தமிழகத்தை அதிரவைத்தது இளம்பெண் சுவாதி படுகொலை. அது தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையிலேயே ‘மர்ம மரணம் அடைந்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டோம். சுவாதி படுகொலையைப்போன்றே ராம்குமாரின் மரணமும் மர்மமாகவே தொடர்ந்த நிலையில்... ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை அவனது பெற்றோருக்குக்கூட கொடுக்காமல் மறைத்து வைத்திருந்தனர் சம்பந்தப்பட்ட துறையினர். அதனைப் பெறுவதற்காக ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து முயற்சித்தோம். அதன் விளைவாக, நமக்கு பிரத்யேகமாக கிடைத்த ராம்குமாரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் அடிப்படையில், நக்கீரனில் ஏற்கனவே சொன்னதுபோல "ராம்குமார் தானாகவே மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டதற்கான தடயங்களைவிட.. மின்சாரம் வலிந்து பாய்ச்சப்பட்டதற்கான தடயங்களே உள்ளன'’என்று பேரதிர்ச்சியூட்டுகிறார்கள் பிரபல ஃபொரன்சிக் (தடயவியல்) டாக்டர்கள்.
ராம்குமாரின் போஸ்ட்மார்ட்டம் (Post Mortem) ரிப்போர்ட்டை படித்துப் பார்த்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் ஃபொரன்சிக் துறை ஹெச்.ஓ.டி.யும் பிரபல டாக்டருமான சம்பத்குமார் நம்மிடம், ""மின்சாரம் தாக்கி அதனால் ஏற்படும் மின்காயம் (JOUL BURN INJURY) என்றால் எண்ட்ரி ஊண்ட், எக்ஸிட் ஊண்ட் என்று இரண்டுவித காயங்கள் மட்டும்தான் இருக்கும். அதாவது, மின்சாரம் உடலில் புகுந்த காயம். மின்சாரம் உடலிலிருந்து வெளியேறிய காயம். ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலோ 12 இடங்களில் மின்காயங்கள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் தற்கொலை செய்த ராம்குமார் மின்சார வயரை பிடுங்கிப் பிடுங்கி 6 தடவையா தனது உடம்பில் மின்சாரத்தை பாய்ச்சிக்கொண்டார்? ஒருமுறை பாய்ந்தாலே மரணம் உறுதி என்ற நிலையில்... இப்படிப் பாய்ச்சிக்கொண்டு இறப்பதற்கு சாத்தியமே இல்லை.
விசாரணை அதிகாரியான திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தமிழ்ச்செல்வியின் விசாரணையில் சிறைவாசிகளான வெங்கடேசன், இளங்கோவன், சேட்டு என்கிற தொரபுதின், செல்லா என்கிற செல்வக்குமார், ராகுல், பாலாஜி, துளசிதாஸ், முதல்நிலை காவலர் பேச்சிமுத்து ஆகிய சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தில், ‘ராம்குமார் மின்சார வயரை கடித்தார்’ என்றுதான் உள்ளதே தவிர ‘அவர் வயரை தனது உடம்பில் சுற்றிக்கொண்டார்’என்று சொல்லவில்லை. அப்படியிருக்கும்போது மின்சார வயரைக் கடித்த இடத்தைத் தவிர மற்ற 10 இடங்களில் மின்சாரக்காயங்கள் எப்படி வந்தன? ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லும் ஸ்விட்ச் போர்டு வயர் நீண்டு தொங்குவதுபோன்ற புகைப்படம் சிறையிலிருந்து வெளியிட்டார்கள். வயரை உடம்பில் சுற்றிக்கொண்டாலும் அதனை கடித்த இடத்தில்தான் காயம் ஏற்பட்டிருக்கும்.
