புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நிலங்களுக்குக் கேடாகக் கொண்டுவரப்பட்ட எண்ணெய் எடுக்கும் ஆழ்குழாய்க் கிணறுகளை மூடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் தற்போது மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, நல்லாண்டார் கொல்லை, கல்லிக்கொல்லை, கருவட தெரு, கரு கீழத்தெரு, வானக்கன்காடு, கோட்டைக்காடு, முள்ளங்குறிச்சி, கறம்பக்குடி, புதுப்பட்டி ஆகிய இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம், சுமார் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பரிசோதனை களை நடத்தியது. அங்கெல்லாம் எண்ணெய் எடுத்துச் சோதனை செய்ததில், அவற்றிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுத்து வணிகம் செய்வதால் போதிய வருவாய் கிடைக்காது என சோதனை முடிவில் தெரியவந்தது. அதனால் முயற்சியைக் கைவிட்டது.

oo

இதற்காகத் தோண்டியிருந்த ஆழ்குழாய்க் கிணறுகளில் கசிவு ஏற்படாமல் தடுப்பதற்காக 4 இடங்களில் தரைமட்டத்திலும், நல்லாண்டார் கொல்லை, கல்லிக்கொல்லை, கருவடதெரு உள்ளிட்ட 3 இடங்களில், எந்த நேரத்திலும் இயக்கும் அளவில் வால்வுகள் அமைத்து மூடி வைத்தும் சென்றனர். அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகளுக்குத் தற்போதுவரை குத்தகைத் தொகையை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்குவ துடன், ஆண்டுக்கு ஒருமுறை அதிகாரிகள் வந்து கசிவுகள் உள்ளதா என்று சோதனைகளும் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் தான், கடந்த 2017 பிப்ரவரியில், ஒன்றிய அரசு நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட கச்சாப் பொருட்களை எடுப்பதற்கான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்தது. அதற்கென தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்த நிலையில், நெடுவாசல் மற்றும் சுற்று வட்டாரக் கிராம விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்த நிலையில் அரசியல் கட்சியினர், திரை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து போராட்டக் களங்களுக்கும் வந்தனர். சுமார் 197 நாட்கள் நெடுவாசல் போராட்டம் நடந்தது.

அதே போல நல்லாண்டார் கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் திருவிழா போல மக்கள் திரளுடன் நடந்தது. போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைவதைப் பார்த்து மத்திய, மாநில அமைச்சர்கள், நெடுவாசல் திட்டம் வராது என்று உறுதி அளித்ததோடு, 7 எண்ணெய்க் கிணறுகளையும் மூடி விவசாயிகளிடம் ஒப்படைப்பதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ், போராட்டக்குழுவிடம் தனித்தனியாக எழுதிக் கொடுத்தார்.

இந்த நிலையில், வானக்கன்காடு கிராமத்தில் உள்ள எண்ணெய்க் கிணறில் திடீரெனக் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதால், கடந்த 2017 அக்டோபர் 6 ந் தேதி வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், வெளியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டுவந்து அந்த கிணற்றில் கொட்டி, தற்காலிகமாக மூடிச் சென்றனர். அதன் பிறகு, அக்கிணறுகளைப் பாதுகாப்பான முறையில் முற்றிலுமாக மூட நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் கிணறுகளை பாதுகாப்பாக மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த வருடம், அக்டோபர் 2-ந் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் நெடுவாசல் கிராமத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

oo

இந்த நிலையில், சரியாக மூன்று ஆண்டுகளுக்கு (6-10-2017) முன்பு தற்காலிகமாக மூடப்பட்ட வானக்கன்காடு ஓ.என்.ஜி.சி. கிணறு உள்ள இடத்திற்கு, ஆகஸ்ட் 5-ந் தேதி வடகாடு போலீசாரின் பாதுகாப்போடு, காரைக்காலில் இருந்து ஓ.என்.ஜி.சி. பொது மேலாளர் (ஆழ்குழாய்) சந்தானகுமார், பொறியாளர்கள் அழகு மணவாளன், ராதாகிருஷ்ணன், மண்ணியல் அருண்குமார் மற்றும் தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து குத்தகை நிலத்தை அளவீடு செய்தனர்.

இது குறித்து சந்தான குமார் கூறுகையில்.. "தரை மட்டத்திற்கு கீழே உள்ள 4 ஆழ்குழாய் எண்ணெய்க் கிணறுகள் பயனற்று உள்ளதால் மூடுவதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு அறிக்கையை சில தினங்களில் கொடுத்த பிறகு தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்'' என்றார். பல வருடமாக எண்ணெய்க் கிணறுகளை மூட கோரிக்கை வைத்த விவசாயிகளுக்கு இச்செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும், "வால்வு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளையும் பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றனர்.