"முதல்வர் மீதான ஊழல் புகார்களை நாங்கள் சரியாக விசாரிக்கிறோம்' என்கிறது அவரது கண்ட்ரோலில் உள்ள "டி.வி.ஏ.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை. இந்நிலையில்... ""ஊழலைத் தடுக்கவேண்டிய எங்களது துறையிலேயே நடக்கும் ஊழல் மோசடி குறித்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நக்கீரன்தான் அம்பலப்படுத்தணும்''’என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து குமுறுகிறார் அதே துறையில் 25 வருடங்களாக பணியாற்றிக்கொண்டிருக்கும் பெண் அலுவலர்.
புகார் தந்தவரான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தில் (Directorate of Vigilance and Anti#Corruption) நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் எலிசபெத் ஷீபாலினிடம் நாம் பேசியபோது... “""அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பெட்ரோல், டீசல் போட்டால் அதற்கான காரணத்தை அரசுக்கு தெரிவித்து டி.வி.ஏ.சி. இயக்குநர் அல்லது இணை/துணை இயக்குநர்கள் மூலமாக அரசிடம் ஒப்புதலுக்கு (Ratification proposal) அனுப்பி அரசின் பின்னேற்பாணை பெற வேண்டும். அந்த ப்ரபோசல் அரசால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் எக்ஸ்ட்ரா கோட்டா (கூடுதல்) பெட்ரோல், டீசலுக்கான தொகையை அரசின் நிதிக்கணக்கில் செலுத்தவேண்டும். அனைத்து அரசுத் துறைகளிலும் இதுதான் நிலைமை. ஆனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளோ இந்த எக்ஸ்ட்ரா கோட்டா’பெட்ரோல், டீசல் தொகையை அரசுக்கு கட்டுவதும் இல்லை; அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பி, ஒப்புதல் ஆணையை பெறுவதும் இல்லை. இவர்களே ஒரு படிவத்தில் எழுதி இவர்களே ஏற்றுக்கொண்டதுபோல் விஜிலென்ஸ் ஆபீஸிலேயே வைத்துக் கொள்வார்கள். இதுபோக பல முறைகேடுகள் உள்ளன. இதுகுறித்து, நான் கேள்வி எழுப்பியதால்தான் எனது நிர்வாக அதிகாரியாக இருந்த சாரதா மூலம் எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து, கண்காணிப்பாளராக வரக்கூடிய எனது பதவிஉயர்வையே தடுத்துவிட்டார்கள்''’என்று குற்றம்சாட்டியவரிடம்...
""இதையெல்லாம் காரணம்காட்டி பதவி உயர்வைத் தடுக்க முடியுமா?''’என்று நாம் கேள்வி எழுப்பியபோது, ""2006-ஆம் ஆண்டு ஒரிஜினல் சீனியாரிட்டியை விட்டுக்கொடுக்கிறேன் என்று தவறுதலாக கடிதம் கொடுத்துவிட்டு, பிறகு அதை மறுத்து கடிதமும் கொடுத்துவிட்டேன். ஆனால், என் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் உயரதிகாரிகளின் தூண்டுதலால் நான் முதலில் கொடுத்த கடிதத்தைவைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இடையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருந்த என்னை மீண்டும் உதவியாளராக பணியிறக்கம் செய்துவிட்டார்கள்.
அதோடு, என்னுடைய நீதிமன்ற வழக்கு ஃபைல் காணாமல் போய்விட்டதாக கூறி, 2014 ஜூன் 17-ந் தேதியிலிருந்த ஆணையையும், அலுவலக குறிப்பு எனப்படும் ஆபீஸ் நோட்டையும், மோசடியாக மாற்றி புதிய ஃபைல் தயாரித்துவிட்டார்கள். இதனால், எனக்கு சீனியாரிட்டி இருந்தும் என்னைவிட ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிவிட்டனர்.
இதுகுறித்து, 2018 ஏப்ரல் மாதம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் மோகன் பியாரே (விஜிலென்ஸ் கமிஷனர்) உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்துவிட்டேன். என்னை அழைத்துப் பேசி, வழக்கறிஞர் குழு பரிந்துரை பெற்று பதவி உயர்வு தந்திருக்க வேண்டும். இந்த வருடமும் சீனியாரிட்டி பட்டியலில் என் பெயரை சேர்க்காமல் என்னை விட 15 வருட ஜூனியர்களின் பெயர்களைச் சேர்த்து ஆணை வெளியிட்டுவிட்டார்கள்'' என்கிறார்.
இதுகுறித்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் உயரதிகாரியிடம் கேட்டபோது... "பெயர் வேண்டாம்' என்று தவிர்த்தவர், ""எலிசபெத் ஷீபாலினின் பதவி உயர்வில் அவருக்கு வேண்டாத சிலர், அவருக்கு எதிரான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவருகிறது. அதனால், அவரது பதவி உயர்வு குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வோம். அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசலில் நடக்கும் மோசடிகள் குறித்து அவர் சொல்லும் புகார்கள் உண்மையா? பொய்யா? என்று விசாரித்து நடவடிக்கை எடுப்போம்''’என்றார்.
இத்தகைய சூழலில்தான், "முதல்வர் மீதான ஊழலையே நியாயமாக விசாரிப்போம்' என்கிறது டி.வி.ஏ.சி.
-மனோசௌந்தர்