(87) கதை பிறக்கும் கதை!
என்னிடம் திரைத்துறையினர் பெரும்பாலும் கேட்கும் கேள்வி, "இவ்வளவு கதைகளை சினிமாவுக்கு உங்களால் எப்படி எழுத முடிந்தது? அந்த ரகசியம் என்ன?' என்பதுதான்.
நான் பார்க்கிற விஷயங்களில் புதிதான வற்றை மனதில் பதிய வைத்துக்கொள்வேன். படித்ததில் கிடைக்கும் புதிய விஷயங்களை எழுதியோ, பதிவு செய்தோ சேமிப்பேன். பழைய சமயக் கதைகள், இலக்கியக் கதைகள், இராமாயணம், பாரதம், குண்டலகேசி மற்றும் ஷேக்ஸ்பியர் படைப்புகள் என எதையும் விடமாட் டேன். "அதில் என்ன புதுமை இருக்கிறது, அதை எப்படி மாற்றினால் புதிதாக ஒரு கதை கிடைக்கும் அல்லது அற்புதமான காட்சி கிடைக்கும்?' என தேடுவேன், போராடுவேன்.
உதாரணமாக, என் சொந்தக்காரர் வீட்டுத் திருமணம், பந்தி பரிமாறும் நேரம். இலை போட்டு பரிமாறும் அம்மையாருக்கும், எதிர்வீட்டு அம்மாவுக்கும் ஆகாது. இவ புருஷன் அடிக்கடி எதிர்வீட்டம்மா கூட தனியா நின்னு பேசுறது பிடிக்கவில்லை. அந்தக் கோபத்தை மனசிலே வச்சுக்கிட்டு கல்யாணப் பந்தியிலே எதிர்வீட்டம்மா முன்னால் அமர்ந்தவங்களுக்கும், அவங்களை அடுத்து இருந்தவங்களுக்கும் சாப்பாட்டை பரிமாறிக்கொண்டு போனாங்க. எதிர்வீட்டம்மா இலை காலியாகவே இருந்தது. சிறிது நேரம் பொறுமையா அமர்ந்திருந்த எதிர்வீட்டம்மா... வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துவதைப் புரிந்துகொண்டு கோபமாக எழுந்து போயிட்டாங்க. அதன் பின்னால் இறக்கும்வரை அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதேயில்லை. பந்தியிலே அவமானப்படுத்துறதுக்கு இவ்வளவு "பவரா' என புரிந்து கொண்ட நான்... இதை ஒரு காட்சியாக்கி தன் ஏழை மருமகனான அஜித்தை, மாமியார் ஸ்ரீவித்யா அவமானப்படுத்துவதற்காக... "நீயெல்லாம் முதல் பந்தியிலே உட்கார்ந்து சாப்பிட்டாத்தான் சாப்பாடு உள்ளே இறங்குமா? எழுந்திரு... எழுந்திரு... போய் எங்கேயாவது ஒரு மூலையில உட்கார்ந்து கொட்டிக்க' என விரட்டிவிடுவார். "மைனர் மாப்பிள்ளை' என்ற என் சொந்தப் படத்தின் காட்சி... நல்ல வரவேற்பைப் பெற்றது.
இன்னொரு நிகழ்வு... என் படங்களில் வேலை செய்த ஒரு இசையமைப்பாளர், என் நண்பரும்கூட. என்னிடம் வந்து, "ஸார், உங்க ளுக்கும் ஒரு டாக்டர் பட்டம் வாங்கிடு வமா?'' எனக் கேட்டார்.
"வாங்கிர்றதா... பணம் கொடுத்தா?'' எனக் கேட்டேன்.
"ஆமா...'' என்றார்.
"படிக்க வேண்டாமா? அல்லது எதையாவது சாதிக்க வேண்டாமா?'' எனக் கேட்டேன்.
"எனக்கு டாக்டர் பட்டம் தந்த வெளிநாட்டுக் காரர்... உங்க சாதனைகளைக் கேட்டதும், அவருக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க லாமான்னு கேட்டார்'' என்று சொன்னார்.
