""எனது தந்தையின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நானும் எனது சகோதரியும் மன்னித்துவிட்டோம்'' என ராகுல்காந்தி கூறியிருப்பது அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தி அமைதியாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிப்பட்டிருக்கும் ஒரே ஒரு கருத்தின் மூலம் மனித நேயம் மிக்கவராக போற்றப்படுகிறார் ராகுல்காந்தி.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் ஆகிய ஏழு பேரும், கால் நூற்றாண்டுக்குப் பிறகும் சிறைவாசிகளாக இருப்பதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்காக, பல்வேறு சட்டப்போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர்.

raghul

இந்தச்சூழலில்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, கடந்த 11-ந்தேதி சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். கல்லூரியின் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வில் கலந்துகொண்டார். அதில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ராகுலிடம், ""உங்கள் தந்தையின் மரணத்தை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்? கொலையாளிகள் மீது உங்கள் கரிசனம் என்ன?'' என்கிற கேள்வி எழுந்த நிலையில் ஒரு நிமிடம் மௌனமானார்.

Advertisment

பிறகு, ""மனித வெடிகுண்டு மூலம் என் தந்தை கொல்லப்பட்டதை அறிந்து நானும் என் சகோதரி பிரியங்காவும் வேதனை அடைந்தோம். அதிலிருந்து மீள நீண்ட காலமானது. கொலையாளிகள் மீது பல ஆண்டுகள் எங்களுக்கு கோபம் இருந்தது. ஆனால், இப்போது அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம். எனது பாட்டியும் தந்தையும் இறக்கப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனது தந்தையின் இறப்புக்குப் பிறகு எனது வாழும் சூழலே மாறிவிட்டது. 24 மணி நேரமும் பாதுகாவலர்களுடனே இருக்க வேண்டியதிருக்கிறது''’ என ராஜீவ் மரணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்தார் ராகுல்காந்தி.

ராகுலின் இந்த மனமாற்றம் தேசியஅளவில் பரபரப்பாக எதிரொலிக்க, திமுக, மதிமுக, தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகள் வரவேற்றிருக்கின்றன. ராஜீவ் கொலை வழக்கினை விசாரித்த புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளும், ‘""ராகுலின் மனமாற்றம் போற்றுதலுக்குரியது. அவரின் மனிதநேயம் இதில் வெளிப்படுகிறது'' என்கிறார்கள். பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் மட்டும் ராகுலின் மனமாற்றத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.

perarivalan

Advertisment

காங்கிரஸ் தலைவர்கள் இதனை எப்படி பார்க்கிறார்கள் என தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்சிடம் பேசியபோது, ""ராஜீவ்காந்தியின் மரணம் காங்கிரஸுக்கு பெரிய இழப்பு. ராஜீவின் மரணம் ஏற்படுத்திய வேதனைகளையும் வலிகளையும் அவரது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் முழுமையாக உணர்ந்திருக்க முடியாது. அந்த வகையில் தங்களுக்கு ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்திய ராகுல், கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக சொல்லியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. தியாகம் செய்வதற்கும் தியாகத்தால் ஏற்பட்ட இழப்புகளை தாங்கிக்கொள்வதற்கும் ஒரு வலிமை வேண்டும். அந்த வலிமையை ராகுல் பெற்றிருக்கிறார். அவருடைய கருத்துதான் காங்கிரஸின் கருத்தும்!'' என்கிறார் அழுத்தமாக.

ராகுல்காந்தியிடம் ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் மனமாற்றத்தால் ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழுவரின் விடுதலைக்கு ராஜீவ் குடும்பம் ஒப்புக்கொள்ளுமா? அவர்களின் விடுதலை சாத்தியமாகுமா? என்கிற விவாதம் அரசியல் கட்சிகளிடத்திலும், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகளிடமும் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

arputhammalஇந்தச் சூழலில், இதன் நீள அகலங்களை அறிந்த பல்வேறு சட்ட நிபுணர்களிடமும் மத்திய அரசின் அதிகாரிகள் தரப்பிலும் விவாதித்தோம். ராஜீவ் கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனையும், மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருந்தது உச்சநீதிமன்றம். சோனியாகாந்தியின் மன்னிப்பால் நளினிக்கும், கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் நீண்ட காலதாமதத்தை குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்டதை காரணமாக வைத்து நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வின் தீர்ப்பினால் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதேசமயம், நீண்ட காலம் சிறையில் கழித்துவிட்டதால் இவர்களது விடுதலையை "உரிய' அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது சதாசிவம் தலைமையிலான அமர்வு.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்பு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதால் எழுவரின் விடுதலை அப்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ராஜீவ் படுகொலைக்காக இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை ஒட்டுமொத்தமாக 2009-ல் ஒழித்துக்கட்டிவிட்டதில் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு திருப்தியடைந்திருந்த நிலையில் ஈழப் படுகொலை காங்கிரஸுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தமிழகத்தில் 2014 தேர்தலில் எதிராக இருப்பதை உளவுத்துறையின் மூலம் அறிந்த காங்கிரஸ் மேலிடம், ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற ஆலோசித்தது. அதன் வெளிப்பாடுதான் சதாசிவம் அமர்வின் தீர்ப்பு.

