கரூர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுசெய்து புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் சோதனைக்கு முகாமிட்டுள்ளனர். கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான்கோவில் பகுதியிலுள்ள கிரானைட் நிறுவனம், அம்பாள் நகரிலுள்ள அமைச்சரின் உதவியாளர் சங்கர் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை யிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் வீடு, அலு வலகம், பண்ணை வீடு களிலும் சோதனை நடைபெற்றது. கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியிலுள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷுக்குச் சொந்தமான "தனலட்சுமி செராமிக்ஸ்' டைல்ஸ் கடை, அவருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு உள்ளிட்ட 4 இடங்களிலும், வேட சந்தூர் சாமிநாதன் உற வினரான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதி காரிகள் சோதனை மேற் கொண்டனர்.
திருச்சி கோவை சாலையிலுள்ள அருண் அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவன அலு வலகம், அதன் உரிமையாள ரான அருண் வீடு, ராம நாதபுரத்திலுள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் வீடு ஆகியவையும் சோத னைக்கு இலக்காகின. தொடர்ந்து 23 மணி நேரத் திற்கு மேலாக இரவுபகலாக துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை தொடர்ந்தது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட வீட்டுப் பணிகளுக்கு வெளிநாடு களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் இறக்கப்படு வதால், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப் படையில் இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப் படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத் துறையினர், கடந்த முறை சோதனை நடத்திய பழைய இடங்களில் சில குறிப்பிட்ட இடங்களை மீண்டும் தேடி, அந்த இடங்களிலிருந்து பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப் படுகிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜியின் மீதான விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ள நிலையில், தற் போது அமலாக்கத்துறை யினர் மீண்டும் முகாமிட்டு அமைச்சரின் உறவினர்கள், கணக்கு வழக்குகளைக் கையாளுபவர்கள், அமைச்ச ருக்கு நெருக்கமானவர்கள் என அனைவரது வீட்டிலும் ரெய்டு நடத்தியது பலருக் கும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.
__________
3 ஆண்டுகள் சிறை! 5 ஆண்டுகள் தடை!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக 2018 முதல் 2022 வரை இருந்தார். அவர், பிரதமர் பதவியை இழந்ததும், அவர்மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் முக்கியமானது, பரிசுப்பொருள்களில் ஊழல் செய்த வழக்கு. அதாவது, இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கு பலரும் பரிசுப்பொருட்களை வழங்கினார்கள். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, பிரதமராக இருப்பவருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால் இம்ரான்கானோ, பரிசுப்பொருட்களைத் தன்னிடமே வைத்துக் கொண்டு, குறைந்த விலைக்கு விற்று சுமார் 14 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பானது. உடனே அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டில், கடந்த 5ஆம் தேதி சனியன்று வெளியான தீர்ப்பில், இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.1 லட்சத்தை கட்டத் தவறினால், மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றத்தில் இம்ரான்கானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்த காவல்துறையினர், அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இதே போல் மூன்று மாதங்களுக்கு முன், கடந்த மே 9 அன்று அவர் கைது செய்யப்பட்டபோது நாடெங்கும் வன்முறை மூண்டது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது நாடெங்கும் காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. விரைவில் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பின் காரணமாக இம்ரான்கான் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
-தெ.சு.கவுதமன்