அப்பதான் எனக்கு சினிமாவிலே சில சில்லறைங்க எப்படி டாக்டர் ஆனாôங்கன்னு புரிஞ்சுது. அது நமக்கு எப்பவுமே வேணாம்னு அப்பவே முடிவு கட்டிவிட்டேன். ஆனால் இதை ஒரு காட்சியாக்கி படத்திலே வச்சு... பலரை சிரிக்க வைக்க லாம்னு முடிவுபண்ணினேன்.
"வைகைப்புயல்' வடிவேலு... என் படத்தில் குப்பைத்தொட்டி கோவிந்தசாமி என்ற கதாபாத்தி ரத்தில் நடித்தார். ஏமாந்தவங்களை ஏச்சுப் பிழைக்கும் இரட்டையர் அஜித்தும், ரஞ்சித்தும். இவர்கள் வடிவேலுவை ஏமாற்ற திட்டம் போடுகின்றனர். தண்டோரா பல்கலைக்கழகம் சார்பில் வடிவேலு வுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வந்ததாகச் சொல்லி... அவர் வீட்டிலேயே தங்குகின்றனர். அவர்கள் கொண்டுவந்த அங்கிகள், பரிசுப் பொருட்களை தனியாகப் பார்க்க ஆசைப்பட்ட வடிவேலு, எல்லாரும் தூங்கிய பின்னால் அவை வைக்கப்பட்ட அறைக்கதவையும், பீரோவையும் திறந்து எடுத்து அணிந்து பார்த்து விட்டு... அந்த மகிழ்ச்சியில், சாவிகளை விட்டுவிட்டுப் போய் படுத்து கனவு காண்கிறார். விடிந்து பார்த்தால் அவர் சேர்த்து வச்சிருந்த காசு, பணம், தங்கம், வைரம்... அனைத்தும் காலி. டாக்டர் பட்டம் ஆசையில் அனைத்தையும் இழந்தார் குப்பைத்தொட்டி கோவிந்தசாமி.
கொழும்பில் நான் தங்கியிருந்தபோது, தீவுப் பகுதியைச் சேர்ந்த இரு வியாபாரிகள்... இருவருமே கோடீஸ்வரர்கள். ஆளுக்கொரு மகள். இரு பெண்களுமே நல்ல கலருன்னா கலரு... அப்படி ஒரு கலரு. அதுக்கு மேலே ஒரு கருப்பை நான் பார்த்ததே கிடையாது. அங்கே ஒரு செட்டியார் பெரிய எஸ்டேட்... பதுளையில் நங்ஹ நற்ழ்ங்ங்ற்ல பல கடைகள். அவருக்கு ஒரே பையன். அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு. இந்தப் பையனை தன் பொண்ணுக்கு கட்டி வைக்க ணும்னு தீவுப்பகுதி வியாபாரிகள் இருவருமே விரும்பினார்கள். இதை தெரிஞ்சுக்கிட்ட ஒரு கல்யாண புரோக்கர், இரு வரையுமே ஏமாத்தி பணம் கறந்தார். அத்தோட விட்டா பரவாயில்லே... அந்தப் பையன் காதலிச்ச ஒரு சிங்களப் பெண்ணை கவிழ்த்து... கமிஷனா ஒரு தொகையை கறந்துட்டு... அவங்க இரண்டுபேரையும் லண்டன் அனுப்பி வச்சிட்டார். செட்டியார் மகனும் சிங்களப்பெண் ணும் லண்டனிலே தேனிலவு கொண்டாட... தீவுப்பகுதி வியாபாரிகள் கல்யாண புரோக்கரை தேட.... அவர் நாலு பார்ட்டிங்ககிட்ட சம்பாதிச்ச பணத் தோட துபாயிலே செட்டிலாயிட்டார். இதை "முயலுக்கு மூணு கால்' படத்திலே சுருளி ராஜனுக்கு காட்சிகளாக்கி வச்சிருப்பேன். அசோகன் தம்பி விஜய்பாபு. அவனுக்கு காது கேட்காது. காதிலே மெஷின். இவனை கோவை வியாபாரி (பொறுக்கி பொன்னம்பலம்) கே.ஏ.தங்கவேலு மகள் சச்சுவுக்கு மாப்பிள்ளை எனக் காட்டி பணம் பெறல்... வயலூரில் வி.கே.ஆர். மகள் மனோரமா, அங்கேயும் காட்டி பணம் பெறல். இறுதியில் அவன் விரும்பும் பெண்ணுக்கு கட்டிவைப்பது. நிஜக் கதையில் வந்த நகைச்சுவை கதைதான் "முயலுக்கு மூணு கால்.''
