புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன், ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்களைக் காப்பாற்றிவிட்டு தான் பலியான சம்பவம் பலரையும் நெஞ்சுகனக்கச் செய்துள்ளது.
புதுச்சேரி மடுகரை, இந்திரா நகரில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் வசிப்பவர்கள் மணிகண்டன் -விஜயலட்சுமி தம்பதி. தச்சுத் தொழில் செய்துவரும் மணிகண்டனுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஆகாஷ். இளைய மகன் விஷ்வா. அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த பாகவதர் பாவாடை என்கிற பார்த்தசாரதி தேசிகதாசன் ஸ்ரீ பார்த்தசாரதி பஜனைக்கூடம் நடத்திவருகிறார். இவரது பஜனை ஊர்வலத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமியர்களும் கலந்துகொண்ட னர். கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி இந்த பஜனைக் குழுவினர் இரண்டு வேன்களில் பண்ருட்டி, திருவதிகை, உளுந்தூர் பேட்டை, பரிக்கல் உள்ளிட்ட பல இடங்களிலுள்ள பெருமாள் கோவில்களுக்கு சுற்றுலா சென்றனர்.
பின்னர் ஊருக்குக் கிளம்பியபோது சின்ன கள்ளிப் பட்டி அருகே தென்பெண்ணையாற்றில் கொஞ்சமாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்ததும் சிறுவர்கள் ஆற்றில் குளிக்கவேண்டும் என்று ஆசைப் பட்டு பாகவதரிடம் அடம்பிடித்துள்ளனர். சிறுவர்கள் ஆசைப்படவே, ஆழமில்லாத பகுதியில் ஓரமாக இருந்து குளியுங்கள் என்று சொல்லிவிட்டு, இயற்கை உபாதைக்காக மறைவிடத்திற்குச் சென்றுள்ளார் பாகவதர். ஆனால் சிறுவர்களோ அங்கே குளிக்காமல் அருகிலேயே அதிக தண்ணீர் இருந்த ஒரு இடத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது கோபி, முத்து, அருண், விஷ்வா ஆகிய 4 சிறுவர்கள் பள்ளமான பகுதியில் நீரில் மூழ்கத்தொடங்கி கூச்சலிட்டுள்ளனர். இதை கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆகாஷ், ஓடோடிப் போய் தனது தம்பி விஷ்வாவையும், மற்ற 3 சிறுவர்களையும் இழுத்து கரையில் போட்டுக் காப்பாற்றினான்.
சிறுவர்களைக் காப்பாற்றும்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ் தவறி ஆழமாக பள்ளமிருந்த பகுதியில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கினான். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து அவனை வெளியே தூக்கி வந்தபோது, ஆகாஷ் இறந்துவிட்டான்.
தகவலறிந்து பதறித்துடித்து ஓடிவந்த ஆகாஷின் தாயார், "அன்னிக்கு காலைல பஜனை டூருக்கு போறோம் அனுப்பிவிடுங் கன்னு ஒரு தம்பி சொல்லிச்சு. கோயிலுக்கு தானேன்னு அனுப்பிவெச்சேன். நாலு மணிக்கு எல்லாம் வந்துடுவேம்மான்னு சொல்லிட்டுப் போனான். மதியம் ரெண்டே காலுக்கு என்னோட சின்னப் பையன் பேசி னான். "அம்மா தண்ணில விழுந்த எங்கள எல்லாம் காப்பாத்தின அண்ணன தண்ணி இழுத்துட்டுப் போயிடுச்சும்மா'னு அழுது கிட்டே சொன்னான். எனக்கு ஒண்ணுமே புரியல. லீவு நாள்ல வேலைக்குப் போவான்... வீட்டுச் செலவுக்கு, படிப்புச் செலவுக்கு சம்பாதிச்சுட்டு வருவான். எம் புள்ள இருக்குது, நல்லா சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்தும்னு நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டானே...''’என கதறியபடி தாயார் விஜயலட்சுமி கண்ணீர் வடித்தது மனதைப் பிசைந்தது.
ஆகாஷின் உறவினரான மணிகண் டன் நம்மிடம், "மணல் அள்ளுறவங்களோட பேராசைக்கு பல உயிர்கள் இந்த மாதிரி பலியாகியிருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கூட இதேபோல ஏழு பொண்ணுங்க, நெல்லிகுப்பம் அருகில், கெடிலம் ஆத்துல பலியானாங்க. ஆத்துல மணலை திருட்டுத் தனமாக அள்ளுகிறவர் கள் வெட்டிய பள்ளங் கள் மூடப்படாமல் இருந்ததால் ஒருசில இடங்கள் அதிக ஆழ மாக இருந்திருக்கிறது. அது தெரியாம பசங்க அந்தப் பகுதியில் குளிக்க இறங்கும்போது நாலு பேரு ஆழத்தில் சிக்கியிருக்காங்க. அவங்க நாலு பேரையும் காப்பாத்தும்போது சுழலில் ஆகாஷ் சிக்கிக்கொண்டான். நாலு உயிர்களைக் காப்பாத்திட்டு தன்னோட உயிரை தாரை வார்த்திருக்கான் ஆகாஷ். மணல் அள்ளுறதைத் தடுக் கிறதுல அதிகாரிங்க நடவடிக்கை போதாது'' என்கிறார்.
உதவி தேவைப்பட்ட ஆகாஷின் பெற்றோரை புதுச் சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க அழைத்துச் சென்றோம். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நடந்த விவரங்களை ஆகாஷின் பெற்றோர் கூறினர். அதையடுத்து உடனடி யாக தன்னுடைய உதவியாளரை அழைத்த முதலமைச்சர் ரங்கசாமி, “"நான்கு சிறுவர்களைக் காப்பாற்றி தன்னுடைய உயிரைப் பலி கொடுத்திருக்கிறான்' எனக்கூறி உடனடியாக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் பெற்றோருக்கு தங்கள் மகனுக்கு ஈடாகாது. தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் வந்த சிறுவர்களைக் காப்பாற்றிய ஆகாஷை, அவனது தைரியத்துக்காக அரசாங்கம் மேலும் கௌரவப்படுத்த வேண்டும்.
-சுந்தரபாண்டியன்