""எனது அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் இந்தப் பொய்யான வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்கிற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு என் தந்தை ஜெயக்குமாரும், அத்தை ஜெயலலிதாவும்தான் வாரிசுகள்'' என உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் ஜெ.வின் அண்ணன் மகன் தீபக். அம்ருதா தொடுத்த வழக்கின் தொடர் விசாரணை தினத்திற்கு முதல்நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜெ.வின் உடலைத் தோண்டி டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டும் என தொழிலாளர் நல சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரகாஷ் என்கிற பிரபல வழக்கறிஞர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் பெங்களூரு அம்ருதா. இவர் ஜெ.வின் தங்கை ஷைலஜாவின் மகள் என ஏற்கெனவே சொல்லி வந்தனர்.
"ஜெ.வின் மரணத்திற்குப் பிறகு 3 மாதம் கழித்து, 2017 மார்ச் மாதம்தான் ஜெ.வே எனது அம்மா' என தெரிய வந்தது என மனுவில் குறிப்பிடும் அம்ருதா மற்றொரு முரண்பாடான விஷயத்தையும் கோர்ட்டில் சொன்னார். ""என் அம்மா என தெரிவதற்கு முன்பு அதுவரை எனது அம்மா என நான் பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் நம்பிக் கொண்டிருந்த ஷைலஜாவுடன் நான் போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெ.வை சந்தித்திருக்கிறேன். பெங்களூருவில் உள்ள என் தாயார் எனக் கருதியிருந்த ஷைலஜாவின் வீட்டிற்கு ஜெ. வந்திருக்கிறார். அவர் உச்சகட்ட பாதுகாப்பான "இசட் பிளஸ்' பாதுகாப்புக்கு உட்பட்டவர். அதனால் அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு நான் வந்து சென்றது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெ.வுடன் நான் டெலிபோனில் பேசிய பேச்சுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன'' என அம்ருதாவின் சார்பில் அவரது வக்கீல் பிரகாஷ் அடுக்கிக் கொண்டே போனார்.
அவரிடம் "ஒரு நிமிடம்' என இடைமறித்துப் பேசிய நீதியரசர் வைத்தியநாதன், "ஜெ.வை அம்மாவெனச் சொல்லும் நீங்கள், அதற்காக ஜெ.வின் உடலைத் தோண்டியெடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சொல்கிறீர்கள். தாயைத் தேடும் நீங்கள் உங்கள் தந்தையை ஏன் தேட மறுக்கிறீர்கள். ஜெ.வுக்கும் ஷோபன்பாபுவுக்கும் பிறந்தவர் என சொல்கிறீர்கள். என் தந்தை ஷோபன்பாபுதான் என ஏன் ஏற்க மறுக்கிறீர்கள். ஷோபன்பாபுவின் டி.என்.ஏ.வும் உங்களது டி.என்.ஏ.வும் பொருந்துகிறதா பாருங்கள் என ஏன் வழக்கு தொடரவில்லை?' என கேட்டார்.
"எனக்கு அம்மாதான் யார் என தெரிய வேண்டும்' என ஒற்றை வரியில் பதில் சொன்னார் அம்ருதாவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரகாஷ்.
அந்த மனுவை தள்ளுபடி செய்வார் என அனைவரும் எதிர்பார்த்த சூழலில் ஜெ.வின் மரணத்தைப் போலவே ஜெ.வின் மகள் பற்றிய மர்மமும் நீடிப்பதால் அம்ருதா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு அனுமதித்தார் நீதிபதி. அது தொடர்பாக ஜெ. உறவினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்... "ஜெ.வுக்கு தங்கையே இல்லை' என பதில் மனு தாக்கல் செய்துள்ளார் தீபக். இந்நிலையில்... "ஷோபன்பாபுவிடம் டி.என்.ஏ. சோதனையா?' என்கிற கேள்வி ஆந்திர மாநிலத்தை சென்று தாக்கியது. அங்கிருந்தவர்கள் நம்மைத் தொடர்புகொண்டார்கள்.