ராமாயணத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையும் அழுதாள், மண்டோதரியும் அழுதாள். "தன் கணவன் தன்னைத் தவறவிட்டுவிட்டானே' என்கிற காரணம் சீதையின் கண்ணீரில் இருந்தது. "தன் கணவன் தவறு செய்துவிட்டானே, இனி என்ன ஆகப்போகிறதோ?' என்கிற காரணம் சீதை யின் கண்ணீரில் இருந்தது. சீதை சிறைவைக்கப் பட்ட காலத்தில் முன்பு நடந்தவைகளை நினைத்துப் பார்க்கும் கட்டாயம் ஏற்படுகிறது.
மகரிஷியான தன் கணவர் கௌதம முனிவ ரால் சபிக்கப்பட்டு, கல்லாய் சமைந்திருந்த அகலிகை, ராமரின் பாதம்பட்டு உயிர்த்தெழுகிறாள். ராமன் எவ்வளவோ வேண்டியும் அகலிகையை மீண்டும் மனைவியாக ஏற்க மறுக்கிறார் கௌதம முனிவர்.
"இவள் உண்மையான பத்தினியானால் என் உருவில் வந்தது இன்னொரு ஆண்மகன் (இந்திரன்) என்பது தெரிந்திருக்க வேண்டுமே? இவள் தன் உடல் சுகத்திற்காக தவறு செய்தவள்' என்கிறார்.
இந்த இடத்தில் ராமனின் மனநிலை என்ன? என்பதை கவிஞர் மு.மேத்தா புதுக்கவிதையில்...
அகலிகை பறிகொடுத்தவளே தவிர...
பங்கிட்டுக் கொண்டவளல்ல!
ராமன் கேட்டான்... "முக்காலமும் உணர்ந்த தங்களுக்கு அன்று அதிகாலையில் வேளை தவறிக் கூவியது உண்மையான சேவல் அல்ல, இந்திரனின் மாயக்குரல் என்பது ஏன் புரியாமல் போனது? அன்று உங்கள் தவ வலிமை என்ன ஆனது? சற்று சிந்தித்துப் பாருங்கள்... உங்களாலேயே உண்மையை உணர்ந்துகொள்ள முடியாதபோது... பேதைப் பெண்ணான உமது மனைவிக்கு உமது உருவில் வந்தது இந்திரன் என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?'
இப்படிக் கேட்ட தன் கணவன் ராமனின் புத்திசாலித்தனத்தை வியந்து பார்த்தாள் சீதை.
இப்போது அதை சிறைவாசத்தில் சீதை சிந்திக்கிறாள்...
பொன்மானைப் பார்த்து, அதைப் பிடித்து தரச்சொல்லி, ராமனிடம் சீதை கேட்க... அதைப் பிடிக்க ராமன் ஓட... அது ராமனை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டுசெல்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் சீதை கடத்தப்படுகிறாள்.
"கூவியது பொய்ச்சேவல் என ஏன் உங்க ளுக்குத் தெரியாமல் போனது?' என முனிவரிடம் கேட்ட ராமனுக்கு இப்போது வந்திருப்பது மாயமான் (மாரீசன்) என ஏன் புரியாமல் போனது?' என வருந்தினாள் சீதை. ஆனால் எந்தச் சந்தர்ப் பத்திலும் ராமனைப் பார்த்து சீதை இந்தக் கேள்வியை எழுப்பவில்லை. காரணம் அவதார புருஷரை கேள்வி கேட்பது அபச்சாரமாச்சே?!
இந்தக் கேள்வியின் தேடல்தான் என் அடுத்த கதை...!
(திரை விரியும்)