மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது தினகரன் முகாம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, தினகரன் பக்கம் தாவியிருக்கிறார். சென்னையிலிருந்து மதுரை மற்றும் கன்னியாகுமரி சென்ற தினகரன், தன்னுடனேயே கள்ளக்குறிச்சி பிரபுவையும் அழைத்துச் சென்றார். தாவல் குறித்துப்பேசிய பிரபு, ""அ.தி.மு.க.வில் இருந்துகொண்டு எதையும் சாதிக்க முடியவில்லை. தொகுதி பிரச்சனைகளை முதல்வரிடம் சொன்னாலும் அவர் கண்டுகொள்வதில்லை. அ.தி.மு.க. கட்சியும் தமிழக மக்களும் தினகரன் பக்கம்தான் இருக்கிறார்கள். விரைவில் எல்லோரும் இங்கு வருவார்கள்'' என்கிறார்.

kalakuruchi-mla

தினகரனை சூழ்ந்திருக்கும் முக்கியஸ்தர்களிடம் நாம் விசாரித்தபோது, ""இ.பி.எஸ்.சுக்கும் ஓ.பி.எஸ்.சுக்குமிடையே இடைவெளி அதிகரித்து வருவதையறிந்து கடந்த 4 நாட்களாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார் தினகரன். எடப்பாடிக்கு "செக்' வைக்கும் விதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலரையும் தனது ஆதரவாளர்களாக மாற்றும் காரியத்தில் இறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ்.! எம்.எல்.ஏ.க்களோ, "எடப்பாடி மீது எங்களுக்கு வருத்தம் இருக்கிறது. அதற்காக உங்களை எப்படி நம்ப முடியும்?' என பதிலடி தந்திருக்கின்றனர் என்கிற தகவல் அ.தி.மு.க.வின் ஸ்லீப்பர் செல்களிடமிருந்து கிடைத்ததை பகிர்ந்துகொண்டார் தினகரன்.

Advertisment

இதனையடுத்து தினகரனிடம் மேலும் விசாரித்தபோது, ""பிரதமர் கொடுத்த வாக்குறுதிப்படி எடப்பாடி ஆட்சி ஒரு வருடம் முடியும் தறுவாயில், முதல்வர் பதவியை கைப்பற்ற ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகளுக்கு டெல்லி ஒத்துழைக்காததால் விரக்தி அதிகரித்தது. இப்படிப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.க்கள் பலரையும் தனது கஸ்டடிக்குள் கொண்டு வந்து எடப்பாடிக்கு "செக்' வைக்க விரும்பினார். அதற்கு எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைக்காததால் அவரது முயற்சி நிறைவேறவில்லை என எங்களுக்கு தகவல் கிடைக்க, இவர்களது மோதலை பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை நாங்கள் மீண்டும் துவக்கினோம்.

அதிருப்தியில் இருக்கிற எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரப்போகிறது. அப்போது, 6 மந்திரிகளைத் தவிர மற்ற அனைவருமே தினகரன் பக்கம் தாவப்போகிறார்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என தூண்டில் வீசினோம். ஆனால், தீர்ப்பு சாதகமாக வரட்டும்; அதன்பிறகு வெளிப்படையாக ஆதரிக்கிறோம் என்றே பலரும் சொன்னார்கள்.

இந்த நிலையில், இ.பி.எஸ்.சுக்கும், ஓ.பி.எஸ்.சுக்குமான மோதலை மீண்டும் ஒருமுறை தீர்த்துவைக்க மோடி முடிவெடுத்திருப்பதாக வரும் தகவலறிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனசு மாறிடுவார்களே என யோசித்தோம். அப்போது கிடைத்த ஐடியாதான் ஒரு எம்.எல்.ஏ.வையாவது உடனடியாக இழுத்துவிட வேண்டும் என்கிற யோசனை. அப்படி திட்டமிட்டதில் இழுக்கப்பட்டவர்தான் கள்ளக்குறிச்சி பிரபு. இனி தாவும் படலம் தொடர்ந்து நடக்கும். அதற்கான அசைன்மெண்ட் தீவிரப்படுத்தப்படுகிறது'' என்கின்றனர் தினகரனின் ஆதரவாளர்கள்.

Advertisment

cm- meet

""சம்பாதிக்க முடியாத துறைகளை வைத்திருக்கும் அமைச்சர்கள் சிலருக்கு, எடப்பாடியிடமே உள்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை என ஒன்றுக்கு மேற்பட்ட பசையுள்ள துறைகள் இருப்பதும், எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்களிடமே பவர்ஃபுல் துறைகள் இருப்பதும் அமைச்சர்கள் பலரின் கண்களை உறுத்துவதால், அமைச்சரவையை மாற்றியமையுங்கள் என அடிக்கடி வற்புறுத்துகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் எடப்பாடி அசைந்து கொடுக்காததால் அமைச்சர்களிடமும் அதிருப்தி அலையடிக்கத் துவங்கியிருக்கிறது. அதனால் அமைச்சர்கள் சிலரும் தினகரனை வெளிப்படையாக சந்திப்பார்கள்'' என்கிறது தினகரன் முகாம்.

இந்த நிலையில் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ""முதல்வர் மாற்றம்ங்கிறது இப்போது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. துணை முதல்வர்ங்கிற அந்தஸ்தைத்தாண்டி ஓ.பி.எஸ். அழுத்தம் கொடுத்தால் அது அவருக்குத்தான் சிக்கல். கள்ளக்குறிச்சி பிரபு போனதைப்பத்தி கவலையில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தாவியபோதே இவரும் போவார் என நாங்கள் யோசித்திருந்தோம். அதனால் அவரது தாவல் எங்களுக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. ஒருவேளை, முதல்வர் மாற்றமோ, ஆட்சிக் கவிழ்ப்போ நடக்கிற சூழல் உருவானால் சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கும் அதிரடி அஸ்திரத்தை எடப்பாடி எடுப்பாரே தவிர, தினகரனின் கனவு பலிக்க ஒருபோதும் விடமாட்டார். இதெல்லாம் எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டிருப்பதால் எடப்பாடி அரசுக்கு சிக்கல் கிடையாது'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதியைக் கேட்டு ராஜ்பவனை தொடர்ந்து அணுகி வருகிறது எடப்பாடி அரசு. தமிழகத்திற்கு மோடி வந்துவிட்டு சென்றதற்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்வதில் ஒரு முடிவு காணப்படும் என்கிறது ராஜ்பவன் வட்டாரம். அதேசமயம், சட்டமன்ற பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால், எடப்பாடிக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் ஒரு எம்.எல்.ஏ., எடப்பாடி தரப்பிலிருந்து தினகரன் பக்கம் தாவியிருப்பதால் எடப்பாடியின் பலம் 110 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபித்துவிட்டுத்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்ய எடப்பாடி அரசுக்கு அனுமதி தர வேண்டும் என கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

-இரா.இளையசெல்வன்