சேலம் மாவட்ட நூலகத்துறைக்கு செலுத்த வேண்டிய நூலக வரி, 17.30 கோடி ரூபாயை செலுத்தாமல் வேறு செலவினங்களுக்கு மடைமாற்றம் செய்து ஏப்பம் விட்டுள்ளது சேலம் மாநகராட்சி.
சேலம் குமாரசாமிப் பட்டியில் மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்டம் முழுவதும் 49 கிளை நூலகங்கள், 16 முழு நேர கிளை நூலகங்கள், 78 ஊர்ப்புற நூலகங்கள், 40 பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட மைய நூலகத்தில் அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், சட்டம், சிறுவர்களுக்கான நூல் எனப் பல்வேறு தலைப்புகளில் 1.50 லட்சம் புத்தகங்கள் உள்ளன. நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட வாசகர்கள், போட்டித்தேர் வுக்கு படிக்கும் இளைஞர்கள் இந்த நூலகத்திற்கு வந்து செல் கின்றனர்.
மைய நூலகப் பராமரிப்பு மட்டுமின்றி இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்ப்புற மற்றும் பகுதிநேர நூலகங்களின் மின் கட்டணம், கட்டட வாடகை, பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் நூலக வரி வருவாயிலிருந்தே மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. நூலக வளர்ச்சிக்கென உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வகை வரி வருவாயிலிருந்து, 10 சதவீதம் தொகையை, நூலகத்துறைக்கு நூலக வரியாக செலுத்த வேண்டும். ஆனால், சேலம் மாநகராட்சியோ, மாவட்ட மைய நூலகத்திற்கு 17.30 கோடி ரூபாய் செலுத்தவில்லையெனக் கூறப்படுகிறது. இந்த வரி பாக்கியால் மாவட்ட மைய நூலகம் திணறி வருகிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட அமைப்பாளர் சொல்லரசு கூறுகையில், "மாவட்ட மைய நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு போதிய குடிநீர் வசதி, மின் விளக்கு, மின் விசிறி வசதிகள்கூட இல்லாத அவல நிலையில்தான் இந்த நூலகம் இயங்கி வருகிறது. தினமும் 400க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த நூலகத்திற்கு இந்த ஒரே ஒரு கழிப்பறை மட்டும் போதாது. செப்டிக் டேங்க் நிரம்பியதால், கழிப்பறை தண்ணீர் வெளியிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கூடுதல் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும். நூலக வளாகத்துக்கான சாலையைப் புதுப்பிக்க வேண்டும். சேலம் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட மைய நூலகத்திற்கு 17 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தினால், நூலக வளர்ச்சிக்கு பயன்படும்'' என்கிறார்.
போட்டித் தேர்வுக்காகப் படித்துவரும் பட்டதாரி இளைஞர் கோகுல்விஜய் கூறுகையில், "டி.என்.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நூல்களைப் படிப்பதற்காக ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் இங்கு வருகின்றனர். இங்கு போதுமான இருக்கைகள் இல்லாததால் சிறிது நேரத்திலேயே நூலகத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர். கழிப்பறைகள், சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாததால் கொசுத்தொல்லை, பாம்பு நடமாட்டம் உள்ளது. தமிழக அரசும் பிற துறைகளில் முதலீடு செய்வதைப் போல் நூலகத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட வேண்டும். தொலைதூர இடங்களிலிருந்தும் போட்டித்தேர்வுக்கான நூல்களைப் படிக்க வருகின்றனர். ஒரே நேரத்தில் 500 பேர் படிக்கும் வகையில் இருக்கைகள் வேண்டும்,'' என்றார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெகநாதன் கூறுகையில், "பல மைல் தூரத்தில் இருந்தெல்லாம் போட்டித் தேர்வுக்காக இளைஞர்கள் படிக்க வருகின்றனர். அவர்கள் அமர்ந்து சாப்பிட அறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிடைக்க வேண்டிய வரி பாக்கி தாமதமின்றி கிடைத்தால், இந்த வசதிகளை செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்,'' என்றார். சேலம் மாநகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி, ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கண சாலை ஆகிய 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் தரப்பில் இருந்தும் 5 கோடி ரூபாய் நூலக வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
சேலம் மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மொத் தம் 22.30 கோடி ரூபாய் மாவட்ட மைய நூலகத் துறைக்கு வர வேண்டியுள்ள தாக கூறுகின்றனர் வாசகர் வட்ட நிர்வாகிகள்.
நூலக வரி பாக்கியை உடனடியாக செலுத்தும்படியும், குடிநீர் இணைப்பு கேட்டும் பலமுறை மைய நூலகம் தரப்பில் சேலம் மாநக ராட்சி நிர்வாகத்திற்கு துறை ரீதியாக கடிதம் எழுதப் பட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் கூறுகின்றனர். சேலம் மாவட்ட மைய நூலக அலுவலர் (பொறுப்பு) சேகரிடம் கேட்டபோது, "உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் மொத்த வரி வருவாயிலிருந்து 10 சதவீதம் நூலக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு நினைவூட்டல் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் சேலம் மாநகராட்சி தரப்பில் இருந்து 1.20 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். இதற்குமேல் நான் எதுவும் சொல்லக்கூடாது,'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
நூலக வரி பாக்கி குறித்து விளக்கம் பெற சேலம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தரை பலமுறை செல்போனில் அழைத்தோம். பலகட்ட முயற்சிக்குப் பிறகு தொடர்புக்கு வந்த ஆணையரின் உதவியாளர், "ஐயா, மீட்டிங்கில் இருக்கும்போது செல்போனை எடுக்க மாட்டார். நீங்கள் பேசிய விவரத்தை ஐயாவிடம் சொல்லி விடுகிறேன்'' என்றார். அதன்பிறகும் ஆணையர் நம் லைனுக்கு வரவில்லை.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி மூத்த அலுவலர் ஒருவரிடம் விசாரித்தபோது, "கடும் நிதி நெருக்கடியால் மாநகராட்சி ஊழியர்களுக்கே இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. நூலகத்துறைக்கு மட்டுமின்றி, பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், பி.எப். அலுவலகம் ஆகிய துறைகளுக்கும் பல கோடி ரூபாய் மாநகராட்சி தரப்பில் கொடுக்கப் பட வேண்டியுள்ளது. நிலுவைத் தொகையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து விடுவோம்'' என்றார்.
ஒருபுறம் கலைஞர் நூலகம், அண்ணா நூலகம் என சர்வதேசத் தரத்திலான நூலகங்களைத் திறக்கும் தமிழக அரசு, மற்றொருபுறம் மாவட்ட மைய நூலகங்களை இருட்டடியில் தள்ளுகிறது. எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பதை அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் மறந்துவிடக் கூடாது.