ஜெ.வின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைப் பற்றி விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் நடக்கும் நிகழ்வுகள் சசிகலாவிற்கும் அப்பல்லோ மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் ரெட்டிக்கும் இடையே கடுமையான மோதலை உருவாக்கியிருக்கிறது. இந்த மோதலை எடப்பாடி அணியினரும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
சமீபத்தில் பூங்குன்றன் கொடுத்த 33 சாட்சிகள் பட்டியலில் இருந்த போயஸ் கார்டன் வேலையாட்கள் ஒருவிதமாக சாட்சியம் அளித்தார்கள். போயஸ் கார்டன் வேலைக்காரி ராஜம், டிரைவர் கண்ணன், ஐயப்பன் என ஒவ்வொருவரும் ""நான் ஜெ.வைப் பார்த்தேன். அவரும் பார்த்தார். அப்பொழுது ஜெ. நல்ல நிலையில் இருந்தார்'' என கிளிப்பிள்ளைக்கு சொன்னபடி சொன்னார்கள். இறுதியாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்த சசிகலா, ""ஜெ.வை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். ஓ.பி.எஸ். உட்பட அமைச்சர்கள் மிக தொலைவிலிருந்து பார்த்தனர். டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜெ.விடம் பேசினார்'' என சொன்னார்.
"இதுபோல ஆளாளுக்கு ஐந்து பேர் ஜெ.வை பார்த்ததாகச் சொல்கிறார்களே. ஜெ. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் எதுவும் இல்லையா?' என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியை பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த ரெட்டி ""ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்திருந்த அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் அவர்கள் அணைக்கச் சொல்லிவிட்டார்கள்'' என்றார்.
" "அவர்கள்' சி.சி.டி.வி.யை அணைக்கச் சொன்னார்கள்' என ரெட்டி சொன்னது சசிகலாவை கோபப்படுத்தியது. உடனே ரெட்டிக்கு தினகரன் மூலம் பதில் அளித்தார் சசி. ""நாங்கள் ஜெ. சிகிச்சை பெறும்போது அப்பல்லோ மருத்துவமனையில் சி.சி.டி.வி. கேமராக்களை அணைக்க உத்தரவிடவில்லை'' என்றார் தினகரன்.
இரு தரப்பில் யார் சொல்வது உண்மை என்கிற விவாதத்தை உருவாக்கிவிட்டது. ஓ.பி.எஸ். உட்பட அனைவரும் ஜெ.வை பார்த்ததும், ஜெ.வின் செக்யூரிட்டி, அதிகாரிகள் அவரிடம் பேசியதும் உண்மை என்றால் அந்தக் காட்சிகள் அப்பல்லோ மருத்துவமனையின் சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கியிருந்தால் அதில் பதிவாகியிருக்கும். அந்த சி.சி.டி.வி. இயங்காததைப் பற்றியோ ஜெ.விடம் பேசியவர்கள் பற்றிய பதிவுகள் சி.சி.டி.வி.யில் இல்லாததைப் பற்றியோ சசிகலா ஏன் வாயை திறக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்.
அதற்கு பதிலளிக்கும் சசிகலா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், ""ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது சி.சி.டி.வி.யை சசிகலாதான் நிறுத்தச் சொன்னார். ஒருவேளை ஜெ.வின் சிகிச்சையில் நிலவும் மர்மம் அப்பல்லோவின் சி.சி.டி.வி. புட்டேஜ் மூலமாக வெளியே தெரிந்துவிடும் என்பதற்கான முன்னேற்பாடு அது. ஆனால் ஜெ. சிகிச்சை பெற்றது முதல் அவருக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்தப்படுவது வரை பல வீடியோக்களை சசிகலாவும் இளவரசியும் தங்களது விலை உயர்ந்த செல்போன்களில் எடுத்து வைத்திருக்கிறார்கள். இன்று அப்பல்லோவின் உரிமையாளர் ரெட்டி பேசுவதுபோல சசிகலாவை குற்றம் சாட்டி யாராவது பேசுவார்களேயானால் சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வரிசையில் வெளியிடப்படும். இதுவரை வெளிவராத அந்த புதிய வீடியோக்களில், ஜெ. பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள், ஜெ.வின் உடல் அசைவுகள் என பல, இடம் பெற்றிருக்கும்'' என்கிறார்கள். அந்த வீடியோக்களை சசிகலா ரெடி பண்ணும்படி உறவுகளிடம் கூறியிருக்கிறாராம்.
இதற்கிடையே சசியின் பிரமாண வாக்குமூலம் எடப்பாடியை டென்ஷனாக்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணையத்தை தொடர்பு கொண்டு "சசிகலாவின் பிரமாண வாக்குமூலம் பற்றிய தகவல்கள் எப்படி மீடியாக்களுக்கு சென்றது' என விசாரித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஆணைய அலுவலர் கோமளா, ""மீடியாக்களில் சசிகலாவின் வாக்குமூலம் என வந்த செய்திகளில் பல கற்பனை கலந்த தகவல்கள். அந்த தகவல்களுக்கும் பிரமாண வாக்குமூலத்திற்கும் தொடர்பு இல்லை. பிரமாண வாக்குமூலத்தில் அளித்த தகவல்கள் எப்படி மீடியாக்களில் வெளியானது என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் ஆணையம் விசாரிக்கும்'' என பதிலளித்துள்ளார்.
ஆணையத்துக்கு தனது வாக்குமூலத்தை சமர்ப்பித்துள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ""2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது சசிகலா. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கையாண்டது சசிகலா. சசிகலாதான் ஆல் இன் ஆல். ஜெ. டம்மி'' என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜெ. சிகிச்சையின் போது, திராட்சை சாப்பிட்டார். இருமல் வந்தது. அதன்பிறகு இட்லி சாப்பிட்டார். ஐஸ்கிரீம் சாப்பிட்டார் என குறிப்பிட்டுள்ளார். அதிக அளவு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜெ.வுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அப்பல்லோ எப்படி அனுமதித்தது என டாக்டர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழ, ""எல்லாம் பொய்'' என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்.
""ஓயாத ஜெ. சிகிச்சை சர்ச்சையால், அப்பல்லோ உரிமையாளர் ரெட்டிக்கு டென்ஷனில் மாரடைப்பே வந்துவிட்டது. மாரடைப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று அவர் அப்பல்லோவின் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே எடப்பாடி அரசு விசாரணையில் குறுக்கிடுவதை தடுக்க ஜெ.வுக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள் குழுவில் இடம் பெற்ற டாக்டர் கோபால் உட்பட ஏழுபேரை வருகிற 28-ம் தேதி ஆணையத்தில் குறுக்கு விசாரணை செய்ய சசியின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் திட்டமிட்டுள்ளார்'' என்கிறார்கள் சசி தரப்பைச் சேர்ந்தவர்கள்.
சசிக்கும் எடப்பாடிக்குமான மோதலாக இருந்த விசாரணைக் கமிஷன் தற்பொழுது அப்பல்லோவுடன் சேர்ந்து முக்கோண மோதலாக மாறியுள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்