சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ள, திருப்போரூர் கந்தசாமி கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் முருகப்பெருமானின் விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மாசி மாத பிரம்மோற்சவ விழாவை இந்த ஆண்டும் கொண்டாட பக்தர்கள் தயாராகி வந்தனர்.
இக்கோயிலின் தேரோட் டம் நான்கு மாட வீதிகளில் வெகுவிமர்சையாக நடக்கும். பின்னர் உற்சவர் சிலை, பரிவேட்டை எனப்படும் நிகழ்ச்சிக்கு திருப்போரூர் கந்த சாமி கோயிலிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, ஆலத்தூர் கிராமத்திற்கு சென்று அங்கு பரிவேட்டை முடித்துவிட்டு, தண்டலம் பாரதி நகர், செங்கல்பட்டு சாலை, அய்யம்பேட்டை சாலை, சான்றோர் வீதி, ஓ.எம்.ஆர். சாலை வழியாக ஊர்வலம் வரும். ஆனால் பட்டியலின மக்கள் வாழும் படவேட்டம்மன் கோவில் பகுதிக்கு மட்டும் செல்லாது. தலித்கள் அல்லாத மற்ற மக்கள் வாழும் பகுதி களுக்கு சென்று, மீண்டும் திருப்போரூர் கந்தசாமி கோயிலைச் சென்றடையும்.
படவேட்டம்மன் கோவில் பகுதி பட்டியலின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, படவேட்டம்மன் கோவில் வழியாகவும் உற்சவர் சென்றால் அப்பகுதி மக்களும் வழிபாடு செய்வார்கள் என்ற கோரிக்கை, இம்முறை வலுத்தது. அப்பகுதி மக்கள் சார்பாக சமூக ஆர்வலர் விநாயகமூர்த்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடமும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமும் மனு செய்திருந்தார். அதன்படி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தலித் அல்லாதோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்,
அதேபோல இக்கோயிலின் சாமி சிலைகளை காலங்காலமாக தூக்கிவரும், கோடிகள் எனப்படும் ஸ்ரீபாதம்தாங்கிகள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் இப்பிரச்சனை சாதிரீதியில் உருவெடுக்கும் என்பதால், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி காவல் ஆணையர் ஜெகதீசன், இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் லட்சுமிகாந்த பாரதி தாசன் ஆகியோர் தலைமையில் மீண்டும் ஒரு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
ஊர் பொதுமக்களில் பெரும்பான்மையினர் இதற்கு ஒத்துக்கொண்டாலும், ஸ்ரீபாதம் தாங்கிகள் எனப்படும் கோடிகள் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதை காரணம் காட்டி சமீபத்தில் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடத்தப்பட்ட இலவச திருமண விழாவில் முதல்வர் படம் வைத்ததற்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீண் பிரச்சனையும் சர்ச்சையும் ஏற்படுத்தினர்.
இதனால் அதிகாரிகள் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை தள்ளிப் போடப்பட்டு, "தற்போது மடாதிபதி நியமனம் செய்யப்படவில்லை, அப்படி நியமனம் செய்த பின்பு இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம்' என்று தட்டிக்கழித்தனர். ஆனால் ஸ்ரீபாதம் தாங்கிகள் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதியரசர் சதீஷ், "சாட்டிலைட் காலத்தில் தாழ்த்தப்பட்டோர், உயர்த்தப்பட்டோர் என்ற சாதித் தீண்டாமை எதற்கு? எல்லா தெருக்களுக்கும் செல்வதைப்போல படவேட்டம்மன் கோவில் வழியாகவும் தேர் செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டார். எதிர்த்தரப்பில் கோவிலி-ருந்து ஆலத்தூர் கிராமத்திற்கு பரிவேட்டை சென்றுவிட்டு சாமி வேறெங்கும் செல்லாமல் நேரடியாகவே மீண்டும் கோவிலுக்கு வந்துசேர்வதே மரபு என்று வாதிட்டனர்.
இறுதியில் நீதிபதி, "கடவுள் அனைவருக்கும் சமம்! எல்லாத்தரப்பு மக்களும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. படவேட்டம்மன் கோவில் வழியாகவும் உற்சவர் செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டார். இருந்தும் மாவட்ட அமைச்சரான தா.மோ. அன்பரசனை சந்தித்து, சிலர் இதைத் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். அதன்பேரில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி படவேட்டம்மன் கோவில் வழியாக உற்சவர் ஊர்வலம் சென்றது. அப்பகுதி மக்கள் 51 தட்டு சீர்வரிசை வைத்து தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.