(86) பேரன் செல்வம்; தாத்தா வேலு நாயக்கர்!!
"ஏன் தாத்தா... அந்த சின்ன குடிசையிலே பலபேர் கஷ்டப்பட்டு, இடம் போதாமல் வாழ்றாங்க. நாம மூணு, நாலு பேர் மட்டும் இவ்வளவு பெரிய பங்களாவிலே வாழுறோம். நாம அங்கே போய் வாழ்ந்துக்கிட்டு... அவங்களை இங்கே வரவழைச்சு வாழவைச்சா நல்லா இருக்கும்லே?'' ஒரு ஏழு வயது பையன் பெரும் பண்ணையாரான தன் தாத்தாகிட்ட கேட்கிறான். தியேட்டரில் கைதட்டும், விசிலும் பறக்கும். -இது ஏவி.எம்.மின் "களத்தூர் கண்ணம்மா' படத்தில்.
பல வருடங்கள் கழித்து ஏறத்தாழ அதே வயசுடைய சிறுவன், தன் தாத்தாகிட்டே, "ஏந் தாத்தா... நீங்க நல்லவரா, கெட்டவரா?'' என்று கேட்பான். தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை. -இது "நாயகன்' படத்தில் வரும் காட்சி. தியேட்டர் அதிரும் கைதட்டலால். முதல் படத்தில் சிறுவன் கமல்... இரண்டாவது படத்தில் தாத்தா கமல்! ஆனால் இரண்டு கேள்விகளுமே நேரடியான பதில் இல்லாமல் முடியும். இந்த இரு படங்களின் இடைப்பட்ட காலகட்டத்தில்தான் உலகநாயகன் கமல் உருவானார்.
நான் ஏவி.எம்.மில் படங்கள் செய்யும்போது கமலுக்கு பதினாறு, பதினேழு வயதுதான் இருக்கும். அங்கே ஒரு கொய்யாமரம் இருக்கும்... அதன்கீழ் அமர்ந்து பல கதைகளைப் பற்றிப் பேசுவோம். அதிகமாக ஆங்கிலப் படக்கதைகள், ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பாற்றல் பற்றியெல் லாம் பேசுவோம். கமல் மிக ஆர்வத்தோடு பேசுவார். அப்பல்லாம் வயதுக்கேற்ற ஒல்லியான தோற்றம்... ஆனாலும் உடல் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டிப் பேசுவார்.
1970ல் எனக்கு ஏவி.எம். மூலம் ஒரு தயாரிப்பாளராகும் வாய்ப்பு வந்தது. நான் தயாரிக்க தேர்ந்தெடுத்த கதையில் ஜெமினி, முத்துராமன், வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற பல பழைய முகங்களோடு, ஒரு இளம் ஜோடியும் நடிக்கவேண்டும். அந்த கதாபாத்திரத்தில் கமலை போடலாமா என இயக்குநர் முத்துராமன் என்னைக் கேட்டார். அப்போது நான் வாஹினி ஸ்டுடியோவில் பார்த்த சந்திரமோகன் என்ற இளைஞரின் போட்டோவைக் காட்டி ஏவி.எம்.மிடம் சம்மதம் பெற்றுவிட்டேன் என்பதைச் சொன்னேன். அதற்குப்பின் எஸ்.பி.எம். அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை. ஆனால், படப்பிடிப்பு முடிந்ததும் சந்திரமோகன் தமிழில் பேசியது நிறைவாக இல்லாத காரணத்தால் கமல் டப்பிங் பேசினார். அது சிறப்பா இருந்தது.
ஏவி.எம்.மில் எனக்கு தனியாக ஒரு அலுவலகம் இருந்தாலும், மகாலிங்கபுரம் லேடி மாதவ நாயர் ரோட்டிலும் இன்னொரு அலுவலகம் இருந்தது. இங்குதான் எஸ்.பி.எம். இயக்குநர் ஆனார். அவருக்காக உருவாக்கப்பட்ட கம்பெனிதான் எனது விக்டரி மூவிஸ். அங்கே கமல் அடிக்கடி வருவார். நான் இயக்குநர் ஆன பின்னால் எனக்கு மிகவும் பிடித்த நடன இயக்குநரான தங்கப்பன் மாஸ்டரை... எங்களுக்கு மாஸ்டராக நியமித்தேன். அப்போது அவரிடம் உதவியாளர்களாக ரகுராம், கமல் ஆகிய இருவருமே வேலை செய்தனர். என் முதல் தயாரிப்பான "சுடரும் சூறாவளியும்' படமும், தங்கப்பன் மாஸ்டரின் சொந்தப் படமான "அன்னை வேளாங்கண்ணி'யும் ஒரே நாளில் ரீலிஸ் ஆயின. அது ஜெயலலிதா, ஜெமினிகணேசன் நடித்த கலர் படம்.
