கொரோனாவின் இரண்டாவது அலை, தேசம் முழுவதும் சுனாமியாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜன், தடுப்பூசி, படுக்கைகள் என இந்த மூன்று முக்கியப் பிரச்சனைகளிலும் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் இருப்பதால் கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சத்தை நெருங்கிவிட்டது. தமிழகத்தில் தினமும் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது. "மக்களின் உயிரைக் காப்பதற்கு பதில், கொரோனாவின் உற்பத்தி கேந்திரமாக அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன' என்று பகீர் கிளப்புகிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரி சௌண்டையா.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக் காகச் சென்றிருக்கிறார் சௌண்டையா. அப்போது அங்கிருந்த சூழல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தான் பார்த்த காட்சிகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "இரண்டு நாட்களாக எனக்குத் தொடர்ச்சியாகக் காய்ச்சல் இருந்தது. தனியார் மருத்துவமனையில் பரிசோதித்துக் கொள்வதைவிட அரசு மருத்துவமனைக்குச் செல்வதுதான் உகந்தது என நினைத்து, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றேன்.
ஏகத்துக்கும் கூட்டம். நீண்ட தூரத்துக்கு வரிசைகள் நீண்டிருந்தன. பல்வேறு இடங் களிலிருந்து அழைத்துவரப்பட்ட நோயாளிகளை இறக்கிவிட முடியாமல் வேன்கள் காத்துக் கிடந்தன. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருமே மிகச்சிரத்தை யாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். எந்த ஒரு நபரிடமும் முகச்சுழிப்பை அவர்கள் காட்டவில்லை. ஆனால், கொரோனா பரவலைத் தடுப்பதற்கு போடப் பட்டுள்ள கட்டுப்பாடுகளை, வரிசையில் நின்றிருந்தவர் களில் பலரும் கடைப்பிடிக்காமல் இருப்பதை, மருத்துவத்துறை அதிகாரிகளோ, காவல்துறை யினரோ கண்டுகொள் ளாமல் இருப்பது துரதிர்ஷ்டம்தான்.
குறிப்பாக, கியூவில் நின்றிருந்த பலபேர் முகக்கவசம் அணியவில்லை. ஒரு வரிசையில் 100 பேர் நின்றிருந்தால் சராசரியாக 25 பேர் முகக்கவசம் அணி யாமல்தான் இருந்தனர். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. அவர்களிடம் இருமல் சத்தம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே யிருந்தது.
நோயாளியுடன் அவர் மட்டுமே வருவதில்லை. அவருக்கு உதவியாக உறவினர் -நண்பர் என யாரோ ஒருவர் உடனிருக்கிறார்கள். சமூக இடைவெளியும் முகக்கவசமும் இல்லாததால் தொற்று அவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. பொதுமக்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசு மருத்துவத்துறை, அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களிடம் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதது குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு மருத்துவமனை நுழைவு வாயிலிலேயே முகக் கவசத்தை அரசே வழங்கலாம். பரிசோதனைக்காக கியூவில் நிற்பவர்களிடம் சமூக இடைவெளியை ஸ்ட்ரிக்ட்டாக வலியுறுத்தலாம். இது எதுவுமே அங்கு இல்லை.
என் முறை வந்தபோது, எனக்கு ரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். 10 சதவீத அளவிலேயே எனக்குப் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டால் போதுமென்றும் டாக்டர்கள் சொன்னார்கள். சி.டி. ஸ்கேனைப் பொறுத்தவரை நுரையீரலின் வலது, இடது பக்கங்களை மட்டுமே ஆய்வு செய்துவிட்டு "எஸ்' அல்லது "நோ' என குறிப்பிடுகிறார்கள். அதாவது, நுரையீரலின் வலது பக்கம் பாதித்திருந்தால் "எஸ்' என்றும் இல்லையெனில் "நோ' என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அதேபோல நுரையீரலின் இடது பக்கமும். இதைத்தாண்டி சி.டி. ஸ்கேன் மூலம் வேறு எந்த ஆய்வும் செய்யவில்லை. ஆனால், தனியார் மருத்துவமனைகளோ ஏழெட்டுவிதமாக, ஸ்டெப் பை ஸ்டெப்பாக ஆய்வு செய்து பார்க்கின்றன.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள எனக்கு அறிவுறுத்தப்பட்டதால் சரி எனச் சொல்லி விட்டு டாக்டர்களிட மிருந்து விலகி, மருத்துமனையைச் சுற்றிவந்தேன்.
