இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை, அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட் டணி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த அதே கூட்டணியை 2024 நாடாளு மன்றத் தேர்தலிலும் தொடர்கிறது. அக்கூட்டணியில் கட்சியினர், தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டு யாருக்கு எந்தத் தொகுதி என ஆலோசனை நடத்திவருகின்றனர்.
தி.மு.க.வில் எம்.பி. சீட் கேட்டு 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தந்தவர்களிடம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி நேர்காணல் நடத்தியது தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமைக் குழு.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.பி. கதிர்ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதி கேட்டு விருப்ப மனு தந்துள்ளார், அவரிடமும் நேர்காணல் நடத்தப் பட்டது. ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்பாடி, கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமப்புறப் பகுதிகளில், 2024-ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர் என சுவர்களில் விளம்பரம் செய்துள்ளனர். இது தி.மு.க.வின் ஒருதரப்பினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வேட்பாளர் யார் என்பதை தி.மு.க. தலைவர் தான் அறிவிக்கவேண்டும். அதுதான் முறை. ஆனால் அதற்குமுன்பே வேட்பாளர் இவர்தான் என சுவர்களில் விளம்பரம் செய்துள்ளனர்.
கடந்த சில தினங் களுக்கு முன்பு வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் மாவட்டத் திலுள்ள ஒன்றிய, நகர, பேருர் கழக நிர்வாகிகளை அழைத்து மீண்டும் சிட்டிங் எம்.பி. கதிர் ஆனந்த்தான் வேட்பாளரென தலைவர் என்னிடம் சொல்லிவிட்டார். அதை அவர் முறைப்படி அறிவிப்பார், அதனால் தேர்தல் பணியை இப்பொழுதே தொடங்குங்கள் எனச் சொல்லியுள்ளார்.
அதேபோல் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், காட்பாடி, அணைக்கட்டில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கதிர் ஆனந்த்தான் மீண்டும் வேட்பாளர் என பேசியுள்ளார். அதோடு, சுவர் விளம்பரம் செய்ய ஒன்றியத்துக்கு 1 லட்சம், ஒ.செ. செலவுக்கு 1 லட்சம், கிளைக்கு 5 ஆயிரம் ரூபாய் என நிதி தந்தார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். கட்சியின் பொதுச்செயலாளர் மகனாக இருந்துகொண்டு இப்படி விதிகளை மீறலாமா என்ற கேள்வியெழுந் துள்ளது.
வேலூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கும் புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம், இந்தமுறை எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என தொகுதியில் தொடர்ந்து நலத்திட்டங்கள் செய்துவருகிறார். தாமரைச் சின்னத்தில் நிற்கிறேன் என அவரே அறிவித்துவிட்டு குஷ்பு போன்ற பா.ஜ.க. பிரமுகர்களை அழைத்துவந்து நிகழ்ச்சிகள் நடத்து கிறார். பா.ஜ.க. வேட்பாளர் என அவரே அறிவித்துக்கொள்வதற்கு கட்சித் தலைமை எதற்கு என தொகுதி பா.ஜ.க.வினர் புலம்பிவருகின்றனர்.
-கிங்