தங்கப்பன் மாஸ்டர் அடிக்கடி என்னிடம் சொல்வது... "ஸார்... நம்ம பையன் கமல் இருக்கானே... அவன் நிச்சயமா ஒரு பெரிய ஹீரோவா வருவான்.'' அவர் வாக்கு பலிக்கும் என்பதை என் ஆழ்மனமும் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தது. நான் இயக்கிய முதல் படமான மதுரகீதத்தில் ரகுராமை நடன இயக்குநராக அறிமுகம் செய்தேன். அந்த சமயத்தில் என் கம்பெனி பி.ஆர்.ஓ.வாக பணியாற்றிய கிளாமர் கிருஷ்ணமூர்த்தியை தயாரிப்பாளராக்கி... "மஞ்சள் முகமே வருக' என்ற படத்தை எழுதி இயக்க ஏற்பாடுகள் செய்தேன். அதில் கமலின் தோற்றம், வயசுக்கேற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை உருவாக்கினேன். இந்த சுகுமார் என்ற கதாபாத்திரத்துடன் கூடப் படித்தவர்கள் விஜயகுமாரும், சத்தியப்பிரியாவும். இவர்கள் நெருக்கமான காதலர்கள். சுகுமார் இருவருக்குமே நெருக்கமான நண்பன். இந்தப் படத்தில்தான் சத்தியப்பிரியாவை அறிமுகம் செய்தேன். பணப்பற்றாக்குறையால் படத்தை ஆரம்பிக்க காலதாமதமானது.
இதற்கிடையில் கமல் என்னிடம் வந்து பேசும்போது, தனக்கு பாலசந்தர் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும்போல் தெரிகிறது என்ற விஷயத்தையும், தான் ஒரு மலையாளப் படத்தில் நடிக்கப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் சொன்னார். அவர் மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பவில்லை. பின்னாளில் இவர் உலகநாயகன் ஆவார் என கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. என் கதாபாத்திரத்துக்கு மாஸ்டர் சேகரை போட்டு படத்தை முடித்து ரிலீஸ் பண்ணிவிட்டு அடுத்த படத்துக்குப் போய்விட்டேன்.
சில வருடங்கள் கழித்து தெலுங்கு இயக்குநர் பாபு தமிழில் எடுக்கும் ஒரு படத்துக்கு வசனம் எழுத அழைத்தார். அதற்கு அறிஞர் அண்ணாவின் "நீதிதேவன் மயக்கம்' என்ற தலைப்பை பயன்படுத்தினேன். அதில் ஒரு ராணுவ வீரராக சிறப்புத் தோற்றத்தில் கமல் நடித்தார். அவருக்கான வசனங்களை மிகச்சிறப் பாக எழுதியிருந்தேன்... பாராட்டினார். நான் அண்ணாந்து பார்க்குமளவுக்கு அவர் வளர்ச்சியிருந்தது. ஆனால் குனிந்து போய் எனக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க எனக் கேட்கின்ற அவசியம் எனக்கு எழவில்லை. நம்ம பழைய நண்பராச்சே என நினைத்து குனிந்து வந்து, நாம ஒரு படம் பண்ணலாமே என்று என்னிடம் கேட்குமளவுக்கு அவர் இதயத்தில் நான் இடம்பிடிக்கவில்லை.
ஆயினும் ஏவி.எம்.மில் கமலுக்காக "பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் கதை எழுதும் வாய்ப்பு வந்தது. இந்தக் கதையை வேறு மாதிரி திரைக்கதை அமைத்து முன்பே ராமாநாயுடுவிடம் சொல்லியிருந்தேன். பல படங்கள் அங்கு நடந்துகொண்டிருந்ததால், சற்று காலம் பொறுத்து பண்ணத் திட்டமிட்டார். இதற்குள் கமல் படம் ஷூட்டிங் ஆரம்பமானது.