ஜெ.வுக்கும் ஆந்திராவுக்குமான நெருக்கம் மிக அதிகம். ஜெ.வின் தாயார் சந்தியா, மறைந்த நடிகர் நாகேஷ்வரராவின் சம்பந்தியான பி.ஏ.பி. சுப்பாராவ் என்கிற தெலுங்குப் பட தயாரிப்பாளருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். அந்த சுப்பாராவ்தான் ஜெ. தெலுங்கில் நடித்த முதல் படத்தை தயாரித்தார். அவர் கொஞ்சகாலம் ஜெ.வின் தேதிகளை பராமரிக்கும் வேலையையும் செய்தார். அவர் வாங்கிக் கொடுத்ததுதான் ஹைதராபாத் திராட்சைத் தோட்டம். தெலுங்குப் பட உலகில் நிரந்தரமாக நீடிப்பதுதான் சந்தியா மற்றும் ஜெ.வின் திட்டமாக இருந்தது. ஆனால், தமிழில் எம்.ஜி.ஆரின் வெற்றிகரமான கதாநாயகியாக ஜெ. புகழ் பெற்றதும் சூழல் மாறியது. சிவாஜிகணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் ஜெ. நடித்தார். தமிழில் மார்க்கெட் உயர்ந்திருந்த நேரத்தில், தெலுங்கிலும் பிஸியானார். அப்போதுதான் ஷோபன்பாபுவுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டு, காதலாக மாறி, ஒன்றாகச் சேர்ந்துவாழும் (லிவிங் டுகெதர்) உறவை உண்டாக்கியது.
ஜெ.வுக்கும் ஷோபன்பாபுவுக்கும் இடையே மலர்ந்த அந்தக் காதல் பற்றி தெலுங்கு திரைப்பட கதாசிரியரான ராமலட்சுமி வெளிப்படையாக பேசும் ஒரு வீடியோவையும் நமக்கு அனுப்பி வைத்தனர்.
ஆருத்ரா என்கிற சினிமா கதாசிரியரும் ராமலட்சுமியும் சினிமா கதாசிரியர்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை- சர்ச் பார்க் பள்ளியில் ஜெ.வுடன் படித்த ராமலட்சுமிக்கு தொழில் அடிப்படையில் ஷோபன்பாபுவையும் தெரியும், ஜெ.வையும் தெரியும். ""ஷோபன்பாபு மிகவும் அழகாக இருப்பார். அவரது மனைவி அந்தளவுக்கு அழகானவரல்லர். அதுபற்றி கேட்டால், "என் மனைவி நான் இவ்வளவு உயரத்திற்கு வளர்வதற்கு காரணமானவரின் மகள். அதனால் அவரை நான் திருமணம் செய்துகொண்டேன்' என சொல்லுவார். அதேபோல் ஜெ.வைப் போன்ற ஒரு புத்திசாலியை நான் பார்த்ததில்லை. அவரை யாராலும் சகதிக்குள் தள்ளிவிட முடியாது. அவர்கள் இருவரும் காதலித்தார்கள். ஷோபன்பாபு தனது மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்தார்.
"கோரிண்ட ஆக்கு' (மருதாணி இலை) என்கிற படத்தை தாசரி நாராயணராவ் டைரக்ஷன் செய்தார். அந்த படத்திற்கு நான்தான் கதை எழுதினேன். அதன் ஷூட்டிங் ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்தது. "ஷோபன்பாபு கதாநாயகனாக நடிக்கும் அந்த படத்தின் யூனிட் முழுமைக்கும் இன்று என் வீட்டில்தான் சாப்பாடு' என ஜெ. சொன்னார். "யார் சமைப்பார்கள்?' என ஷோபன்பாபு கேட்டார். "ஏன் நான் சமைத்தால் நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? ஆயுசு முழுக்க உங்களுக்கு என் கையால்தான் சாப்பாடு' என ஜெ. அறிவித்தார். அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாக இருந்தார்கள்.
