ந்தியாவின் சபிக்கப்பட்ட பூமியான மணிப்பூரில் இன்னமும் வன்முறை கட்டுக்குள் வராமல் தொடர்ந்தபடியிருக் கிறது. மலைப்பகுதியாகவும் பள்ளத்தாக்குகளாகவும் உள்ள மணிப்பூரில், மொத்த மக்கள் தொகை யில் 53% மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள்.

மைத்தேயி பிரிவினர்தான் ஓரளவு வசதியானவர்கள். இவர்களின் வாக்குகளை வளைத்துவிட்டால் மணிப்பூரில் நிரந்தர ஆட்சியாளர் களாகிவிடலாமெனக் கணக்குப் போட்ட பா.ஜ.க., அங்குள்ள பழங்குடியின மக்களான குக்கி, நாகா போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பழங்குடியின அந்தஸ்தை மைத்தேயி பிரிவினருக்கும் வழங்க முடிவெடுத்தது. அப்படிச் செய்தால் தங்க ளுடைய தனித்தன்மை... தங்களின் நிலம் பறிக்கப்படுமென்று அச்சப்பட்ட குக்கி இன மக்கள், ஒன்றிய அரசுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். எனவே இரு பிரிவினருக்கிடையே வன்முறை மூண்டது. கடந்த மே 3ஆம் தேதி ஊர்வலத்தின்போது பற்றவைக்கப்பட்ட வன்முறை, இன்னமும் முழுமையாக அணைக்கப்படாமல், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் புகைந்தபடியே இருக்கிறது.

mm

மணிப்பூர் வன்முறையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படாமல், தனது இனமான மைத்தேயி இனக்குழுவுக்கு மறைமுக சப்போர்ட் செய்ததால், குக்கி பழங் குடியினத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், மணிப்பூர் முதல்வருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அவரை பதவி விலக நிர்ப்பந் தித்தனர். ஆனால் அவர் பதவி விலகவும் இல்லை, ஒன்றிய பிரதமர் மோடியோ மணிப்பூர் விவகாரம் குறித்து பேசவே விரும்பவில்லை. மணிப்பூர் பற்றியெரிவது குறித்தோ, 160 பேருக்கு மேல் பலியானது குறித்தோ, பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தது குறித்தோ, மணிப் பூரின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டது குறித்தோ எவ்விதத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில், மணிப்பூர் வன்முறையில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துவரப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளி யாகி இந்தியாவின் மனசாட்சி யையே உலுக்கியது. இதையடுத்து ஒன்றிய அரசுக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட 'இந்தியா' அமைப்பிலுள்ள எதிர்க்கட்சிகள் அனைவரும், இதுகுறித்து விளக்கமளிக்க பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தியும் வராத தால், ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள். அதன்காரணமாக பாராளுமன்றத்துக்கு வந்த பிரதமர், மணிப்பூர் விவகாரம் குறித்து சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஆனால் அதன்பிறகும் மணிப்பூரில் வன்முறை அடங்குவதாக இல்லை.

இன்னொருபுறம் உச்ச நீதிமன்றமும் சாட்டையைச் சுழற்றியது. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாகக் கண்டனம் தெரிவித்தது. அதோடு, மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி விசாரணை நடத்திய கீதா மிட்டல் தலைமையிலான குழு, கடந்த ஆகஸ்ட் 21 திங்களன்று, மணிப்பூர் கலவரம் தொடர்பாக 3 அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப் பித்துள்ளது. அதையடுத்து, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

mm

சட்டரீதியிலான நடவடிக்கைகள் ஒருபுறம் போனாலும், அதிகாரத்திலிருக்கும் மாநில பா.ஜ.க.வும், ஒன்றிய பா.ஜ.க.வும் மணிப்பூர் கலவரங்களை அடக்குவதில் எவ்வித முனைப்பும் தீவிரமாகக் காட்டவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் 40 ஆயிரம் மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் மைத்தேயி இன இளைஞர்களால் எடுத்துச்செல்லப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைத் திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டாததால் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன.

கடந்த 18ஆம் தேதி அதிகாலையில், மணிப்பூரிலுள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. துப்பாக்கிகளின் சத்தங்களால் அப்பகுதி மக்கள் தூக்கத்திலிருந்து பதட்டத்தோடு எழுந்தனர். லிட்டன் காவல் நிலையத்துக்குட்பட்ட அந்த பகுதியில் அதிகாலை யில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதுகுறித்து காவல்துறை யினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் விசாரணை மேற்கொண்டதில், உடல் முழுக்க சிதைக்கப்பட்ட நிலையில் மூன்று இளைஞர்களின் உடல்களைக் கண்டெடுத்தனர்.

அந்த இளைஞர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. உயிரிழந்த மூன்று பேரின் உடல்களிலும் கூர்மையான கத்திகளால் தாக்கப்பட்ட காயங்கள் உள்ளன. இதைவிடக் கொடூரமாக அவர்களின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு துடிக்கத் துடிக்கக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஜம்கோஹின், தங்கோகாய், ஹோல்லென்சன் ஆகிய மூன்று இளைஞர் கள்தான் கொல்லப்பட்டவர்களாவர். இவர்கள் 24 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இதையடுத்து, இந்த சண்டையில் ஈடுபட்டவர்கள் யாரென்று தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. கிராமங்களில் மட்டுமின்றி, மலைப்பிரதேசங் களிலும், காடுகளில் பதுங்கியிருப்பவர்களிட மும் தீவிரமாகத் தேடுதல் வேட்டையை நடத்திவருகிறார்கள். என்று தணியுமோ மணிப்பூர் வன்முறை!

Advertisment