பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து ஜல்லிக்கற்களாக உடைத்து புழுதி பறக்க ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகளின் அணி வகுப்பைப் பார்க்க முடியும். குவாரி விபத்துக்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பது அவ்வப்போது சர்வ சாதாரணமாக நடக்கும் சோக சம்பவங் கள். பெரம்பலூருக்கு அருகிலுள்ள கவுல்பாளையம் பகுதியை ஒட்டிய கல் குவாரியை, முருகேசன் என்பவர் கனிம வளத் துறையிடமிருந்து குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார். இந்த குவாரியில் கடந்த ஜூலை 29-ம் தேதி, கற்களை வெடிவைத்துத் தகர்க்கும் போது உரிமையாளர் முருகேசனின் உடன்பிறந்த தம்பி சுப்பிரமணி, டிப்பர் லாரி டிரைவர் ரங்கநாதபுரம் செந்தில்குமார் ஆகிய இருவரும், 50 அடி உயரத்திற்கு மேலிருந்து கற்பாறைகள் வெடித்துச் சிதறி விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "இந்த குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வேறு யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. கல் குவாரி தற்காலிகமாக மூடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கனிமவளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு குவாரி மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றார். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டு தான் உள்ளன. உயிரிழப்புகளைத் தடுப்பதற்குத்தான் முடியவில்லை.
"பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கனிமவளத்துறை ஏலம் விடும். அப்படி ஏலம் எடுப்பவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டும் மலையை உடைத்து கற்களை வெட்டி எடுக்க வேண் டும், மேலும் குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெட்டி எடுக்கக் கூடாது. இப்படி பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று உறுதிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் குவாரிகளை ஒப்படைக்கிறார்கள். ஆனால் குவாரி முதலாளிகளோ அரசு விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டு தங்கள் இஷ்டம்போல், அதிக ஆழம்வரை மலைகளை உடைக்கிறார்கள். இதுகுறித்து பொதுநல விரும்பிகள் அனுப்பும் புகார்களை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. பிறகெப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?
இது போன்ற குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்ததால் 2011-2013-ஆம் ஆண்டுகளில் இந்த மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த தாரேஸ் அகமது ஆய்வுசெய்து, முறைகேடாகச் செயல்பட்ட சுமார் 70 குவாரிகளை இழுத்து மூடினார். அதன் பிறகு ஆட்சியாளர்கள் மாற, பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோல் தற்போது 120க்கும் மேற்பட்ட குவாரிகள் இஷ்டம்போல் செயல்படுகின்றன. இதுபோன்ற கல் குவாரி முதலாளிகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் கூட்டு வைத்துக் கொள்வார்கள்.
இம்மாட்டத்திலுள்ள பாடாலூர் அருகே உள்ள ராஜா மலையிலிருந்துதான் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்காக ராஜராஜ சோழன் கல் எடுத்துச் சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பெரம்பலூரை ஒட்டியுள்ள பிரம்மரிஷி மலை, இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போகும் அளவிற்கு உடைத்து நொறுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல் குவாரியில் வெடிவைத்து தகர்க்கும்போது டிராக்டர் மூலம் துளையிட்டு அதிக அதிர்வு இல்லாத அளவில் வெடிவைத்து வெடிக்க வேண்டும், இதற்கு நேரமும் செலவும் அதிகமாகும் என்பதால், பலர் ஆழ்குழாய் போர்வெல் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் ராட்சத லாரிகளைக் கொண்டுவந்து, அதன்மூலம் பல மீட்டர் ஆழத்திற்கு பாறையைத் துளைத்து சக்திவாய்ந்த வெடி மருந்து களைக் கொண்டு பாறைகளைத் தகர்க்கிறார்கள். இந்த வெடிச் சத்தத்தினால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் வீடுகள் பூகம்பத்தில் ஆடுவது போல் ஆடுகின்றன கர்ப்பிணிப் பெண் களின் வயிற்றில் வளரும் கரு கூட கலைந்து விடுகின்றன. அந்த அளவிற்கு அதிரும்படி இப்படி ராட்சச எந்திரங்களை பயன்படுத்தி மலைகள் அழிக்கப்படுகின்றன. இந்த மலைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆறுகள், மலைகள் போன்ற இயற்கை கனிம வளங்களை, வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் வேலைக்கு அதிகாரிகள் துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்'' என்று வேதனையோடு தெரிவிக்கிறார் இம்மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் ரங்கநாதன்.
"தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்று சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனிம வளங்கள் தாறுமாறாகக் கொள்ளை போகின்றன. இவற்றையெல்லாம் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுசெய்து முறைப்படுத்தினால் தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி கூடுதல் வருவாய் நிச்சயம் கிடைக்கும்'' என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒரு வர். எனவே அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.