துரைப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் அரசு கல்லூரி என்பதே இல்லை. அரசு உதவிபெறும் கல்லூரியான தன்ராஜ் பெய்டு ஜெயின் காலேஜை மட்டுமே நம்பி இப்பகுதி ஏழை எளிய மாணவர்கள் படித்துவருகின்றனர். குறிப்பாக, கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியான பின்தங்கிய மாணவர்கள் அதிகம்.
இந்நிலையில், கடந்த இரண்டாண்டு காலமாக அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாமல், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதி ஏழை மாணவர்கள் கல்லூரியில் பணம்கட்டிச் சேரமுடியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
"இந்தக் கல்லூரி 1972-ஆம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் கல்லூரியாக சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவருகிறது. நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருந்துவரும் சூழ்நிலையிலும், இக்கல்லூரி நிர்வாகமோ தீர்ப்பு வாங்கிவிட்டதாக பொய்யான தகவலைச் சொல்லி மாணவர்கள் சேர்க்கையை நடத்தாமலே வைத்துள்ளது'' என அங்குள்ள பேராசிரியர்களும் மாணவ- மாணவியர்களின் பெற்றோர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இக்கல்லூரியின் செக்ரெட்டரி ஹரிஸ் எல்.மேத்தா, "அரசிடம் கடந்த 40 ஆண்டு களுக்கு மேலாக அரசு நிதி பெற்று இக்கல்லூரியின் தரத்தை உயர்த்திக்கொண்டு, தற்போது அரசு நிதி தேவையில்லை என்றும் அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளும் தேவையில்லை என்று மூடுவிழா எடுத்து வருகிறார். இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என பொதுமக்கள் கோரிக்கை வைக் கின்றனர்.
ஹரிஸ் எல்.மேத்தாவைத் தொடர்புகொண்டபோது, “"நாங்கள் இதற்கான நீதிமன்ற உத்தரவு வாங்கிவிட்டோம்''’என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை ஆர்.ஜே.டி. உள்பட அதிகாரிகள் பலரும் பேராசிரியர்கள் -மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நீதிமன்றத்திலும் அரசின் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் கல்லூரி செகரட்டரி ஹரீஸ் எல்.மேத்தா மூடுவிழாவுக்கு ரெடியாகிறார்.
மாணவர்களின் எதிர்காலம் காப்பாற்றப் படுமா?