சாட்சிகளின் வாக்குமூலத்தின்படி ராம்குமார் மின்சார வயரை கடித்திருந்தால் பல்லின் ஈறு, நாக்கு, மேலுதடு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் பாய்ந்திருக்கவேண்டும். ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலோ கீழுதட்டின் உட்புறம் மட்டுமே 4 சென்டிமீட்டர் அகலமும் 1 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட காயம் இருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ராம்குமாரின் பிரேதபரிசோதனை செய்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தாவோ , ""போஸ்ட் மார்ட்டம் செய்ததில் கிடைத்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வைத்து ராம்குமார், ‘தானாக மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்டார்’ என்று குறிப்பிடவில்லை. மாறாக, சுற்றுப்புறச் சூழ்நிலை (circumcision evidence) மற்றும் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியின் ரிப்போர்ட்டை (inquest) வைத்துப்பார்க்கும்போது ராம்குமார் தானாக மின்சாரம் பாய்ச்சிக்கொண்டதாக’ நினைக்கிறேன்' என்று ரிப்போர்ட் கொடுத்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அவரால் தற்கொலை என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒரு டாக்டர் பிரேத பரிசோதனையில் கிடைத்த தடயங்களை வைத்துதான் கொலையா? தற்கொலையா என்ற முடிவுக்கு வரவேண்டுமே தவிர காவல்துறை, சாட்சிகள், விசாரணை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்டை வைத்து முடிவெடுக்கக்கூடாது.
மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி தனது விசாரணை அறிக்கையில் 'Electrocution which is suicidal in nature' என்று அதாவது, ‘தானாக மின்சாரம் பாய்ச்சி ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். எப்படி அப்படியொரு முடிவுக்கு (CONCLUSION) வந்தார் என்றுபார்த்தால், ‘கண்ணால் பார்த்த சாட்சிகள், டாக்டர்கள் பரிந்துரை, போஸ்ட்மார்ட்டம் சர்டிஃபிகேட்’ இந்த அடிப்படையில்தான் அப்படியொரு முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிரேதபரிசோதனை செய்த கேம்.எம்.சி. அரசு மருத்துவமனை ஃபொரன்சிக் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. பேராசிரியர் டாக்டர் செல்வக்குமார், ஸ்டேன்லி அரசு மருத்துவமனை ஃபொரன்சிக் டிபார்ட்மெண்ட் இணை பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியன், கே.எம்.சி. உதவிப் பேராசிரியர்களான டாக்டர்கள் வினோத், மணிகண்டராஜா உள்ளிட்ட தமிழக மருத்துவர்கள் யாருமே பிரேத பரிசோதனையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று அறிக்கை கொடுக்கவில்லை. டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் குப்தா மட்டுமே சுற்றுப்புறச்சூழல், மாஜிஸ்திரேட் விசாரணை அடிப்படையில் தற்கொலையாக இருக்கும் என்று நினைப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியோ சாட்சிகள், டாக்டர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் தற்கொலை என்கிறார்.
ஆக, இவர் சொன்ன அடிப்படையில் அவரும்... அவர் சொன்ன அடிப்படையில் இவரும் ‘ராம்குமார் தற்கொலை’ என்று முடிவு செய்திருக்கிறார்களே தவிர போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ராம்குமார் தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டதற்கான தடயங்களோ ஆதாரங்களோ இடம்பெறவில்லை. டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் குப்தா ஏற்கனவே, ஒரு பிரேத பரிசோதனையை ஒழுங்காக செய்யவில்லை என்று அதே எய்ம்ஸ் மருத்துவரால் குற்றஞ்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
சிறை டாக்டர்கள் நவீன்குமார், கார்த்திகேயன், மனநல மருத்துவர் ஜெயக்குமார், மனநல ஆலோசகர்கள் பொன்.ரமேஷ், விஜயக்குமார் உள்ளிட்ட மருத்துவர்களின் வாக்குமூலத்திலோ, ‘""ராம்குமார் சூஸைடு பண்ணிக்கிற அளவுக்கு இல்லை. அவரது, மனநிலை நன்றாகத்தான் இருந்தது''’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது, விசாரணை அதிகாரியான மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியின் கருத்துக்கு முரணாக உள்ளது.
ராம்குமாரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்துப்பார்க்கும்போது அவர் தற்கொலை செய்துகொள்ளவே இல்லை; கரண்ட் ஷாக் கொடுத்து கொலைதான் செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவருகிறது''’என்று ஷாக் கொடுக்கிறார் டாக்டர் சம்பத்குமார்.
