மதுரை மாவட்ட ஆட்சியராக சங்கீதா வந்தது முதலே அவருக்கு கீழே வேலை செய்யும் வருவாய்த்துறை அதிகாரி களில் ஆரம்பித்து, பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், தி.மு.க. கூட்டணிக்கட்சி யினர் என அனைவர் மத்தியிலும் அதிருப்தி யை சம்பாதித்துவருகிறார். ஏதேனும் புகாரளிக்க தி.மு.க. கரைவேட்டியினர் வந்தாலே எரிச்சலடைகிறாராம்.
அவர் பொறுப்பேற்றபின்னர் 2023, அக்டோபர் 23-ல் நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டத்திலேயே தாமத மாக வந்த அரசு அதிகாரிகளை கூட்டத்தில் பங்கேற்க விடாமல் திருப்பியனுப்பியது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் மூன்று கர்ப்பிணிப்பெண்கள் அடுத்தடுத்து உயிரிழக்க, அதற்கு மருத்துவர்களின் கவனக் குறைவே காரணமெனக்கூறி அவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் அனுப்பிய கடிதத்தால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தன்னை கண்டிப்பானவர் போல ஆட்சியர் காட்டிக் கொண்டாலும் பா.ஜ.க.வினருக்கு ஆதரவாகச் செயல் படுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் பா.ஜ.க.வின் பொய்ப்புகாரால் வி.சி.க. கொடிக்கம்பம் இடித்து அகற்றப் பட்டது. பேரையூர், கல்லுப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களிலும் வி.சி.க.வுக்கு எதிரான முடிவையே ஆட்சியர் எடுப்பதாக திருமாவளவனே குற்றம்சாட்டி யிருந்தார். "மதுரை அனுப்பானடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பலகையை மறைத்து பா.ஜ.க. கொடிக் கம்பம் வைத்த விவகாரத்திலும் மாவட்ட ஆட்சியர்வரை புகாரளிக் கப்பட்டும் இதுவரை நடவடிக்கை யில்லை'' என்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுப்பானடி பொறுப்பாளர் விஜயராஜன். மேலும், "மாவட்ட ஆட்சி யரும், வருவாய்த்துறை, காவல்துறை உயரதிகாரி களும் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நடவடிக்கையில் இறங்கு கிறார்களோ என்று சந்தேகப் படுகிறோம். இதற்கு பல்வேறு சம்பவங்களை உதாரணம் காட்டமுடியும்'' என்றார்.
மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவோ, அமைச்சர் மூர்த்தி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கெடுப்பதும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பதுமாக பிளவை ஏற்படுத்துகிறார் என்கிறார்கள் பி.டி.ஆர். ஆதரவாளர்கள். வார்டிலுள்ள மக்கள் பிரச் சனையை தி.மு.க.வினர் ஆட்சியரிடம் எடுத்துச்சென்றால், "தி.மு.க. கரை வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் உடனே செய்து கொடுக்கவேண்டுமா?'' எனக் கேட்டு புறந்தள்ளுபவர், அதையே பா.ஜ.க.வினர் கொண்டுசென்றால் அதைக்கேட்டு நிறைவேற்றுகிறார். நாங்கள் ஆளுங்கட்சி என்றுதான் பேர், ஆனால் பா.ஜ.க.வினருக்கு மட்டுமே அவர் செய்துதருகிறார். இதுதான் எங்களுக்கே விளங்க வில்லை. அமைச்சர் மூர்த்தியிடம் இதுகுறித்து எவ்வளவோ முறை சொல்லியும் அவர் கண்டு கொள்வதேயில்லை எனப் பரிதாபமாகக் கூறுகின்றனர் தி.மு.க.வினர்.
தற்போது மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள நடிகர் சூரியின் ஹோட்டலுக்கு எதிரான அரசியல் காரணமாக, வேண்டுமென்றே பா.ஜ.க.வின் ஆதரவாளரின் ஸ்டார் ட்ரஸ்ட் மூலமாக ஹோட் டலுக்கு முன்பாகவே மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச உணவுப்பொட்டலங்களை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சூரியின் ஹோட்டல் வியாபாரத் தில் பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணத்தோடு இப்படி செய்ததில், அப்பகுதியில் அதிக மக்கள் குவிந்து மருத்துவ மனையின் செயல்பாட்டுக்கே இடைஞ்சலாக மருத்துவமனை டீன் அவர்களை வெளியேற்றினார். உடனே பா.ஜ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க, அவர் உடனடியாக, ஹோட்டலுக்கு எதிராகவே உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கு அனுமதியளித்தார். இப்படியாக பா.ஜ.க.வினர் எந்த பிரச்சனையை ஆட்சியரிடம் கொண்டுசென்றாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் ஆட்சியர், மற்ற கட்சியினர் கொண்டுசெல்லும் மக்கள் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதேயில்லையாம்.
அதேபோல், வழக்கம்போல் அரசு வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்படும் வாடகை வீட்டிற்கு விண்ணப்பித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு வாடகைக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா இதுவரை ஒப்புதல் கையெழுத்து வழங்கவில்லை. தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி நிருபரின் விண்ணப்பத்திற்கு கூட கலெக்டர் கையெழுத்திடாதது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, மாவட்ட அமைச்சரின் ஆதரவாளர்கள், ஆளுங்கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்களென அனைவருமே மாவட்ட ஆட்சியர் குறித்து குற்றம் சுமத்த, பா.ஜ.க.வினர் மட்டுமே மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவு தெரிவித்துவருவது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊடுருவல் குறித்த பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார்கள்.