மைச்சர்கள் மீது சபாநாயகரும், சபாநாயகர் மீது அமைச்சர்களும் அதிருப்தி அடைந்திருப்பதுதான் ஆளுந்தரப்பின் ஹைலைட். மானியக் கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மட்டுமின்றி, பல அமைச்சர்களும் பதில் சொல்ல முயல்வதால் சபையின் நேரமும் மாண்பும் வீணடிக்கப்படுவதாக நினைக்கிறார் சபாநாயகர் தனபால். அத்தகைய அமைச்சர்களை சபாநாயகர் கடிந்துகொள்வதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு பேச அனுமதி தர மறுப்பதும், பஞ்சாயத்தாகி முதல்வரிடம் சென்றுள்ளது.

assembly

""ஜெயலலிதா இருந்தவரை, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தெந்த அமைச்சர்கள் பதில் சொல்லணும்னு ஜெயலலிதா சொல்லிவைத்திருக்கிறாரோ அவர்கள் மட்டும்தான் பதில் சொல்வார்கள். மற்றவர்கள் பவ்யமாகத்தான் உட்கார்ந்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் சபைக்கு ஜெயலலிதா வருவதற்கு முன்பே அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் ஆஜராகி விடுவார்கள். அதேபோல ஜெயலலிதா சபையிலிருந்து வீட்டுக்கு கிளம்பியது உறுதியானால்தான் அருகில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடமேகூட கதை பேசுவார்கள். ஜெ. இருந்தாலும் இல்லாவிட்டாலும் சபை முடியும்வரை அமர்ந்திருப்பார்கள். அந்த கட்டுப்பாடு தற்போது அ.தி.மு.க. உறுப்பினர்களிடம் இல்லாதது சபாநாயகரை வருத்தமடைய வைத்திருக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் சபைக்கு வருவது, நினைத்த நேரத்தில் எழுந்து வெளியே செல்வது, விவாதங்களை கவனிக்காமல் கதை பேசிக்கொண்டிருப்பது, முக்கிய பிரச்சனைகள் மீது நடக்கும் விவாதங்களின் போதும்கூட சபையில் இல்லாமல் கேண்டினுக்குப் போய்விடுவது என அ.தி.மு.க.வினரின் நடவடிக்கைகளை சபாநாயகரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், ஆளும்கட்சியினர் கேள்வி கேட்கும்போதும் சரி, பிரச்சனைகளை சுட்டிக்காட்டும்போதும் சரி நீண்ட நேரம் எடுத்துகொள்கின்றனர். அதை தவிர்க்கும் பொருட்டு, "சுருக்கமாகப் பேசுங்கள்; நேரடியாக விசயத்துக்கு வாருங்கள்' என்றெல்லாம் சொல்கிறார் சபாநாயகர். யாரும் அதை கண்டுகொள்வதில்லை.

Advertisment

assemblyஇந்த நிலையில்தான் கடந்த வாரம், ஆளுநர் ஆய்வு குறித்த பிரச்சனையை மு.க.ஸ்டாலின் எழுப்பியபோது, அதற்கு பதில் சொல்ல அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முயற்சித்த நிலையில் அவருக்கு அனுமதி தராமல், உட்காரச் சொல்லிவிட்டார் தனபால். இதனால், சபையிலிருந்து கோபமாக கிளம்பிப்போனார் மணியன். அதேபோல, தொழிலாளர் துறை மானியக் கோரிக்கையின் மீது தி.மு.க. உறுப்பினர் ராதாமணி பேசிக்கொண்டிருந்தபோது, அதற்கு பதில் சொல்ல அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மூன்றுமுறை முயற்சிக்க... ’"இது உங்க துறை சம்மந்தப்பட்டது இல்லை. நீங்க ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உட்காருங்கள்'’என கோபமாக சபா சொல்ல... அதே கோபத்துடன் சடாரென அமர்ந்தார் பாண்டியராஜன். சபாநாயகரின் இத்தகைய கண்டிப்பு ஜூனியர் அமைச்சர்களிடமும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது''’என்று விவரிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எடப்பாடியிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அமைச்சர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு அவர்களை சமாதானப்படுத்தினர். பேரவை செயலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ’’""ஆளுநர் ஆய்வு விசயத்தை ஊதிப் பெருசாக்க தி.மு.க. திட்டமிடுகிறது. அதற்கேற்ப மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் என விவாதங்களை வைத்து அரசை குற்றவாளியாக்க தி.மு.க. முயற்சிப்பதை அறிந்துதான் அதனை தவிர்க்கும் பொருட்டு, விதிகளைச் சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலினுக்கு பேச அனுமதி மறுத்தார் சபா. அதை உணராமல் ஓ.எஸ்.மணியன் பேச அனுமதி கேட்டால் எப்படி? அவர் ஏதேனும் சொல்லப்போய், அது இன்னொரு சர்ச்சைக்கு வழி வகுத்துவிட்டால் என்ன செய்வது? அமளியில்லாமல் சபையை ஆரோக்கியமாக நடத்த நினைக்கிறார் சபா. அவரது சொல்லில் அர்த்தமிருக்கும் என அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்''’என சுட்டிக்காட்டுகிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

ஓ.எஸ்.மணியனுக்கு நெருக்கமான அ.தி.மு.க.வினரிடம் பேசியபோது, ""சர்ச்சைகளை உருவாக்க அவர் நினைக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கூட்டாட்சியில் திமுக இருந்தபோது மாநில சுயாட்சியை விட்டுக்கொடுத்த 2 சம்பவங்களை எடுத்துச்சொல்ல விரும்பியே பேச முயற்சித்தார் மணியன். அதைப் புரிந்துகொள்ளாமல், உட்காரச்சொல்லி விட்டார் சபா. சக அமைச்சர்கள், ஆளும் கட்சி-எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நிறைந்திருக்கும் சபையில் சபாவின் அனுமதி மறுப்பு தனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக நினைத்தே சபையை விட்டு கோபமாக எழுந்துபோனார் மணியன். எதிர்க்கட்சிகள் மீது காட்டும் கரிசனத்தை எங்கள் மீதும் சபாநாயகர் காட்டவேண்டும் என அமைச்சர்கள் எதிர்பார்க்கின்றனர். அது இல்லைங்கிறபோது கோபமாக வெடிக்கிறது'’என்று ஆதங்கப்பட்டனர்.

Advertisment

இதுபற்றி சபாநாயகர் தனபாலிடம் விவரித்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ’’""சென்சிட்டிவ்வான பிரச்சனையில் அமைச்சர்களிடமிருந்து தேவையற்ற வார்த்தைகள், தவறான தகவல்கள் வந்துவிடக்கூடாது என்பதால்தான் சில சமயங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. "முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தது ஜெயலலிதாதான்' என அமைச்சர் நிலோஃபர் கபில் உணர்ச்சிவயப்பட்டு பேசிவிட்டார். அது கலைஞர் ஆட்சியில் கொடுக்கப்பட்டதுங்கிற உண்மை அவருக்கு தெரியவில்லை. தி.மு.க.வினர் எல்லோரும், தவறான தகவலை அமைச்சர் தருகிறார் என குற்றம்சாட்டினர். இதனால் தேவையற்ற விவாதம் நடக்கிறது. இதுபோன்ற சர்ச்சைகள் வரக்கூடாதுங்கிறதனாலதான் எச்சரிக்கையாக இருக்க நினைக்கிறேன்''‘ என்றிருக்கிறார் சபாநாயகர். இருதரப்பிடமும் எழுந்திருக்கும் மனக்கசப்புகளை சரி செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

-இரா.இளையசெல்வன்