ந்தியாவில் செவிலியர்களின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றாலும், பயிற்சிபெறும் செவிலியர்களின் தரமோ கேள்விக்குறியாகி வருகிறது. அங்கீகரிக்கப்படாத செவிலியர் பயிற்சி மையங்கள் தரமற்ற மாணவர்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் தங்களை நர்ஸ் என்று பிரபலப்படுத்த ரீல்ஸ்கள் போடுகின்றனர்.

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப் பேறு செவிலியர் அவையம் என்று சொல்லப்படும் தன்னாட்சி அமைப்பு, சட்ட விதிகளின்படி தகுதிவாய்ந்த செவிலியர்கள், துணை செவிலியர்கள், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் கள், சுகாதாரப் பார்வை யாளர்களைப் பதிவு செய்வதற்காக செயல்படுகிறது.

ss

தற்போது இந்த கவுன்சிலின் பதிவாளராக ஆனி கிரேஸ் கலைமதி என்பவர், சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோப்பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " "சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வெள்ளை புடவை, வெள்ளையாடை அணிந்துகொண்டு நர்சிங் பணி செய்வது போன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. விளம்பரத்திற்காக பல போலி நிறுவனங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பலருடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருவதால் மாணவர்கள் மற்றும் மாணவிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் "நர்சிங் படிப்பில் டி.ஜி.என்.எம். 3 ஆண்டு படிப்பும், பி.எஸ்.சி. 4 ஆண்டு படிப்பும், ஏ.என்.எம். 3 ஆண்டு படிப்பும் தான் உள்ளது. இந்த படிப்புகளுக்கு கட்டாயம் 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எனவே மாணவிகள் அங்கீகாரமில்லாத, தகுதியற்ற கல்வி நிறுவனங்களில் படித்தால் அதில் எந்த மதிப்பும் இல்லை'' என்றும் குறிப் பிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ஸ்கில் இந்தியன் சங்கம் கண்டனம் தெரிவித்து சமீபத்தில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள்.

ss

தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தியனின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் பேசுகையில், "கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மூன்று வகையான படிப்புளைக் கூறி அதுமட்டும் செல்லும், மற்றவை அனைத்தும் தகுதியில்லாதவை என்பது போலவும், 6 மாத, ஒரு வருட துணை மருத்துவ வொக்கேசனல் படிப்புகளைப் படிக்கும் மாண வர்களை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். கவுன்சில் பதிவாளரின் செயலை ஸ்கில் இந்தியன் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவரது செயல்பாட்டால், தமிழ்நாட்டில் ஒரு வருட, 6 மாத துணை மருத்துவப் பயிற்சி களை நடத்திவரும் 500க்கும் மேற்பட்ட வொக்கேசனல் கல்வி மையங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கவுன்சில் பதிவாளரை விசாரித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நர்சிங் பயில அறிவியல் பாடம் பயில வேண்டும் என்பது, 2012ஆம் ஆண்டு மாற்றப்பட்டு, எந்த பாடங்களைப் பயின்றாலும் நர்சிங் பயிலலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐ.டி.ஐ. பயிற்சி வழங்கிய கல்வி மையங்கள், செவிலியர் படிப்பையும் அதனுடன் இணைத்துள்ளன'' என்றார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கவுன்சில் பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதியிடம் பேசியபோது, "தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையமானது, அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களை பதிவு செய்து அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால் தற்போது ஸ்கில் இந்தியன் என்ற இந்த தனியார் நிறுவனங்கள், 10ஆம் வகுப்பு படித்துவிட்டு வருபவர்களுக்கு டிப்ளமோ கல்விகளை மட்டுமே படிக்க அங்கீகரித்துள்ளன. இந்தியா முழுவதும் இதுபோன்ற கல்வி மையத்தை பல்வேறு மாநிலங்களில் நடத்திவரும் இந்த கும்பல், 6 மாதம், ஒரு வருடம் மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர். நர்சிங் பயிலும் நிறுவனத்தில் ஒரு சிறிய மருத்துவமனையோ, சிகிச்சை மையங்களோ செயல்பட வேண்டும் ஆனால் அதெல்லாம் எதுவுமில்லாமல் இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பெரிய கல்வி மையங்களில் நர்சிங் படிப்பதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று கூறுகிறார்கள். ஏ.என்.எம். பயில அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். பி.எஸ்.சி. பயில அதிக பட்சமாக 2 லட்சம் வரை செலவாகும். ஆனால் இவர்கள் 10ஆயிரம், 15 ஆயிரம் வசூலித்துக் கொண்டு பலரை ஏமாற்றி பயிற்சியளிக்கிறார்கள். நாங்கள் இந்த ஸ்கில் இந்தியனின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் மீது பல மாவட்டங்களில் புகாரளித் துள்ளோம். நாங்கள் புகாரளிக் கும் மாவட்டத்திலிருந்து தப்பிச் சென்று வேறு மாவட்டங் களில் பயிற்சியளிக்கிறார். தற்போது திருச்சிக்கு வந்திருக்கிறார்.

இதுபோன்ற தரமற்ற கல்வி நிறுவனங்களில் பயின்றால் வெளிநாடு களில் சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்புகூடக் கிடைக்காது. எனவே தரமற்ற கல்வி நிறுவனங்களில் பயின்று தங்க ளுடைய வாழ்க்கையை இழந்துவிடாமலிருக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.

மருத்துவர்களின் படிப்பை வரை முறைப்படுத்தியது போல் செவிலியர் படிப்பையும் வரைமுறைக்கு உட்படுத்தினால் தான் சரியான கல்வி நிறுவனங்கள் மூலம், நல்ல தரமான செவிலியர்களை உருவாக்க முடியும் என்றும், அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

-துரை.மகேஷ்