நாடு முழுவது முள்ள மக்களில் வீடு கட்ட வசதியில்லாத, முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு சொந்த வீடு வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் ஒன்றிய அரசின் அனை வருக்கும் வீடு திட்டம். கிராமப்புற வீட்டு வசதிப் பற்றாக்குறையை தீர்ப்ப துடன், ஏழைகளுக்குத் தரமான வீட்டு வசதியை தருவதே இந்த பிரதான் மந்திரி திட்டத்தின் அம்சமாகும்.
இந்தத் திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது. நகர்ப்புறம், கிராமப் புறம் என்று 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 வருடங்களில் இதுவரை மொத்தம் 3.04 கோடி வீடுகள் கிராமப்புற மக்களுக்காக கட்டித்தரப்பட்டுள்ளன. இதில், 75 சதவிகிதம் பட்டியலின, பழங்குடி, சிறுபான்மை சமுதாயத்தினருடையது. அதேபோல் இந்தத் திட்டத்தில் பயனடைய அவரவர்களின் வருமானத்திற்கேற்ப மானிய அளவு மாறுபடுகிறது. கடனை திருப்பிச் செலுத்தவும் 20 வருடங்களுக்கு அவகாசம் தரப்படுகிறது.
ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடையலாம். இந்தத் திட்டம் முழுமையாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம். ஆனால் இந்தத் திட்டத்தில் தேசம் முழு வதும் ஊழல் நடந்துள்ளது. தமிழகமும் அதில் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை, திட்டத்திற்காக பயனாளிகளிடமிருந்து பெறவேண்டிய ஆவணங் கள் அனைத்தையும் போலியாக தயார் செய்து, போலியாக பயனாளிகளின் விவரங்களைக் கொடுத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததாகக் கணக்கு காட்டி பல கோடிகளை அரசு அதிகாரிகள் கும்பல் சுருட்டியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி ஒன்றியத்தில் மருதூர் ஊராட்சியில் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடையாதவர்கள் பெயரிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பயனாளிகளாகக் காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாகக் காட்டியும், நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கணக்கு காட்டியுள்ளனர்.
இந்த ஒரு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இப்படி போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளார்கள். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள், "பெயரளவில் விசாரணை யை நடத்தி வழக்கில் தொடர் பில்லாதவர்கள், கடைநிலை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகளைத் திருப்பிவிடாமல் உரிய கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்'' என்று எச்சரித் துள்ளனர்.
இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரிக்கவும் நீதி மன்றம் உத்தரவிடும் என்று கூறியதை யடுத்து, கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினர், 10 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 2019-ல் இருந்து 2022 வரை அந்த பகுதியில் ஏற்கனவே பணியாற்றி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், தற்போது பணியாற்றி வரும் அதிகாரிகள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது பல்வேறு ஒன்றியங்களில் பணியாற்றிவரும் துறையூர் ஓவர்சியர் வெங்கடேஷ்குமார், முன்னாள் தொழில்நுட்ப உதவியாளர் கிளின்டன், தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், புள்ளம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மண்ணச்சநல்லூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், புள்ளம்பாடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ், அந்தநல்லூர் காளிதாஸ், இளநிலைப் பொறியாளர்கள் ரங்கநாதன், பரணிதர், இவர்களுக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்துதல், கூட்டுச் சதி, ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் லால்குடி பி.டி.ஓ. ரவிக்குத்தான் கையெழுத்துப் போட்டு நிதி எடுக்கும் அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி பணத்தை எடுத்து கையாடல் செய்துள்ளார்.
இதேபோன்று தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு மற்ற மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள ஊழல்கள் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாகவும், அதில் அரசு அதிகாரிகளின் தொடர்பு குறித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பதற் காக அவரை இரண்டு முறை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.