(44) கற்றுக் கொடுத்த படிக்காத மேதை!
மனசாட்சிக் குப் பயந்து பொய் சொல்லாமல், என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
இன்றிருக்கும் அரசியல்வாதிகளில் காசற்ற, மாசற்ற, நேர்மையான ஒரு வரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
என் காலத்தில் நான் பலரைப் பார்த்திருக்கிறேன்... அறுபதுகளில் எழுபதுகளில். அதில் ஒரு தலைவர் என் படத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவரும் எப்படிச் சம்மதித்தார் தெரியுமா?
"இப்பல்லாம் நான் படங்கள் பார்க்கப் போறதில்லேன்னு''தான் சொன்னாரு.
நான் உடனே, "அய்யா... என் படத்தில் சிவாஜி ஸார், திருப்பூர் குமரனா... பகத்சிங்கா நடிச்சிருக்கார்''னு சொன்னதும், படம் பார்க்க சம்மதித்து வந்து "ராஜபார்ட் ரங்கதுரை' படம் பார்த்தார். கூடவே அவர் கட்சித் தலைவர்கள் சிலரும் வந்து படம் பார்த்தனர். இடைவேளையின்போது அனைவருக்கும் காஃபி கொடுக்கப்பட்டது. தலைவருக்கு மட்டும் என் கையால் காஃபி கொடுத்தேன். டம்ளரைத் தொட்டதும் தலைவர் கையை சட்டென எடுத்து உதறினார். உடனே இன்னொரு டம்ளரை எடுத்து அவர் முன்னாலேயே ஆத்திக் கொடுத்ததும் அன்போடு வாங்கிக் குடித்தார்.
படம் முடிந்ததும் என்னைக் கூப்பிட்டு தட்டிக்கொடுத்து, "எப்பவும் இப்படி நல்ல படமா எடுங்க'' என பாராட்டி அறிவுரை வழங்கினார்.
ஆனால் நானும் இன்றைய தடம் மாறிய அரசியல் வாதிகள்போல் காசுக்காக எந்தவித பலனுமற்ற சில படங்களை எடுக்க ஆரம் பித்தேன்.
ஆனால் அந்தத் தலைவரை அடிக்கடி போய் பார்த்து, பேசும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டேன்.
யார் அந்தத் தலைவர்?
தியாகம், திறமை, அஞ்சாமை, உறுதி, திடமான முடிவு, தன்னலமற்ற சேவை, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம், மக்கள் மீதுள்ள அளவற்ற பாசம், ஜன நாயகத்தின் மீதுள்ள அசையாத நம்பிக்கை, இம்மியளவுகூட சுயநலமற்ற வாழ்க்கை... இப்படி எண்ணற்ற குணாதிசயங்களைக் கொண்ட படிக்காத மேதைதான் நான் சொல்லும் கர்மவீரர் காமராசர்.
தேசிய அரசியல் பேசுபவர்தான், இருந்தாலும் தமிழ் மாநிலத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் யாருக்கும் சளைக்காத அளவு பற்று வைத்திருந்த தலைவர்தான்... பச்சைத் தமிழர் காமராசர்.
அதனால்தானோ என்னவோ எம்.ஜி.ஆர். அவர்கள், "காமராசர் என் தலைவர்' எனச் சொன்னார்.
சிவாஜி சாரும், கவியரசு கண்ண தாசனும் பெருந்தலைவரோடு இருந்தனர். காமராசரைப் பற்றி அதிகமாக நான் தெரிந்துகொண்டது அண்ணன் பழ.நெடுமாறன் மூலமாகத்தான்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்தார். கர்மவீரரும் அவர் ஆட்சிக் காலத்தில் தொல்லைகள் கொடுக்காத எதிர்க்கட்சி யாக செயல்பட்டார். அண்ணாவின் மறைவுக் குப் பின் ஆளும்கட்சி சிதைந்துவிடக் கூடாது என்பதற் காக இரு தலைவர் களை தனித் தனியாகக் கூப்பிட்டு, "கட்சி உடைந்து போகாமல் நடந்துகொள்ளுங்கள்' என புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் இருந்தபோது பல அற்புதமான விஷயங்களைச் செய்தார். அதில் அவரது "கே' ப்ளான் தலையாயது.
அவர் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த போது ராணுவ டாங்கிகள், தளவாடங்கள் தயாரிக்க 'இஐஊக' என்ற நிறுவனத்தை உருவாக்கியது மத்திய அரசு. அதை தமிழ்நாட்டில் நிறுவவேண்டும் என கர்மவீரர் விரும்பினார். கன்னட அரசு தங்கள் மாநிலத்துக்கு வேண்டும் என போராடினார்கள். அதற்கான இடத்தை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. முதலில் அந்தக் குழு தமிழகம் வந்து தொழிற்சாலைக்கான இடத்தை தேடினார்கள். சரியான இடம் கிடைக்கவில்லை. பெங்களூரு போக முடிவு செய்தனர். இவ்வளவு தூரம் வந்த நாம் முதல்வரை சந்தித்து ஒரு வார்த்தை சொல்லாமல் போவது நன்றாக இருக்காது என நினைத்த அவர்கள், கர்மவீரரை சந்தித்தனர்.
அவர் கேட்டார், "இடம் பார்த்துவிட் டீர்களா?'' என்று.
"தமிழ்நாட்டில் அவ்வளவு பெரிய பேக்டரிக்குத் தேவையான வசதி வாய்ப்புகளோடு இடம் கிடைக்கவில்லை... அதனால் பெங்களூர் போகிறோம்'' என்று சொன்னார்கள்.