இதைத் தெரிந்த லஷ்மி புரொடக்ஷன்ஸ் பூரணசந்திர ராவ் என்னிடம் வந்து, "கமல் படத்துக் கதையை எனக்குச் சொல்ல முடியுமா?' எனக் கேட்டார். "தமிழில் ஏவி.எம். எடுக்கிறார்கள், தெலுங்கில் ராமாநாயுடு எடுக்கப் போகிறார். நீங்கள் எதுக்காகக் கேட்கிறீர்கள்?' எனக் கேட்டேன். "அமிதாப்பச்சனுக்கு இந்திக்கு...' என்றார். "இதை சரவணன் ஸாரிடம் கேட்டுவிட்டு கதையைச் சொல்லவா?' எனக் கேட்டேன், அவர் சம்மதித்தார். உடனே போனில் சரவணன் ஸாரிடம் சொன்னேன். அவர் சரி என்றதும் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பூர்ணசந்திர ராவ் நேரில் சரவணன் ஸாரை சந்தித்து கதை பிடித்தது என்ற விஷயத்தைச் சொன்னார். அத்தோடு நான் அமிதாப் பிடம் டெல்லிக்கு சென்று கதையைச் சொல்லவேண்டும் என்று கேட்டார். "நீங்கள் கதைக்கான பணத்தைக் கொடுத்து எங்களிடம் வாங்கி ஒப்பந்தம் போட்ட பின்னால் குகநாதனை அழைத்துப் போங்கள்' என்றார்.
பூர்ணசந்திர ராவ் மறுப்பேதும் சொல்லாமல் ஏவி.எம். கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் போட்டு விட்டு என்னை டெல்லி அழைத்துப் போனார். அமிதாப்பச்சனிடம் நான் கதை சொன் னேன். அவரும் ஓ.கே. சொன்னார். அவரும் பானுபிரியாவும் நடிக்க ஏவி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. இதற்குள் பாலகிருஷ்ணா நடிக்க, தெலுங்கு படத்தை ராமாநாயுடு ஆரம்பித்துவிட்டார். தமிழில் முதலில் ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
பூர்ணசந்திர ராவும், அமிதாப்பும் சற்று பயந்துவிட்டார்கள். அதனால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. இதற்கிடையில் தெலுங்கில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டது. பதினாறு சென்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. சில மாதங்கள் கழித்து இந்தியில் கோவிந்தா நடித்து படம் வெள்ளிவிழா கண்டது. கமல் "பேர் சொல்லும் பிள்ளை' படத்தை, தெலுங்கு டப்பிங்குக்கு ஒன்பது லட்சங்களுக்கு வாங்கி யிருந்தது எனக்குத் தெரியாது.
அதன்பின் அல்லு அரவிந்த் அலுவலகத் தில் புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத்தோடு ஆறு மாதங்கள் வரை அமர்ந்து கமலுக்காக சலங்கை ஒலி கதையை எழுதினோம்.
பாம்குரோவ் ஹோட்டலில் ரூம் நெம்பர் 702இல் கமலுக்கு இந்தக் கதையைச் சொன்னேன்... பிடித்துவிட்டது. ஆனால் ஒரு கேள்வி கேட்டார். "இளவயது என்றால் இப்படியே நடிக்கலாம்... கிழ வயதென்றால்... அதுதான் சிரமம்' என்றார். அவர் சிந்தனைகளின் அபரிமிதமான வளர்ச்சியை அன்று நான் உணர்ந்தேன்.
பின்னர் "பெப்ஸி' விழாவில் கலைஞர் எழுதி சிவாஜி நடித்த "சாக்ரட்டீஸ்' நாடகத்தை கமல், கலைஞர் முன் மேடையில் நடிக்கவேண்டும் எனக் கேட்டு சரியென்று சொல்லியிருந்தார். அந்த வசனங்களை கலைஞர் தேடி எடுத்து என்னிடம் தந்ததோடு... "இது ஒரு நல்ல நிகழ்வாக இருக்கும்' என்றார். ஆனால் நிகழ்வுக்கு மூன்று நாட்கள் முன்பு கமல், கலைஞரை சந்தித்து என்ன பேசினாரோ தெரியாது... "சாக்ரட்டீஸ்' கேன்சல். ஆனால் "கலைஞானி' கமலின் கூட்டணி முடிவு -is an eye opener.
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்