மருத்துவமனையின் 4-வது மாடியை பொதுமக்களுக்கான கொரோனா வார்டாக மாற்றியிருந்தனர். நிறைய நோயாளிகளும், அவருக்கு உதவியாக வந்தவர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். ஒவ் வொரு படுக்கைக்குமிடையே போதிய இடைவெளியில்லை. போதுமான எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் இல்லை என்பதால் வராண்டாக்களிலும், தரைகளிலும் கூட நோயாளிகள் படுத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. நோயாளி யின் உதவியாளர் நிலையும் அதுதான்.
நோயாளிகள் பலரிடமும் முகக்கவசம் இல்லை. முகக்கவசம் இருப்பவர்களும் அதை முழுமையாகப் போடவில்லை. மூக்குக்கு கீழே இறக்கி விட்டுக்கொண்டார்கள். அதேபோல முகக்கவசத்தை கழட்டி தங்கள் படுக்கையில் வைத்திருந்ததையும் கவனிக்க முடிந்தது. கொரோனாவால் பாதிக்கப் படாதவர்கள்தான் நோயாளிகளுடன் உதவிக்கு வருகிறார்கள். அங்கிருக்கிற சூழலைப் பார்க்கும்போது, உதவிக்கு வருபவர்களுக்கும் கொரோனா தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
இருக்கிற நோயாளிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கழிப்பறைகள் அதிகமாக இருக்க வேண்டும். புதிய கழிப்பறைகள் உருவாக்கப்படவில்லை. குறைந்தபட்சம் தற்காலிகக் கழிப்பறைகள் அதிகமாக ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படியில்லாதது துரதிர்ஷ்டம்தான்.
ஒவ்வொரு படுக்கைக்குமிடையே காட்போர்டு தடுப்புகள் வைத்து, தேவையான இடைவெளியில் படுக்கைகள் போடப்பட்டிருக்க வேண்டும். கொரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக இருப்பவர்களுக்கும், குறைவாக இருப்பவர்களுக்கும் தனித் தனி வார்டுகளில் அட்மிட் செய்திருக்கலாம். இவற்றைக் கவனிக்க, தனி மேனேஜ்மெண்ட் இருக்க வேண்டும். அமைச்சர்கள் -அதிகாரிகளின் திடீர் விசிட்டும் இல்லை. தமிழக அரசிடம் திட்டமிடல் சரியான வியூகத்தில் இல்லை. அரசு வலியுறுத்தும் கட்டுப்பாடுகளை அரசு மருத்துவமனைகளிலும் கடைப்பிடிக்காவிட்டால், கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அங்குள்ள நிலைமைகளைக் கவனித்த போது, கொரோனா நோயாளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை இருப்பதாக எனக்குத் தோன்றியது'' என்று அதிர்ச்சிகளை வெளிப்படுத்தினார் சௌண்டையா.
இப்படிப்பட்ட அதிர்ச்சிகள் ஒருபுறமிருக்க... ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் பற்றாக்குறையும் தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் வசதியுடன் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 10,000 படுக்கைகளை உருவாக்கும் பணிகளை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. இதற்காக 139 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், செவ்வாய்க் கிழமைவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால், கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து, பொதுப்பணித்துறையின் அதிகாரிகள் தங்களது காண்ட்ராக்டர்களிடம் வலி யுறுத்தியதையடுத்து அப்பணிகள் வேகமெடுத்துள்ளன. "ஓரிரு நாளில் 50 சதவீத படுக்கைகள் தயாராகிவிடும்' என நம்மிடம் பகிர்ந்துகொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு, "ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் உடனடியாக 600 படுக்கைகள் ஏற்படுத்தப்படும்' என்கின்றனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஆண்டு துவங்கியபோது, அதைத் தடுக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் எந்த மாதிரியான சிகிச்சையளிப்பது, எந்த மருந்துகளை பயன்படுத்துவது என மருத்துவத்துறை தடுமாறியது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில் கொரோனா வைரஸ் குறித்த பல தெளிவுகளையும், மருத்துவச் சிகிச்சை முறைகளையும், டாக்டர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கூடுதலாக தடுப்பூசி களும் வந்துவிட்டன. அப்படிப்பட்ட நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை விபரீதமாவதை தடுக்கவும், மனித உயிர்கள் பலியாகாமல் தவிர்க்கவும், தமிழக அரசு தீவிரமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லையெனில், தமிழகத்திலும் ஒரு டெல்லி உருவாகும் என்பதே நிதர்சனமாக இருக்கிறது.