நிர்மலாதேவி விவகாரத்தால், தமிழகத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு கவர்னர் பன்வாரிலாலிடமிருந்து ஒரு கடிதத்தைக் கேட்டுப்பெற்றிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம் என்று அதிர வைக்கிறது ராஜ்பவன் வட்டாரம்

governorஇதுகுறித்து டெல்லியில் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி தேர்தல் நடக்கும்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி இருக்க வேண்டுமென்பது பிரதமர் மோடியின் கொள்கை வகுப்பாளர்களின் யோசனை. அதற்கேற்ப புரோகித்துக்கு நிர்வாக ரீதியிலான சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார் மோடி. டெல்லி ஆலோசனையின்படி மாவட்டம்தோறும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார் பன்வாரிலால். ஆனால், அவரின் பாலியல் சபலம் டெல்லியின் கனவுகளை சிதைத்துவிட்டது. இனி, அவரை வைத்துக்கொண்டு தமிழகத்தில் கவர்னர் ரூல் கொண்டுவருவது பா.ஜ.க.வுக்கு இழுக்கு. அதனால், கர்நாடக தேர்தல் முடிந்ததும் 4 மாநிலங்களின் கவர்னர்களை மாற்றும் திட்டத்திலிருக்கிறார் மோடி. அதில் தமிழகமும் அடங்கும்!’’ என்கிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் ராஜ்பவனின் தொடர்புகள் குறித்து நிறைய விசயங்களைக் கக்கியிருக்கிறார் நிர்மலாதேவி. இந்த தகவல்கள் அறிந்து கவர்னர் பன்வாரிலாலுக்கும் அவரது செக்ரட்டரி ராஜகோபாலுக்கும் உதறல்கள் எடுத்திருக்கின்றன. ராஜ்பவனிலிருந்து கவர்னரை வெளியேற்ற டெல்லி திட்டமிடும் நிலையில், ராஜகோபாலும் அங்கிருந்து வெளியேறத் துடிக்கிறார்.

இதற்காக, முதல்வர் எடப்பாடியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார் ராஜகோபால். ஆனால், நேரம் ஒதுக்கவில்லை எடப்பாடி. இந்த நிலையில், கவர்னர் அழைத்தால் ராஜ்பவனுக்கு முதல்வர் வந்தாக வேண்டும் என்பதால், கவர்னர் பெயரில் எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைக்கும் யோசனையை முன்வைத்து, அதன்படி ஏப்ரல்-30 அன்று எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்தனர். இருப்பினும், ராஜ்பவனில் தினந்தோறும் பதட்டம் அதிகரித்தபடிதான் இருக்கிறது.

Advertisment

ராஜ்பவனின் பதட்டம் குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""கல்லூரி மாணவிகள் குறித்து நிர்மலாதேவியிடம் அதிக கேள்விகள் கேட்கவில்லை. மாறாக, அவருடைய நெட்வொர்க் எப்படி, எங்கெல்லாம் பரவியிருக்கிறது என்பது பற்றித்தான் நிறைய விசாரித்திருக்கிறார்கள். அந்த விசாரணையில், "மதுரை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வேண்டும், பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும்' என்கிற ஆசையில்தான் இந்த தொழிலுக்கு நான் சம்மதித்தேன்.

nirmaladeviபணி நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாறுதல்களுக்காகத்தான் துவக்க காலத்தில் உயர்கல்வித் துறையின் செக்ரட்டரிகள் முதல் இரண்டாம் நிலை அதிகாரிகள் வரை அறிமுகப்படுத்திக்கொண்டேன். இதில், துறையின் செக்ரட்டரியாக இருந்த அபூர்வாவை மட்டும்தான் என்னால் நெருங்க முடியவில்லை. மற்றபடி பெரும்பாலான உயரதிகாரிகள் ஜொள்ளர்களாகத்தான் இருந்தனர். அந்த அதிகாரிகள் மூலமாகத்தான் ராஜ்பவனில் என்னால் நுழைய முடிந்தது. ராஜ்பவனில் கவர்னர்கள்தான் மாறினார்களே தவிர, அங்கு பணிபுரியும் முக்கிய அதிகாரிகள் பலரும் நீண்ட வருடங்களாகவே இருப்பவர்கள்தான். உயர்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ்.அல்லாத அதிகாரிகளுக்குத் தோதான கோப்புகள் ராஜ்பவனில் நகர்வதற்கு நான் பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். இந்த உதவியை நான் செய்கிறபோது, உயர்கல்வித்துறையில் எனக்கு வேண்டிய காரியங்களை அந்த அதிகாரிகளை வைத்து சாதித்துக்கொள்வேன். 2011-க்குப் பிறகுதான் இப்படி நிறைய காரியங்களை நிறைவேற்றிக்கொண்டேன்.