காங்கிரஸின் இந்த அரசியல் தந்திரத்தை டெல்லி சோர்ஸ் மூலம் அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ""ராஜீவ் கொலை வழக்கிலுள்ள ஏழுபேரையும் விடுதலை செய்ய எமது அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறோம். மூன்று நாளில் உரிய பதிலை சொல்லாது போனால் மாநில அரசே அவர்களை விடுதலை செய்யும்'' என சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவிக்க, நாடு முழுவதும் பரபரப்பானது.

ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டால் அது தன்னால்தான் நடந்தது என அரசியல் செய்வதும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறிடக்கூடாதென்பதுவுமே ஜெ.வின் நோக்கமாக இருந்தது. மத்திய காங்கிரஸ் அரசு முடிவெடுப்பதற்கு முன்பு ஜெயலலிதா முந்திக்கொண்டதால் சட்ட அதிகாரத்தைச் சுட்டிக்காட்டி விடுதலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது காங்கிரஸ்.

peteralbonesகுற்றவாளிகளுக்கு தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய மாநில அரசுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் 435-ஐ தவிர, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161-ன் படியும் அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தின்படி, மாநில அமைச்சரவையைக்கூட்டி அதன் ஒப்புதலைப்பெற்று கவர்னருக்கு அதனை அனுப்பி வைத்து விடுதலை செய்ய முடியும். 161-வது பிரிவின் படி மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தில் உச்சநீதிமன்றம்கூட இதுவரை தலையிட்டது கிடையாது. அந்த வகையில், 161-ஐ பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு 435-ஐ பயன்படுத்தி விடுதலை ஆகாமல் பார்த்துக்கொண்டார் ஜெயலலிதா.

தற்போதும் அதேபோன்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள். இது குறித்து நாம் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்திருக்கிறது மோடியின் மத்திய அரசு. வாக்கு வங்கி அரசியல், இன உணர்வு அரசியல், சாதி அரசியல் என பின்னிப்பிணைந்திருக்கும் தமிழகத்தில் எந்த அரசியலை மையப்படுத்துவது என சமீபத்தில் ஒரு ஆலோசனை நடத்தியது பா.ஜ.க. தலைமை. தமிழர்களின் ஆதரவை உணர்வு ரீதியாக பெற முடியும் என ஒரு கருத்து அதில் விவாதிக்கப்பட்ட போதுதான், ஏழு பேரின் விடுதலை நினைவுக்கு வந்தது. அவர்களது விடுதலை தொடர்பான சட்டச்சிக்கல்களை ஆராய்ந்தனர். அப்போதுதான் மாநில அரசுக்கும் கவர்னருக்குமான 161-வது பிரிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

சி.பி.ஐ. தொடர்பான வழக்காக இருந்தாலும் மாநில அரசையும் கவர்னரையும் உள்ளடக்கி 161-வது பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முடியும் என்பதில் சட்ட முரண்பாடுகள் வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் உணர்ந்தனர். தற்போது மத்திய அரசு சொல் கேட்டு செயல்படக்கூடியதாக எடப்பாடி அரசு இருப்பதால், தேர்தல் நேரத்தில் இவர்களை விடுதலை செய்து தமிழர்களின் ஆதரவை பெறுவதற்காக திட்டமிட்டிருந்தது மோடி அரசு. அதனை முன்கூட்டி அறிந்து வைத்திருக்கும் ராகுல்காந்தி, ஏழு பேரின் விடுதலையில் தனது உணர்வும் முடிவும் இருப்பதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் அமைந்த நிலையில் மனம் திறந்துள்ளார். ராகுலின் இந்த சிக்னலை பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை. அதனால் ராகுலின் மனமாற்றத்தை எதிர்க்கின்றனர்!'' என சுட்டிக்காட்டுகிறார்கள். இதன் வெளிப்பாடுதான், ராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி தவறான வாக்குமூலத்தை பதிவு செய்ததாக கூறியதை வைத்து தனக்கு விடுதலை வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் போட்டிருந்த வழக்கில், சி.பி.ஐ.தரப்பில் கடும் எதிர்ப்புக்காட்டப்பட்டது. எனினும், 7 பேர் விடுதலையை உரிய சட்ட நடவடிக்கைகளால் விரைவுபடுத்தலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

ராகுலின் மனமாற்றம் குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள், ""காலம் கடந்த மனமாற்றம் என்றாலும் ராகுலின் பேச்சு மகிழ்ச்சியைத்தருகிறது. நளினியை பிரியங்கா சந்தித்துவிட்டுப்போன சமயத்திலேயே ராகுல்காந்தி இதனை தெரிவித்திருந்தால் இந்நேரம் விடுதலை கிடைத்திருக்கும். ஆனாலும் தற்போதைய ராகுலின் பேச்சால் விடுதலை கிடைக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கிறது!'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.

-இரா.இளையசெல்வன்