டபோது, ""இந்த சங்கத்தின் தலைவராக இருந்தவர் பெரியண்ணன். அவர் ஒரு ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. நீர்மின் திட்டங்களில் பணிபுரிந்த அவர்தான் எடப்பாடிக்கு மேட்டில் இருக்கும் கிணற்றிற்கு 70 அடி ஆழத்தில் சுரங்கம் அமைத்தால் வருடம் முழுவதும் தண்ணீர் வரும் என யோசனை தெரிவித்தவர்'' என்கிறார்கள் பகுதி மக்கள்.
""இது மிகப்பெரிய தண்ணீர் திருட்டு. "காவிரி நீர்ப் பாசனத்திற்காக தண்ணீர் விடப்படும் மூன்று மாதங்களுக்கு பிறகு காவிரியில் குடிநீருக்காக விடப்படும் தண்ணீரை விவசாயத்திற்குக் கூட பயன்படுத்தக்கூடாது' என்பது சட்டவிதி. அதை முதலமைச்சரே மீறுகிறார் என்றால், மன்னிக்க முடியாத குற்றம். எடப்பாடி மட்டுமல்ல துணை முதல்வர் பன்னீரும் தேனி மாவட்டத்தில் இதேபோல் சட்டவிரோதமாக பெரிய மோட்டார்கள் மூலம் முல்லைப் பெரியாறு தண்ணீரை திருடுகிறார் என்கிற புகார் உள்ளது'' என்கிறார் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம்.
இதற்கெல்லாம் விளக்கம் பெற எடப்பாடியின் சகோதரர் கோவிந்தனைச் சந்தித்தபோது, ""எதுவும் சொல்வதற்கில்லை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.
உரிமையைப் பெறப் போராடும் ஒவ்வொரு விவசாயியும், காவிரி நீரின்றி காய்ந்து கிடக்கையில், காவிரி ஆற்று நீரை சட்டவிரோதமாக திருடிக் கொண்டிருக்கிறார்கள் முதல்வரும் அவருக்கு நெருக்கமானவர்களும்.