ஈரோடு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பணியிலிருக்கும் ராஜகோபால் சுங்கரா, ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து உடனடியாக மாற்றவேண்டும் என தமிழக விவசாய சங்கம் தீர்மானம் இயற்றி கோரிக்கை வைத்துள்ளது.
என்ன பிரச்சனை எனக் கேட்டோம்.
அச் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பு நம்மிடம், "விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொறுமையாக பிரச்சனை களைக் கேட்டு அதற்கு தீர்வுசொல்ல கலெக்டருக்கு தெரியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையை விவசாயிகள் கூறினால் சத்தமாகக் கத்துகிறார். ஒரு கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாநில நிர்வாகி முனுசாமி பேசும்போது இடைமறித்த ஆட்சியர் "உக்காருங்க பேசாதீங்க' எனக் கூறினார்.
சங்கத்தின் தலைவரான முனு சாமி, “"நான் ஒரு அமைப்பின் நிர்வாகி, மாவட்டம் முழுக்க உள்ள விவசாயி களைச் சந்திக்கிறேன். அவர்களின் பிரச் சினையை உங்களிடம்தானே கூறவேண்டும்' எனக் கூற, அதற்கு கலெக்டர் "நீங்க மாவட்ட தலைவர் ஆனாலும் மாநில தலைவரானாலும் எனக்கு ஒன்றுதான். உட்காருங்க' என்று மிரட்டினார்.
மற்றொரு விவசாய சங்க நிர்வாகியான ஈஸ்வரமூர்த்தி ஒருமுறை கலெக்டரை சந்திக்க சென்றபோது, அருகே இருந்த ஒரு நாற்காலியை நகர்த்திப்போட்டு உட்கார்ந்துவிட்டார். அதற்கு "இது என்ன கல்யாண சத்திரமா? சேர தூக்கிப் போட்டு உட்காருறீங்க.. உங்க நடவடிக்கை சரியில்லை, மன்னிப்பு கேட்டுட்டு வெளியில போங்க' என மிரட்டினார் கலெக்டர்.
விவசாய சங்க தலைவர் ரத்தினசாமி இவர் முன் நின்று பேசும்போது இயல்பாக கைநீட்டிப் பேசிவிட்டார். அதற்கு இந்த கலெக்டர் 'என்ன கைநீட்டிப் பேசுறீங்க...' என கடுமையாக மிரட்டத் தொடங்கினார்.
இத்தனைக்கும் அந்த விவசாய சங்க தலைவர் முக்கியமான ஒரு அமைச் சரின் சம்பந்தி. அவருக்கே கலெக்டர் இவ்வளவுதான் மரியாதை கொடுத்தார்.
கீழ்பவானி பாசனத்திற்கு ஐந்து சுற்று நீர் தரலாம் என அரசுக்கு இவர் பரிந்துரை அனுப்பியதால் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், சென்ற வருடத்தில் நான்கு சுற்றுக்குக்கூட தண்ணீர் வரவில்லை. இதனால் கடைசியில் கடலை, நெல், எள் எனப் பயிரிட்ட அறுபதாயிரம் ஏக்கர் விவசாய நிலம் கருகியது. இதற்குக் காரணம் கலெக்டரின் அறியாமைதான். இப்படி எதுவும் தெரியாத ஒரு நபர் அதிகாரியாக வந்து அமர்ந்துகொண்டு மிரட்டல்போக்கை தொடர்வது சரியில்லை. இவரை உடனடியாக ஈரோட்டிலிருந்து மாற்றவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்
இயற்கை வேளாண்மை விவசாயியான அரிச்சலூர் செல்வம், "ஒருமுறை விவசாயிகள் பிரச் சினைக்காக கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக நாங்கள் 6 பேர் அவரது அலுவலகத்துக்குச் சென் றோம். மனு கொடுப்பதை விவ சாயிகளுக்கு தெரிவிப்பதற்காக எனது செல்போனில் புகைப்படம் எடுத்தேன். திடீரென என்னைப் பார்த்து சத்தம் போட்ட கலெக்டர், எனது செல்போனை பிடுங்கச் சொல்லி உத்தரவிட்டார். எனது செல்போனை பறித்து வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டி அனுப்பி வைத்தார். இரு வாரங்களுக்குப் பிறகே எங்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் எனது செல்போனை கேட்டு வாங்கி வந்தார். ஒரு சேடிஸ்ட் போல நடந்துகொண்டார்'' என குமுறினார்.
விவசாயிகள், பொதுமக்களிடம்தான் இவர் இப்படி நடந்துகொள்கிறார் என்றால் உடன் பணிபுரியும் அரசு ஊழியர்களிடம் இதைவிட மோசமாக நடந்துகொள்கிறார் என கூறுகிறார் கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் ஓய்வுபெற்றவருமான ராஜ்குமார், “"என்னதான் படித்துவிட்டு கலெக்டராக வந்தாலும் அனுபவமும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் தேவை. ஆனால் இந்த ராஜகோபாலிடம் எதுவுமே இல்லை. எந்த நடைமுறையும் தெரியாமல் அரசு ஊழியர்களிடம் நான் சொல்வதை நீ கேள் எனத்தான் கூறுகிறார். ஆய்வுக்கூட்டங்களில் பெண் ஊழியர்களை அவர்கள் அணிந்திருக்கும் உடைகளின் கலரைச் சொல்லி, சுடிதார், பிளவுஸ் என்றெல்லாம் கூறி எழுந்து பதில் சொல்லுங்க.. எனக் கூறுவது அநாகரிகமான செயல்.
ஒரு குறிப்பிட்ட துறையின் பெண் ஊழியர் ஒருவர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்திருக் கிறார். அந்த பெண் ஊழியரை அரசு மருத்துவ மனைக்கு போய் பரிசோதனை செய்து சர்டிபிகேட் கொண்டு வரச்சொல்லுங்க என உத்தரவு போட்டிருக்கிறார். இது மனிதாபிமானமற்ற செயல்'' என்றார்.
ஆளுங்கட்சியினரிடம் எப்படி நடந்துகொள்கிறார் என தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகி ஒருவரைக் கேட்ட போது, "மக்களின் பிரச்சினைகளை இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லமுடியாது. காரணம் இந்த கலெக்டருக்குத் தெரிந்த ஒரே ஒருவர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அமைச்சர் முத்துசாமி மட்டும்தான். கட்சியின் மாவட்ட நிர்வாகிகளோ, முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களோ இவரை அணுக முடியாது. கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு யாரும் வரக்கூடாது என தடையாணை பிறப்பித்திருக்கிறார். முதலமைச்சர்கூட முகாம் அலுவலகத்தில் எல்லோரையும் சந்திக்கிறார். இவை எல்லாவற்றையும் விட கொடுமை இவரது மனைவி லட்சுமி பவ்யா நீலகிரி மாவட்ட கலெக்டர். இரண்டு மாவட்டத்திற்கும் தானே அரசர் என இப்போது இவர் மமதையில் இருக்கிறார்'' என்றார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் கருத்தை அறிய அவரது செல்போன் எண்ணுக்கு (94லலலலலல00) தொடர்புகொண்டோம். எடுக்கப்படாமல் போக, பிறகு அவரது உதவியாளர் என ஒருவர் அழைத்தார். "நாம் ஆட்சியாளரின் கருத்தை அறிந்து செய்தி வெளியிடவேண்டும்'' என கேட்டோம். "அதற்கு அவர் ஆட்சியாளர் ஒரு கூட்டத்தில் இருக்கிறார் முடிந்தபிறகு அழைக் கிறேன்'' என்றார். இதுவரை அழைக்கவில்லை.