ஷோபன்பாபு தனது மனைவி மீது வைத்திருந்த அன்பின் காரணமாக ஜெ.வை திருமணம் செய்து கொள்ளவில்லை. இல்லையென்றால் அவர்கள் நிச்சயம் திருமணம் செய்து, நிறைய குழந்தைகளைப் பெற்றிருப்பார்கள். தாசரி நாராயணராவ் ஜெ.வை பற்றி பேசும்போது, "ஜெ. இன்று தனிமையில் வாழ்கிறார். இந்த தனிமை அவருக்கு பிடிக்கவில்லை. அந்த தனிமையை உடைத்து குடும்பமாக வாழ அவர் பலமுறை முயற்சித்தார். ஷோபன்பாபு அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் இருவரும் நட்புடன் பிரிந்தனர். அவர்களுக்குள் எந்தச் சண்டையும் அதன்பிறகு வரவில்லை. அவர்களுக்குள் ரகசிய உறவுகள் தொடருகிறது. ஜெ. தன்னை தனிமைச் சிறை வாழ்க்கையில் திணித்துக்கொண்டார்'' என ஷோபன்பாபுவுக்கும் ஜெ.வுக்கும் காலங்கள் கடந்தும் தொடர்ந்து வந்த ரகசிய உறவுகளைப் பற்றி விளக்கமாக சொல்கிறார் 90 வயதைக் கடந்து வாழும் ராமலட்சுமி.
ஜெ.-ஷோபன்பாபு உறவு பற்றி சொல்லும் தெலுங்கு பத்திரிகையாளர்கள், ""2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி ஷோபன்பாபு இறந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை வீடியோ கிளிப்பிங்காக நமக்கு அனுப்பி வைத்தார்கள். ஆந்திராவில் ஒரு காலத்தில் பிரபல செய்திச் சேனலாக விளங்கியது "மா டி.வி.' தற்போது செய்தி ஒளிபரப்பை நிறுத்திக்கொண்ட "மா டி.வி.' ஷோபன்பாபுவின் மரணத்தை அப்பொழுது லைவ் ஆக ஒளிபரப்பியது.
அந்த லைவ் ஒளிபரப்பைப் பற்றி அறிவிப்பாளர் சொல்லி முடித்ததும், ஓர் இளம்பெண் தோன்றுகிறார். ஷோபன்பாபுவைப் போன்ற உயரம் கொண்ட அந்தப் பெண் ஷோபன்பாபுவின் சடலத்தை நோக்கி திரும்புகிறார். அவரது பக்கவாட்டு முகத்தோற்றம் ஜெ.வின் அண்ணன் மகளான தீபாவைப் போலவே அமைந்திருக்கிறது. அவரது கைகள் அப்படியே ஜெ.வின் கைகளைப் போலவே இருந்தன. முகத்தோற்றம், உடலமைப்பு எல்லாம் ஜெ.வின் இளமைக்கால உருவ அமைப்பைப் போலவும் தீபாவைப் போலவும் இருந்தது'' என்றனர்.
நாம் விசாரித்தவரை ஷோபன்பாபுவின் இறுதிச்சடங்கிற்கு ஜெ. செல்லவில்லை. ஜெ.வே போகாதபோது அப்பொழுது ஜெ.வால் சுப்பிரமணியன் சுவாமியின் ஆட்கள் என வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜெ.வின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா எப்படி சென்றிருப்பார் என நம்மிடம் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள் அ.தி.மு.க.வை.ச் சேர்ந்தவர்கள்.
அப்படியென்றால் ஜெ.வைப் போலவே தோற்றமளிக்கும் இந்தப் பெண் ஷோபன்பாபுவின் மரணத்தில் பங்கெடுத்தாரா என தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவரிடம் விசாரித்தோம். "ஈநாடு' பத்திரிகையில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் "இந்தப் பெண் தீபாவைப் போலிருக்கிறார்' என்றார்.
நாம் இந்த வீடியோவை, ஜெ.வை நன்கு தெரிந்தவர்களிடம் காட்டினோம். ஜெ.விடம் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, அதன்பின் அரசியல் சூழல்களால் தற்போது தி.மு.க.வில் இருக்கும் முன்னாள் அ.தி.மு.க. மந்திரிகளும், தற்போது எடப்பாடி அமைச்சரவையில் இருப்பவர்களும் "இந்தப் பெண்ணுக்கு ஜெ.வின் உடலமைப்பு ஒத்துப்போகிறது' என்பதை ஒத்துக்கொண்டார்கள்.
சசிகலா குடும்பத்தினரைக் கேட்டோம். "ஜெ.வுக்கும் ஷோபன்பாபுவுக்கும் மகள் என்று யாரும் இல்லை' என்கிறார்கள். அம்ருதா தொடுத்த வழக்கில் நீதிமன்றத்தால் "அம்ருதா ஜெ.வின் மகள்தானா? பதில் கூறுங்கள்' என சம்மன் விடுத்து அழைக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு நெருக்கமானவர்களோ, "ஜெ.வுக்கு மகள் என ஒருவர் இல்லை. நாங்கள்தான் ஜெ.வின் சொத்தான போயஸ் கார்டனின் ஒரே வாரிசு' என்கிறார்கள்.
ஜெ.வுக்கு மகள் என கர்நாடகாவில் இருந்து அம்ருதா கிளப்பியுள்ள புகாருக்கு ஆந்திராவில் இருப்பவர்கள் "அம்ருதா ஜெ.வின் மகள் அல்ல', ஜெ.வுக்கும் ஷோபன்பாவுக்கும் பிறந்த மகள் இவர்தான். அவர் ஷோபன்பாபு குடும்பத்தினரின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார்' என ஷோபன்பாபுவின் மரணச் சடங்கில் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டுகிறார்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். அம்ருதா தன்னை ஜெ. வாரிசு என்கிற நிலையில், சொத்துகளை அபகரிக்கவே இப்படிச் சொல்கிறார் என்கிறார் தீபக். இந்நிலையில், ஆந்திரப் பெண்ணும் சட்டப்படி தன்னை வாரிசு என நிரூபிப்பாரா?
இந்தப் போட்டியில் கர்நாடகா ஜெயிக்குமா? ஆந்திரா ஜெயிக்குமா? என்கிற கேள்விக்கு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து மறைந்த ஜெ.வால் மட்டுமே உண்மையான பதில் சொல்ல முடியும்.
-தாமோதரன் பிரகாஷ்
சோபனா வேதவல்லி?
சோபன்பாபு மரணத்தின்போது அஞ்சலி செலுத்தவரும் அந்தப் பெண், 1990-ஆம் ஆண்டே "நக்கீரன்' சுட்டிக்காட்டிய ஜெ. மகள் சோபனா வேதவல்லியாக இருக்கும் என்கின்றனர் நம்மிடம் பேசிய ஆந்திர ஊடகத்தினர்.
மிரட்டல் புகார் -மீண்டும் ராஜா!
தனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாகவும் மிரட்டியவர்களை போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் புகார் தந்திருக்கிறார் ஜெ. தீபா. மிரட்டல் வருவது உண்மைதான் என்கிற அவரது கணவர் மாதவன், தனக்கும் தீபாவின் அமைப்புக்கும் தொடர்பில்லை என்கிறார். இதனிடையே, சமீபத்தில் தீபா வீட்டில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இருந்த ஆயில்ராஜா, தீபாவின் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் இயக்கத்தில் சேர்த்துள்ளார் தீபா. ஜெ. மரண மர்மத்தைவிட அதிக மர்மம் நிறைந்ததாக உள்ளது தீபா-ராஜா பிணக்கும் இணக்கமும்.