பொதுவாழ்க்கையில் எளிமைக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து, தன் வாழ்க்கையையே செய்தியாக விட்டுச்செல்பவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச்சிலரில் ஒருவராக மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான தோழர் நன்மாறன் இடம் பிடித்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான தோழர் என்.நன்மாறன் (வயது 74), அக்டோபர் 28-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்.
தோழர் நன்மாறன், 1947 மே மாதம் 13-ஆம் தேதி மதுரையில் வே. நடராஜன் - குஞ்சரத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். மதுரை அழகரடி ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப் படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ., (தமிழ்) பட்டமும் பெற்றார். நன்மாறனின் தந்தையார் பஞ்சாலைத் தொழிலாளி, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதனால் இயல்பாகவே நன்மாறன் கம்யூனிஸ்ட்டு கள் மீதான அபிமானத்தைக் கொண்டிருந்தார்.
நூலகம் சென்று படிக்கும் பழக்கமும், பள்ளியில் படிக்கும்போதே தமிழ்ச் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறனும் கொண் டிருந்தார். அது அவரது பேச்சுத் திறமைக்கு ஆதாரமாய் அமைந்தது. எளிமையாகவும், நகைச்சுவையாகவும் பேசும் திறனை பெற்றதால் "மேடை கலைவாணர்' என்று அழைக்கப்பட்டார்.
சங்க இலக்கியம் பற்றி மட்டுமே பட்டி மன்றங்கள் நடந்துவந்த காலத்தில், திரைப்படங்கள் பற்றி முதன்முதலில் பேசுவதை துவக்கியவர் நன்மாறன். தொடர்ந்து, மக்கள் பிரச்சினைகள் பற்றிய பட்டிமன்றங்களையும் அவர் தலைமை யிலான குழு மாநிலம் முழுவதும் அரங்கேற்றியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தபிறகு முழுநேர ஊழியராக செயல்பட்டார். மதுரை கிழக்கு சட்ட மன்றத் தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி எனும் அமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதன் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார். இளைஞர்களுக்கு வேலை கேட்டும், வேலையில்லாக் கால நிவாரணம் கேட்டும் மதுரையில் நன்மாறன் தலைமையில் 250 இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அமைப்பின் அகில இந்திய துணைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இயல்பாகவே எழுத்தார்வம் கொண்ட நன்மாறன், கம்யூனிஸ்ட் இயக்க மாமேதைகள் கார்ல்மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினார். சில இசைப்பாடல்களையும் எழுதியுள்ளார். மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பயில்வது எவ்வாறு என்ற நூலையும் எழுதினார். பல்வேறு கட்டுரைகளையும், சிறு பிரசுரங்களை யும் எழுதியுள்ளார்.
அவருக்கு, சண்முகவள்ளி என்கிற மனைவியும், குணசேகரன், ராஜசேகரன் என்கிற மகன்களும் உள்ளனர். எம்.எல்.ஏ. பதவியை சுயலாபத்திற்காக ஒருபோதும் பயன் படுத்தாதவர் நன்மாறன். இரண்டாம் முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானபின் ஒருசமயம், அவருக்கான சர்க்கரை மாத்திரை களை வாங்க அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் சென்று நின்றார். அவரைத் தெரிந்தவர்கள் மருந்து விநியோ கம் செய்துகொண்டிருந்த ஊழியரிடம், “"எம்.எல்.ஏ. மருந்து வாங்க வந்துள்ளார் சீக்கிரம் கொடுங்கள்'’என்றுசொல்ல, "எம்.எல்.ஏ.வா எங்கே?'’என பதறியடித்து வரிசைக்கு வந்து, "அய்யா உள்ளே வாருங்கள்'’என்றார். அதற்கு நன்மாறன், "எனக்கு முன்னால் வந்தவர்கள் தொலைதூர கிராமங்களில் இருந்து வந்திருப்பர். அவர்களுக்கு முதலில் மருந்துகளைக் கொடுங்கள். பிறகு நான் வாங்கிக்கொள்கிறேன். பதவி என்பது மக்களுக்கு சேவை செய்யும் கூடுதல் பொறுப்பே''’என முன்னால் சென்று வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி. பார்க், டைடல் பார்க் போன்றவற்றை மதுரைக்கு கொண்டுவரவும் பயன்படுத்திக் கொண்டவர். மதுரையில் உயர்நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பைச் செலுத்தி யவர். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.
அண்மையில் தனக்கென்று குடி யிருக்க சொந்த வீடு ஒன்றை ஒதுக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்துக்கு நேரில் வந்து தனது மனைவி யோடு மனு கொடுத்தார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவி கள் வந்ததைக்கூட மறுத்துவிட்டார்.
நன்மாறன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர், மதுக்கூர் ராமலிங்கம், நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.வெங்க டேசன் உள்ளிட்டோர் சென்றுபார்த் தனர். அவரது உடலுக்கு முதல்வர், நமது நக்கீரன் ஆசிரியர் உள்பட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் வானிலிருந்து ஒரு அரிய நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது.