ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய மாரியம்மன் கோயில். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் திருவிழா நடக்கும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால் திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திருவிழா நடைபெற்றது.
இந்த மாரியம்மன் கோயிலின் பின்புறம் கிருஸ்துவர்களின் சி.எஸ்.ஐ. நிறுவனப் பள்ளி, மருத்துவமனைகள் எனப் பல ஏக்கர் நிலத்தில் உள்ளன. பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தைத்தான் சி.எஸ்.ஐ கிருஸ்துவ அமைப்பு ஆக்கிரமித்து வைத்துள்ளதாக இந்துமத அமைப்புகள் நீண்டகாலமாக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின்போது இப்பிரச்சனையை எழுப்பி மதரீதியான பதட்டத்தை உண்டுபண்ணுவார்கள். இதற்கென, 'ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம்' என்ற பெயரில் பா.ஜ.க. இந்து முன்னணி அமைப்பினர் மறைமுகமாகப் போராட்டத்தை நடத்தினர்.
இவ்வருடமும் அந்த அமைப்பின் சார்பில் சி.எஸ்.ஐ அமைப்பின் நிலத்தை மீட்கக்கோரி மாரியம்மன் கோவில் முன்பு 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தனர். அதைத் தடுப்பதற்காக மார்ச் 31-ம் தேதி காலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நில மீட்பு இயக்கத்தினர் என்ற பெயரில் பா.ஜ.க., இந்து முன்னணியினர் 30 பேர் மாரியம் மன் கோயில் அருகே உள்ள ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். பா.ஜ.க. மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி தலைமையில் அதன் நிர்வாகிகள், 24 பேர் திடீரென மாரியம்மன் கோயில் அருகே வந்து போலீஸ் தடையை மீறி 10 தேங்காய்களை மட்டும் உடைத்துவிட்டு 'பாரத் மாதாஜி' என சம்பந்தமில்லாமல் கோஷம் போட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். போலீசார் சரஸ்வதி எம்.எல்.ஏ. உட்பட 24 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். சுய விளம்பர அரசியலுக்காக மதப் பகையை உருவாக்க தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீதும் ஈரோடு போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பக்தர்கள் தெய்வ நம்பிக்கைக்காக அதிகம் கூடும் இடங்களிலெல்லாம் பா.ஜ.க. வினர் மத அரசியலைப் புகுத்தி அரசியல் லாபத்தை அள்ள முயல்வது தொடர்ந்து நடை பெறுகிறது. இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், "கோயில் திருவிழாக்களில் கம்யூ னிஸ்ட்டுகளாகிய நாம் ஏன் கலந்துகொள்ளக் கூடாது?'' என்ற பேச்சு வைரலாகி விவாதப் பொருளாகியுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "இது மார்க்ஸிய தத்துவத்திற்கு எதிரானது. இளைஞர்களை, குறிப்பாக சி.பி.எம்.மில் உள்ள இளைஞர்களைக்கூட இது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். புரட்சிகர இளைஞர்களாக வார்த்தெடுப்பதற்குப் பதில் புராணச் சகதியில் அவர்களை தள்ளிவிடலாமா?'' என கேள்வியெழுப்பி "சி.பி.எம். கவனிக்க வேண்டும்'' என வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார்.
இதுபற்றி சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.
"கோயில் நிர்வாகத்தில் பங்கெடுக்காமல் நாம் தள்ளி நின்றால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அங்கு ஊடுருவி மதவெறி அரசியலைச் செய்கிறார்கள். நிர்வாகத்தில் இருந்தால் அதை நாம் தடுக்கலாம். மற்றபடி பூஜை, அபிஷேகம், ஆராதனையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் செய்யப்போவதில்லை. அதிக மக்கள் கூடும் இடங்கள் என்றால், அது கோயில்கள், திருவிழாக்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லா ஊர்க்கோயில் நிகழ்ச்சி களிலும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் ஊடுருவி சம்பந்தமே இல்லாமல் காவிக்கொடியைக் கட்டுகிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது. கோயில் மூலமாக மதவெறி அரசியலைப் புகுத்தும் கும்பலை நாம் கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்'' என்றார். மதுரையில் நடந்த சி.பி.எம். மாநாட்டிலும் இதற்கான தீர்மானம் நிறைவேறியது.
சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், "கிராமங்களில் சிறு தெய்வ வழிபாட்டுக் கோயில் நிர்வாகங்களில் ஏற்கனவே கம்யூனிஸ்ட்டுகள் இருந்துள்ளார்கள். அதற்குக் காரணம், நிர்வாகம் நேர்மையாக நடக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கையாக உள்ளார்கள்.
பக்தி, இறை நம்பிக்கையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்போதும் கிடையாது. அதிக மக்கள் கூடுமிடமாக உள்ள கோயிலுக்குள் மதவாத சக்திகள் ஊடுருவாமல் அதைத் தடுக்க வேண்டும். சி.பி.எம். பாலகிருஷ்ணன் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே மார்க்சீய தத்துவத்தின்படி செயல்படுபவைதான்'' என்றார். மதவாத சக்திகளைத் தடுக்க கம்யூனிஸ்ட்டுகள் கோயில் நிர்வாகத்தில் ஈடுபடும் கருத்தோடு, தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விழுங்கி அதன் கரங்களை விரிப்பதையும் இடதுசாரிகள் கவனிக்க வேண்டும்.