அரசியல் பிரச்சாரம், சுப நிகழ்ச்சிகள் முதல் துக்க செய்திகள் வரை, பேனரில் விளம்பரம் செய்யும் பேனர் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றது, விதிமீறலாக அலட்சியமாக வைக்கப்படும் பேனர்களால் அடிக்கடி விபத்துக்களும், உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பல போராட்டங்களை நடத்தினார். சம்பந்தப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர்ந்து சட்டரீதியாகவும் போராடினார். அனுமதியில்லாத பேனர்கள், விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அத்துமீறி வைக்கப் பட்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றமும் எச்சரித்திருந்தது.
ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை காற்றி பறக்கவிட்டுவிட்டு, பேனர் கலாச்சாரம் தொடர்ந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2019, செப்டம்பர் 12ஆம் தேதி குரோம் பேட்டையை சேர்ந்த பெண் பொறியாளர் சுபஸ்ரீ, பெருங்குடியில்லுள்ள ஐ.டி. நிறு வனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு, பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகே ரேடியல் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. பிரமுகர் மாஜி கவுன்சிலர் ஜெயபால் இல்லத் திருமண விழாவுக்கு அலட்சியமாக அமைத்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். இந்த நிலையில், பின்னால் வந்துக்கொண்டிருந்த தண்ணீர் லாரி கண் இமைக்கும் நேரத்தில் சுபஸ்ரீ தலை மீது ஏறி இறங்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த போதும் கடுமையான விபத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கி பல இடங்களில் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராகப் போராட் டமே நடந்தது. அப்போதைய எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கடும் விவாதமாக்கினர். பின்னர், பேனர் கலாச்சாரத் திற்கு உயர் நீதிமன்றம் மற்றும் அப்போதைய அரசு கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் தற்போது பேனர் கலாச்சாரம் மீண்டும் அதிகரித்த சூழலில், கடந்த சில வாரத்திற்கு முன் கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த, வடுகபாளையம் அருகே இத்தாலியன் பர்னீச்சர் கடை சார்பில் 60 அடியில் பிரமாண்ட விளம்பரத்துடன் கூடிய பேனர் அமைக்கும் பணியில் 7 தொழிலாளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த விளம்பர பேனரின் இரும்புச்சட்டம் சரிந்துவிழுந்ததில் சம்பவ இடத்திலே சேகர், குணசேகரன், குமார் ஆகிய மூன்று தொழிலாளிகள் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் மத்திய அமைச்சர் அமித்ஷா வந்தபோது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேனர் வைத்ததைத் தடுத்த அரசு ஊழியர்களை மிரட்டிய சம்பவம் அரகேறியுள்ளது. மேலும் கடந்த வாரம் சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அலமேலு அம்மன் கோவில் அருகே விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர், காற்றின் வேகத்தில் சரிந்து மின் கம்பம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி யடித்து ஓடினார்கள். நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜன், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களைப் பற்றி தகவல் கேட்டிருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் குரோம் பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் நடந்த தி.மு.க. கட்சி கூட்டத்திற்கு அத்துமீறி பேனர் வைக்கப்படிருந்ததை சமூக ஆர்வலர் கோவிந்தராஜன் வீடியோ எடுத்தபோது, அப்பகுதி தி.மு.க. பிரமுகரின் ஆட்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய கோவிந்தராஜன், "தாம்பரம் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில், அனுமதி இல்லாமல் முறைகேடாக அமைக்கப்பட்ட பேனர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன் இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் நடந்த தி.மு.க. கூட்டத்தில் அமைக்கப்பட்ட பேனர்களை வீடியோ எடுத்தபோது தி.மு.க. பிரமுகர் எங்களை தாக்கினார். போலீசார் தலையிட்டு என்னை காப்பாற்றினார்கள். அதேபோல குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு எதிராகவும், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் அத்துமீறி பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்'' என்றார்.
இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரியிடம் பேசினோம். எப்போதும்போல "மேடம் பிஸி' எனக் கூறி அவரது உதவியாளர் தொடர்பைத் துண்டித்தார்.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிக்கையில்... "அனுமதியில்லாமல் பேனர் வைத் தால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம், மூன்றாண்டு சிறைத்தண்டனை' என எச்சரித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. பெயரளவில் இப் பகுதியில் சில பேனர்களை அகற்றினாலும் இன்னமும் பேனர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.