மூத்த நடிகர்களுக்கு ஜோடி!
திருமணத்திற்குப் பிறகு கமலுடன் "இந்தியன்-2'வில் நடித்துவரும் காஜல் அகர்வாலுக்கு, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்த "பகவத் கேசரி' படம் சென்ற வாரம் வெளியாகி ஓரளவு பரபரப்பாகிவுள்ளது. இந்நிலையில், வரும் கேரக்டர்கள் எல்லாம் கமல் -பாலகிருஷ்ணா என மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவே வாய்ப்பு வர... அவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்கிறாராம். இதற்கிடையில் தெலுங்கில் "சத்யபாமா' படத்தில் அதிரடி போலீஸ் கமிஷனராக ஆக்ஷனிலும் கலக்கியுள்ளாராம்.
பிரபலங்கள் அணிவகுப்பு!
அஜர்பைஜானில் அதிரடியாக படப்பிடிப்பை நடத்திவரும் அஜித்தின் "விடாமுயற்சி' படக்குழு, அந்த ஷெட்யூலுக்கான த்ரிஷாவின் போர்ஷன்களை முடித்துவிட்டதாம். இப்போது ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம். இதில் அஜித்துடன் மோத பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் நடிக்கவில்லையாம். அர்ஜுன் வில்லனாக கமிட்டாகியுள்ளாராம். மேலும் தற்போது நடந்துவரும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு நடித்து வருகிறாராம். மங்காத்தா படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதனிடையே பிரியாபவானி ஷங்கரும் தற்போது படக்குழுவில் இணைந்துள்ளாராம். ஏற்கனவே கதாநாயகிகளாக த்ரிஷா மற்றும் ரெஜினா கெஸாண்ட்ராவும் நடித்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பல்வேறு பிரபலங்களை படக்குழு சத்தமில்லாமல் நடிக்க வைத்து வருகிறது. மொத்த படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் முடித்து ஏப்ரலில் வெளியிட முடிவெடுத்துள்ளார்களாம்.
வெப் தொடர் என்ட்ரி!
இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாக பரிணமித்து தொடர்ச்சியாக இரட்டை குதிரையிலும் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது 25வது படமான "கிங்ஸ்டன்' படத்தில் நடித்துவருகிறார். இதில் ஜி.வி.க்கு ஜோடியாக பேச்சிலரில் ஜோடி போட்ட திவ்யபாரதி மீண்டும் இணைகிறார். இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்தப் படம் போக நடிகராக "இடி முழக்கம்', "13', "கள்வன்', "டியர்' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தனுஷின் "கேப்டன் மில்லர்', விக்ரமின் "தங்கலான்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் வெப் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்தியில் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் ஒரு தொடரில் நடிக்கவுள்ளார். இதனை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நடிக்க மறுப்பு!
பாலாஜி சக்திவேல் இயக்கிய "வழக்கு எண் 18/9' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். பின்பு "ஆதலால் காதல் செய்வீர்', "த்ரிஷா இல்லனா நயன்தாரா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான "சண்டி முனி' படத்தில் நடித்திருந்தார். இப்போது "நினைவெல்லாம் நீயடா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிராஜன் என்பவர் இயக்கும் இப்படத்தின் ஹீரோவாக பிரஜின். அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ்வும், இன்னொரு கதாநாயகியாக சினாமிகாவும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பில் சில காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம் மனிஷா யாதவ். இருப்பினும் கதைக்கு தேவை என்பதால் சில கண்டிஷனோடு அதில் நடித்துள்ளார். இதனால் இயக்குநருக்கும் அவருக்கும் மனக்கசப்பாம். அதை பெரிதுபடுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்திவரும் மனிஷா, இந்தப்படம் தமக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறாராம்.
-கவிதாசன் ஜெ.