அப்போது உள்துறைச்செயலாளராக ராஜகோபால் இருக்கும்போதே, உயர்கல்வித்துறையில் நடக்கும் லீலைகளை அறிந்துகொண்டார். ராஜ்பவன் வரைக்கும் நான் போய் வந்திருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அந்த விசயம் எனக்கு இப்போதுதான் தெரியும். அதாவது, தற்போதைய கவர்னரின் அறிமுகம்ங்கிறது, உயர்கல்வித்துறையின் உயரதிகாரி மூலம் நான் ராஜகோபாலுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். அவர் மூலமாகவே கவர்னரின் நட்பு கிடைத்தது. அப்போதுதான், என்னை ஏற்கனவே தெரியும் என அவரே சொன்னார்.

Advertisment

ஜெயலலிதா ஆஸ்பிட்டலில் இருந்த சமயத்தில் 6 முறை கவர்னர் மாளிகைக்கு வந்துபோயிருக்கிறேன். சென்னை வந்தபோது ஸ்டேட் கெஸ்ட் ஹவுசில் 2 முறையும், ஐ.டி.சி. சோழாவில் 2 முறையும், ஹயாத்தில் 2 முறையும் தங்க வைக்கப்பட்டேன். எதுவும் எனது பெயரில் புக் ஆகாது. கவர்னர் மாளிகையின் அதிகாரிகள் மூலமாகவோ அல்லது உயர்கல்வித்துறையின் அதிகாரிகள் மூலமாகவோ புக் ஆகும். எந்த இடத்திலும் எனது பெயர் பதிவாகாமல் கவனமாக இருந்தார்கள். சென்னைக்கு வரும்போதெல்லாம் 4 நாட்கள் தங்கியிருக்க வேண்டியதிருக்கும். தற்போதைய கவர்னரை நினைத்த மாத்திரத்தில் என்னால் சந்திக்க முடியும். கவர்னர் மாளிகையிலேயே கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 3 முறை சந்தித்துள்ளேன். என்னுடன் அமர்ந்து அவர் சாப்பிட்டிருக்கிறார். மிகவும் ரசனையாக கமெண்ட் அடிப்பார். அது ரசிக்கும்படி இருக்கும். ஒருமுறை சாப்பிடும்போது, "சாப்பாட்டில்தான் சைவம் ; மற்றபடி அசைவம்தான்' என சொல்ல, எனக்கு வெட்கமாக இருந்தது.

முதலில் என்னைப் பயன்படுத்திக்கொண்ட அதிகாரிகளும், பெரிய மனிதர்களும் ஒரு கட்டத்தில்தான் கல்லூரி மாணவிகளை விரும்பினார்கள். ஆனால், ஒரு முறைகூட என்னால் எந்த கல்லூரி மாணவிகளையும் வளைக்க முடியவில்லை. வலை விரித்திருக்கிறேன். ஆனா, யாரும் சிக்கவில்லை' என பல தொடர்புகளை விசாரணையில் கொட்டியிருக்கிறார் நிர்மலாதேவி! அதனால்தான் பதட்டமாகவே இருக்கிறது ராஜ்பவன்'' என்கிறார்கள்.

rajagopal-IAS

""மத்திய உள்துறை அமைச்சகத்தில் மாநிலங்களுக்கான கவுன்சில் செக்ரட்டரியாக இருந்தவர் ராஜகோபால். அப்போது மேகாலயா கவர்னராக இருந்த பன்வாரிலாலுக்கும் ராஜகோபாலுக்கும் நல்ல நட்பு உண்டு. கவர்னரின் மனதை நன்கு அறிந்தவர் ராஜகோபால். அதனால்தான், தமிழகத்துக்கு பன்வாரிலால் மாற்றப்பட்டதும் சில நாட்களிலேயே பிரதமர் அலுவலகத்தில் சொல்லி தனது செக்ரட்டரியாக ராஜகோபாலை வரவழைத்துக்கொண்டார் கவர்னர் பன்வாரிலால். அதன்பிறகு, ராஜ்பவனிலிருந்து எந்த ஒரு விசயமும் வெளியே கசியக்கூடாது என்பதற்காகவே கவர்னர் மாளிகையில் நீண்ட வருடங்களாக இருந்த ஊழல் பெருச்சாளிகளை வெளியேற்றினார் ராஜகோபால். ஆனாலும், ராஜகோபாலால் வஞ்சிக்கப்பட்ட அதிகாரிகளால் நிர்மலாதேவி விசயம் ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகே கவர்னர் மாளிகையின் பாலியல் சபலங்கள் ஆடியோவாக வெளியாக, அதையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள் ஆட்சியாளர்கள்'' என்கிறது கோட்டை வட்டாரம்.

-இளையர்