தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருப்பதும் அரசிய லுக்கு வந்தவர்கள் ஆதாயம் பார்க்காமல் இருப்பதும் அரிது. ஆனால் குஜராத் அரசியல்வாதிகள் புறங்கையை கொஞ்சம் அதிகமாக நக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. சமீபத்தில் நவராத்திரியை முன்னிட்டு குஜராத் பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள பாலன்பூரில் ரயில் கடந்துசெல்வதற்காக கட்டப்பட்ட ஓவர்லிபிரிட்ஜ் சரிந்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. அந்தப் பாலத்தின்கீழ் நிறுத்தப்பட்ட ரிக்சாவிலிருந்த 2 பேர் விபத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
குஜராத்தில், சாலைகள் மற்றும் கட்டு மானத்துறை, மாநில முதல்வரான பூபேந்திர படேலின் கீழ் வருவதால், அவசரஅவசரமாக இந்த விபத்துக்கான காரணங்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரம்குறைவான கட்டுமானப் பொருட்கள் இந்த விபத்துக்குக் காரணம் இல்லை. கட்டுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு கார ணம் என மாநில அரசுத் தரப்பு சமாளித்துள் ளது. மாறாக, காங்கிரஸ் தலைவரான அமித் சவ்தாவோ, “"இந்த விபத்தில் உடைசல் களுக்கு நடுவில் மூன்று பேர் புதைந்து போயுள்ளனர். அவர்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பால கட்டுமானப் பணிகளை விடவும், ஊழல்தான் வளர்ச்சி யடைந்துள்ளது. அதிகாரிகளை இடம் மாற்றுவது மட்டும் போதாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்''” என்றிருக்கிறார்.
ஜி.பி.சி. இன்ஃப்ராஸ்ட்ரெக்சருக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கோடிக்கணக்கான பணத்தை தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது இந்நிறுவனம். தவிரவும், இந்த நிறுவனம் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் உள்ளது. பிறகு ஏன் அந்த ஒப்பந்தம் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட் டது என எதிர்க்கட்சிகள் விளாச ஆரம்பித்துள் ளன.
குஜராத்தில் முதன்முதலாகச் சரியும் பாலம் இதுவல்ல. கடந்த பதினாறு வருடங்களில் பாலங்கள், காங்கிரீட் பில்டிங்குகள் சரிந்து விழுந்த 16 சம்பவங்கள் நடந்துள்ளன. 2022-ல் மட்டும் இத்தகைய எட்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. பிடுங்கியெடுக்கும் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க, மாநில அரசு, இத்தகைய கட்டங்கள் இடிந்துவிழும் நிகழ்வுகளைத் தவிர்க்க அரசு கட்டுமானப் பணிகளில் பின்பற்றவேண்டிய புதிய கொள்கைகளை வகுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான், ராஜ்கோட்டில் விநாயகர் விழா ஒன்றில், சாக்கடையை மூடியிருந்த காங்கிரீட் சிலாப் சரிய, அப்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்ததோடு, 20 பேர் சாக்கடைக்குள் விழுந்து காயமடைந்தனர். ஜூன் மாதத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட, மின்டோலா ஆற்றைக் கடப்பதற்கான பாலம் உடைந்து விழுந்தது. நல்லவேளையாக உயிர்கள் எதுவும் பலியாகவில்லை. ஒருவேளை வாகனப் போக்கு வரத்து அனுமதிக்கப்பட்டு அப் போது பாலம் சேதமடைந்திருந் தால் எத்தனை பேர் பலியாகி யிருப்பர் என்பதனை கற்பனை செய்யவே முடியவில்லை.
குஜராத்தின் மிகப்பெரிய பால விபத்து மோர்பி பால விபத்துதான். 2022, அக்டோ பர் 30-ல் நடந்த இந்த விபத்தில் 135 பேர் பலியானதோடு, 180 பேர் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலம் மூடப்பட்டிருந்த இந்தப் பாலம், சீரமைப்புப் பணிக்குப் பின்னர் குஜராத் புது வருடத்துக்கு நெருக்கமாகத் திறக்கப்பட்டது. மச்சு நதியில் அமைந்துள்ள தொங்கு பால வகையான இந்தப் பாலத்தின் சீரமைப்புப் பணி மோர்பி நகரின் நகராட்சியால், ஒரேவோ கடிகாரக் கம்பெனியிடம் விடப்பட்டது. சீரமைப்புக்குப் பின் பாலப் பணியை மேற்கொண்டவர்கள், இன்னும் ஒரு எட்டுப் பத்து வருடங்களுக்கு இந்தப் பாலத்தைப் பற்றிக் கவ லைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார்கள்.
ஆனால், ஐந்தேநாளில் அந்தப் பாலம் உடைந்ததுடன், அதிலிருந்தவர்கள் பாலத்துக் கிடையில் சிக்கி நீரில் மூழ்கிப்போனார்கள்.
விபத்துக்குப் பின் நகராட்சி தரவேண்டிய அத்தாட்சிப் பத்திரம் பெறாமலேயே பாலம் திறக்கப்பட்டுவிட்டது என அதிகாரிகள் நழுவிக்கொண்டார்கள். ஐந்து நபர் குழுவொன்று இந்த விபத்தை விசாரிக்க உருவாக்கப்பட்டது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களை மோடி பார்வையிட வந்த காரணத்தால், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு வண்ணம்பூசுதல், பழுது பார்த்தல் என ஒரு பெருந்தொகை அரசு மருத்துவமனைக்குச் செலவிடப்பட்டது மோடி பார்வையிட வரும் மருத்துவமனைக்குச் செலவிட்டது போல, அந்த பாலத்துக்கும் போதுமான தொகை செலவிட்டிருக்கலாம் என சர்ச்சைக் குரல்கள் கிளம்பின.
அதேபோல பெரிய சர்ச்சைக்குள்ளான மற்றொரு பாலம் அகமதாபாத் ஹட்கேஷ்வர் ஓவர்பிரிட்ஜ். இது கட்டி முடிக்கப்பட்டதும் இதனைச் சோதித்த ரூர்கி ஐ.ஐ.டி. நிறுவனம், இது பயன்படுத்த தகுதியானதல்ல என அறிவித்தது. பிறகு வேறு வழியேயின்றி 2022-ல் கைவிடப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து கட்டி, பின் அதை இடிப்பதற்கு ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்து அழிக்கப்பட்டது.
அரசுத் திட்டங்களில் ஒப்பந்தம் விடப்படும்போது, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கமிஷன் பெறுவதும், தரப்பட்ட கமிஷனுக்கேற்ப கட்டுமானத்தின்போது தரத்தில் சமரசம் செய்துகொள்வதும் இந்தியாவில் புதிதல்ல. ஆனால் தொடர்ச்சியாக பாலங்களிலும், அரசு கட்டுமானப் பணிகளிலும் விபத்துகள் நிகழ்வது குஜராத்தை நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வை திரும்பக் காரணமாயிருக்கிறது.
கமிஷன், கரப்ஷன் விமர்சனம் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியிழக்கக் காரணமானது. குஜராத்திலும் அதே காட்சி திரும்ப அரங்கேறிவிடக்கூடாது என பா.ஜ.க. தலைமை டென்ஷனாகியிருக்கிறது.