தோழர்!
'தோழர்' என்ற வார்த்தைக்கு அடையாளமாக மூத்த தோழராய்... எளிய மக்களுக்காகக் குரல் கொடுக்கும் களப்போராளியாய்... கம்யூனிச சித்தாந்தத்தின் அடையாளமாய் திகழ்பவரே "தகைசால் தமிழர்' தோழர் இரா.நல்லகண்ணு ஐயா! தனது 98-வது பிறந்த நாளையொட்டி, டிசம்பர் 26ஆம் தேதி திங்களன்று, சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், தோழர் நல்லகண்ணு கொடி ஏற்றினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு நேரில் சென்று, ஐயா நல்லகண்ணுவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச் சர் சி.வி.கணேசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தோழர் சி.மகேந்திரன், காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணன், கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னி அரசு, ஓவியர் மருது, திரைப்பட தயாரிப்பாளர் கலைப் புலி தாணு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக் களைத் தெரிவித்தனர். திருநாவுக்கரசர் எம்.பி. தொலைபேசி மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் பல கட்சி நிர்வாகிகள், சமூக ஆர் வலர்கள், பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின்னர், தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, “"தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத தீரம் ஆகியவற்றின் மறுபெயர்தான் ஐயா நல்லகண்ணு. இந்த நாளில்தான், 97 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஐயா நல்லகண்ணு பிறந்தார். இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இதே நாளில்தான், சீனப் புரட்சியாளர் மாவோ பிறந்தார். போராளியான ஐயா நல்லகண்ணுவின் பெயர், நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று, மலை யிலிருந்து உருட்டிக் கொலை செய்துவிடுவோம் என்று அச்சுறுத்தினார்கள். தீயால் அவரது முகத் தைப் பொசுக்கினார்கள். ஆனால், அவர் எதற்கும் அஞ்சவில்லை. இப்படிப்பட்ட தியாக சீலர்களைப் பார்ப்பது அரிது'' என்று பாராட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், "இன்றைக்கு நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பெருமைக்குரிய தலைவர் களான என்.சங்கரய்யா, இரா.நல்லகண்ணு ஆகி யோர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் களம் கண்டு, எண்ணற்ற தியாகங்களைச் செய்தவர்கள். ‘அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது, பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும்’ என்கிற முழக்கத்தை இவர்கள்தான் முதன்முதலாக முன்வைத்தனர்''’என்றார்.
ஐயா நல்லகண்ணுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பேசிய முதல்வர், " நம்முடைய தமிழக அரசின் சார்பில், “தகைசால் தமிழர் விருதினை முதலாமாண்டு, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரையா அவர்களுக்கும், இரண்டாவது ஆண்டு, நம்முடைய மதிப்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர் களுக்கும் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறோம். இவர்களுக்கெல்லாம், வழங்கிய காரணத்தால்தான், அந்த விருதுக்கு பெருமை கிடைத்திருக்கிறது.
இந்த 98 வயதிலும், அவர் தன்னுடைய கொள்கையிலிருந்து என்றைக்கும் நழுவி விடாமல், கொள்கைக்கு இலக்கணமாக, இலட்சியத்திற்கு இலக்கணமாக, இந்த தள்ளாத வயதிலும் ஆற்றிக்கொண்டிருக்கக்கூடிய இந்த அரும்பணி தொடரவேண்டும். உங்களால் உருவாக்கப் பட்டிருக்கிற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு ஒரு பக்கபலமாக இருந்து தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்க வேண்டும்'' என்றார்.
நிறைவாக, அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஐயா நல்லகண்ணு, "மத்திய அரசு மதச்சார்பை வைத்துக்கொண்டு, மதத்தை வைத்துக்கொண்டு, இன்றைக்கு நாட்டைச் சீரழிக்க முயற்சிக்கிறது. அதை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் 25, ஞாயிறன்று மாலை 4 மணியள வில், ஐயா நல்லகண்ணுவின் பிறந்தநாளை முன் னிட்டு, அவரது இல்லத்தில், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் அருள் தலைமையிலான சமூக ஆர்வலர்கள், ஐயா நல்ல கண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரி வித்து, கேக் வெட்டும்படி செய்தனர். அப்போது, "திணை நிலவாசிகள்' நாடகக்குழுக் கலைஞர்களின் சார்பாக, இயக்குநர் பகு இயக்கிய, மதுரை சிறைச்சாலையில் ஐயா நல்லகண்ணுவின் சிறைவாச வாழ்க்கை குறித்த... "சிறையிலிருந்து ஒரு இசை' என்ற நாடகத்தை நடத்தினார்கள். நிலோஃபர் என்ற சிறுமி சிலம்பாட்டம் ஆடினாள். சுதந்திரப் போராட்டம் குறித்த பாடல்கள் பாடப்பட்டன. பறையிசையுடன் கொண்டாடப்பட்டது.
-தொகுப்பு: தெ.சு.கவுதமன்
படங்கள்: அசோக்
தகவல் உதவி: ஐயா நல்லகண்ணுவின் பேத்தி கண்ணம்மா