நாம் கொடுத்த ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டையும் விசாரணை அறிக்கைகளையும் படித்துப் பார்த்த டாக்டர் வீ.புகழேந்தி, எழுப்பும் சந்தேகங்கள் ராம்குமார் மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்யப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
""ராம்குமாரின் நெஞ்சுப் பகுதியிலுள்ள மின்காயத்தில் ‘காப்பர்’ அளவு (0.0002167 %) அதிகமாக இருக்கிறது என்று விசாரணை அதிகாரி தமிழ்ச்செல்வி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மின்சாரம் பாய்ச்சப்பட்டால் மின்கம்பியிலிருந்து வெளிப்பட்ட காப்பர்’ உடலில் இருக்கத்தான் செய்யும். ஆனால், ராம்குமார் தனது உடலில் பாய்ச்சிக்கொண்டாரா? அல்லது வேறு யாராவது மின் கம்பியை பாய்ச்சினார்களா? என்பதுதான் பிரச்சனை. 12 இடங்களில் மின்காயங்கள் இருந்தால் நிச்சயம் தானாக மின்சாரத்தை பாய்ச்சிக்கொண்டதாக இருக்கமுடியாது. நெஞ்சுப்பகுதி போக மீதமுள்ள, 11 இடங்களில் காப்பரின் அளவை பரிசோதிக்காதது ஏன்? குறிப்பிடாதது ஏன்?
மேலும், ராம்குமார் கைகளால் சுவிட்ச் போர்டை உடைத்தார், மின்சார வயரிலேயே ஷாக் அடித்து நின்று கொண்டிருந்த ராம்குமாரை தலைமைக்காவலர் பேச்சிமுத்து லத்தியால் ஓங்கி அடித்துக்காப்பாற்றினார், ராம்குமார் கீழே விழுந்தார் என்று வாக்குமூலங்கள் உள்ளன. அப்படியெனில், சுவிட்ச் போர்டை உடைத்ததற்கான கையில் சிறுகாயமோ, லத்தியால் ஓங்கி அடித்ததற்கான சிறுகாயமோ, கீழே விழுந்ததற்கான சிறு காயமோ உடல்களில் இல்லாதிருப்பது எப்படி?
சுவாதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல், இரைப்பையிலுள்ள உணவு குறித்தெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் அதுகுறித்து முழுமையாக குறிப்பிடாதது ஏன்? ராம்குமார் இறந்தபிறகு ஏற்பட்ட மின்காயங்களா? இறப்பதற்கு முன் ஏற்பட்ட மின்காயங்களா? என்பதை துல்லியமாக அறிய ஹிஸ்டோபெத்தாலஜி என்கிற பரிசோதனை செய்யாதது ஏன்? இதையெல்லாம், விசாரிக்காமல் பிரேத பரிசோதனையில் தற்கொலைக்கான காரணங்களே இல்லாமல் தற்கொலை என்று விசாரணை அதிகாரி அறிக்கை கொடுத்தது ஏன்? ஏற்கனவே, இப்படித்தான் 2010-ல் திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் செந்தில்குமார் என்ற 33 வயது இளைஞர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் என்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கொடுத்துவிட்டார்கள். ஆனால், ஆர்.டி.ஓ. விசாரணையில் மூன்று காவலர்களால் லத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோலவே, இதிம் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்திருக்கலாம்'' என்கிறார் அதிரடியாக.
ராம்குமாரின் மர்ம மரணம் பற்றிய உண்மைகள் நீதிமன்றத்தின் மூலம் வெளிவந்தாலே சுவாதியின் படுகொலை உண்மைகளும் வெளிவரும்!
-மனோசௌந்தர்
பேசவிடாததன் மர்மம்!
ராம்குமாருக்காக தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர் ராமராஜன் ""கடைசிவரையில் காவல்துறை, ராம்குமாரை பேசவிடாமல் செய்ததன் மர்மம் இப்போதாவது தெரிகிறதா? இரண்டு வருடங்கள் ஆகியும்கூட பிரேத பரிசோதனையை பெற்றோருக்கு கொடுக்காமல் மறைத்துவைத்திருப்பதன் பின்னணி என்ன? ராம்குமார், சுவாதி இருவர் மரணத்தில் உண்மைகள் வெளிவரும்வரை தொடர்ந்து போராடுவேன்''’என்கிறார் உணர்ச்சிமயமாக.