தங்கள் குழந்தைகளை சிறந்த பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்பதே பெற்றோர்களின் கனவாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்தவே தனியாக சம்பாதிக்க வேண்டும். இவ்வளவு சிரமங்களையும் கடந்து ஒரு நல்ல பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்து அனுப்பி வைத்தால், சில பள்ளி நிர்வாகங்களின் அலட்சியத்தால் குழந்தை உயிருடன் வீடு திரும்புவதே கேள்விக்குறியாக உள்ளது,
2012-ல் சென்னை தாம்பரத்தை அடுத்த சியோன் பள்ளி மாணவி, பள்ளி வாகனத்தில் தாம்பரம் அடுத்த முடிச்சூர் மெயின் ரோட்டில் செல்லும்போது அதே வாகனத்தின் ஓட்டை வழியாக விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக அரசு பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்க, கடுமையான கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. ஆனாலும் பள்ளி நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறையின் அலட்சி யத்தால் இந்த உயிர்ப் பலி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் இயங்கும், வேல்ஸ் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான பள்ளி வாகனம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி காலை தாம்பரம் பழைய பெருங்களத்தூர் பகுதியிலிருந்து 31 மாணவ மாணவிகளை, பள்ளி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு முடிச்சூர் சாலையில் வந்துகொண்டிருந்தது. வாகனத்தை டிரைவர் வெங்கட்ராமன் ஓட்டிவந்தார், அப்போது சாலையிலிருந்த ஸ்பீட் பிரேக்கரில் வேகமாக ஏறி இறங்கியபோது பள்ளி வாகனத்தின் எமர்ஜென்சி எக்ஸிட் கதவு திடீரென உடைந்து, சாலையில் இருந்த ஓர் கார்மீது விழுந்தது. அதேசமயம் அந்தக் கதவினருகே அமர்ந்திருந்த பள்ளி மாணவி ரியோனா கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
அருகே இருந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகன ஓட்டுநர் வெங்கட்ராமன் தப்பியோடினார். ஆனால் பொதுமக்கள் அவரை துரத்திச் சென்று பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் விபத்தில் படுகாயமடைந்த மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலைசெய்யும் சேவியர் என்பவரின் மகள் ரியோனா எனத் தெரியவந்தது. 11 வயதான இவர், முடிச்சூரில் இயங்கிவரும் வேல்ஸ் கல்வி நிறுவனக் குழுமத்தின் ரவீந்திர பாரதி பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
பள்ளி வாகனத்தில் ஏற்பட்ட விபத்தால் மாணவி ரியோனாவிற்கு முகத்தில் பலத்த காயமும், நான்கு பற்களும் உடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்தால் சேதமடைந்த கார் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் ஆனந்த்குமார் வாகன ஓட்டுநர் வெங்கட்ராமன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். போக்குவரத்துத் துறை இணை ஆணையர் ஜெய்சங்கரன், வேனின் பர்மிட்டையும் வாகன ஓட்டுனர் வெங்கட்ராமனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்துசெய்ய பெயரளவில் பரிந்துரை செய்துள்ளார்,
சம்பவம் தொடர்பாக முடிச்சூர் வேல்ஸ் கல்விக் குழுமத்தின் ரவீந்திரபாரதி பள்ளியைத் தொடர்புகொண்டு பேசினோம். பெயர் கூற மறுத்த நபர், "இது வெறும் விபத்துதான். மற்றபடி எதுவும் பேச முடியாது''’என்று அலட்சியமாக தொடர்பைத் துண்டித்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் ஆனந்த்குமாரிடம் பேசியபோது, "விபத்து தொடர்பாக காயமடைந்த மாணவியின் பெற்றோர் புகாரளிக்க மறுத்துவிட்டனர். அதனால் இந்த விபத்தில் சேதமடைந்த காரின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் வெங்கட்ராமனை கைதுசெய்தோம் ’என்றார். "மாணவி சுருதி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் உரிமையாளர் விஜயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு தற்போது வரை நடந்துவருகிறது. அதுபோல இந்த வழக்கில் ஏன் ஆர்வம் காட்டவில்லை''’என்று கேட்டதற்கு, ஆய்வாளர் ஆனந்த்குமார் மேலிட பிரஷர் என்று முடித்துக்கொண்டார்,
"சரியாக பராமரிப்பில்லாத வாகனத்திற்கு உரிமம் கொடுத்த தாம்பரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?''’என்று கேட்டபோது, தொடர்பைத் துண்டித்தார். சம்பவம் தொடர்பாக போக்குவரத்துத் துறை தெற்கு இணைஆணையர் ஜெய்சங்கரனை தொடர்புகொண்டோம், நம் அழைப்பை எடுக்கவே யில்லை.
இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப் பித்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கான 17 விதிகளை வாகனங்கள் பின்பற்றுகிறதா என்பதை கடுமையாக ஆய்வுசெய்து அப்பகுதி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சான்றளிக்கவேண்டும் என்பது விதி. ஆனால் இதில் ஒன்றைக்கூட பல பள்ளி, கல்லூரி வாகனங்கள் கடைப்பிடிப்பதில்லை.