"அப்படி என்னென்ன வசதி வாய்ப்பு வேண்டும் என என்னிடம் சொல்ல முடியுமா?'' என முதல்வர் காமராசர் கேட்டார்... அவர்கள் சொன்னார்கள்.
பெரும் நிலப்பரப்பு, அதன் அருகே தடையில்லாமல் கிடைக்கும் பெருமளவு தண்ணீர், கனரக எந்திரங்களைக் கொண்டுவர அகலமான ஹைவே ரோடு, ரயில்வே ஸ்டேஷன்... என தேவையானதை பட்டிய லிட்டுச் சொன்னார்கள். உடனே காமராசர் "எனக்காக தயவுசெய்து நான் சொல்லும் இடத்தைப் போய் பாருங்கள். நீங்கள் கேட்கும் வசதிகள் இல்லையென்றால் பெங்களூர் போங்கள்'' என்றார்.
அவர்கள் சம்மதித்தனர்.
அவர் சொன்ன இடம் திருச்சி அருகே திருவெறும் பூர். குழுவினர் போய் பார்த் தார்கள், ஆச்சரியப்பட்டார் கள். அவர்கள் கேட்ட அத்தனையும் அங்கிருந்தன.
தமிழ்நாட்டில் 'இஐஊக' தொழிற்சாலை வர கர்ம வீரரின், மாநிலத்தை அங் குலம் அங்குலமாக அறிந்து வைத்திருந்த சாமர்த்தியமே காரணமானது. ஒரு மாநிலத்தை ஆளும் முதல் வருக்கு எத்தனையோ பணிகள் இருக்கும். ஆனால் அந்தப் பணிகள் மக்களுக் கான சேவையாக செய்யப் படும்போது அது சுகமான சுமையாகும். காமராசர் தன் பதவியை வைத்து நாட்டு மக்களுக்கு சேவை செய்தவர். எந்நேரமும் மக்கள் நலனுக்காக சிந்தித்தவர். அதனால்தான்... தான் ஆளும் மாநிலத்தின் பூகோள அமைப்பையே தெரிந்து வைத்திருந்தார், புரிந்து வைத்திருந்தார். பல அணைக்கட்டுகள், எண்ணிக்கையற்ற பள்ளிக்கூடங்கள், மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவுத் திட்டம் -இப்படி கணக்கற்ற மக்கள் திட்டங்களை நிறைவேற்றினார்.
காமராசருக்கு சொந்தவீடு கிடையாது, சொந்த கார் கிடையாது. "மக்கள் சேவைக்கு தடையாக இருக்கக்கூடாது' என திருமணமும் செய்துகொள்ளவில்லை. பெற்ற தாய்க்கு ஒரு போர்வை வாங்கிக் கொடுத்தது கிடையாது. தன் வாரிசாக யாரையும் அரசியலுக்கு கொண்டுவரவில்லை.
படித்த பல முட்டாள்கள் தம்பட்டம் அடிக்கும் அரசியல் வானில், இந்த படிக்காத மேதையின் பல திட்டங்கள்தான் தமிழகத்தை உயர்த்தியது என்றால் அது உண்மையே!
அன்றைய பாரதப் பிரதமர் மாண்புமிகு நேரு கோமகனாரை வென்று, தமிழ் மாநிலம் நிலைக்க கர்மவீரர் காமராசர் எடுத்த முயற்சிகளையும், அதை அவர் வென்றதையும் பிறிதொரு அத்தியாயத்தில் பதிவு செய்கிறேன்!
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்
________________________________
பாடகரை மாற்றினேன்...!
"கனிமுத்து பாப்பா'வுக்காக மிகவும் சிரத்தை எடுத்துக்கொண் டேன். என்ன காரணம்? சினிமாவில் என் முதல் நண்பரை இயக்குநராக்கு வது, ஏவி.எம். அடித்த பெயரை நான் நிலைநிறுத்த முயற்சி செய்வது, அவருக்காக ஏவி.எம். ஸ்டுடியோவை விட்டுவிட்டு பரணி ஸ்டுடியோவில் படத்தை எடுத்தது.
ஒரு இந்திப் படத்தைப் பார்த்து மயங்கிய நான்... அதே மாதிரி ஒரு கதையை எழுதியது. அதிலிருந்த பாடல்கள் மாதிரி பாடல்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தேடித் தேடி டி.வி.எஸ்.ராஜு என்ற இசையமைப் பாளரை அறிமுகம் செய்தது. "ஷர்மிளி' என்ற இந்திப் படத்திலிருந்து ஒரு டியூனை சுட்டது. அது "ராதையின் நெஞ்சமே' என பிரபலமானது. இன்னொரு இந்தி பாட்டை சுட்டு தமிழாக்கி, அதை டி.எம்.எஸ்.ஸை வைத்து விஜயா கார்டனில் ரெக்கார் டிங் பண்ணியபின்... அது நான் விரும்பியபடி வராததால் தைரியமாக முடிவெடுத்து... சில நாட்கள் கழித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை வைத்து மறுபடி ஒலிப்பதிவு செய்ய வைத்தேன். அது பெரிய ஹிட்டானது.
"காலங்களே... காலங்களே... காதல் இசை பாடுங்களேன்! பாடப் பாட ராகம்... பார்வை போடும் தாளம்' இந்தப் பாட்டில் ஜெய்சங்க ரும், ராஜலட்சுமி என்ற நான் அறிமுகம் செய்த நடிகையும் நடித்தனர். இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. இந்தப் பாடலில் 'வஞஉஊகஒசஏ' இருந்ததால் பாடகரை மாற்றினேன்.
யாருக்காக என் போராட்டம்... நான் அறிமுகப்படுத்திய எஸ்.பி. முத்துராமனுக்காக!
-வி.சி.குகநாதன்