(43) பாதி பட பஞ்சு!
மூடநம்பிக்கைக்கு பஞ்சமில்லாதது சினிமா உலகம். கவியரசு கண்ணதாசனின் உதவியாளர், எம்.ஜி.ஆர். பட பாடலாசிரியர், கமல் -ரஜினி உள்ளிட்ட கதாநாயகர்களுக்கு பல சூப்பர்ஹிட் கதைகளை எழுதியவர், தயாரிப்பாளர்... இப்படி சினிமாவின் பல துறைகளில் கலக்கியவர் பஞ்சு அருணாசலம்.
சினிமா உலகில் முதலில் அவர் கதை எழுதிய படங்கள் பாதியிலேயே நின்றதால், அவருக்கு "பாதி பட பஞ்சு' என கேலிப் பெயரை வைத்துவிட்டார் கள். அவரை "முழு பட பஞ்சு'வாக ஆக்கியதில் எனக்கும் பங்கு இருக்கிறது.
அதைப்பற்றிச் சொல்வதற்கு முன் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். நூற்றுக்கு மேற்பட்டோர் கேட்ட கேள்வியும்... என் பதிலும்!
கேள்வி: "தங்களின் "நக்கீரன்' கட்டுரைகளில் எத்தனை பெரிய வரலாறு... பேரறிஞர் அண்ணா வின் ஆசிரியர், தங்கள் தாத்தா என அறிந்தேன். தாங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை? இவற்றை யெல்லாம் முன்பே சொல்லி விளம்பரங்கள் தேடவில்லை?''
பதில்: நிழலுக்காக ஒதுங்கிய ஒரு வழிப் போக்கன் அல்ல நான். "விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது' என்ற கண்ணதாசன் வரிகளை உணர்ந்து நடப்பவன். தீமைகளை தனியாக சுமக்கவும், நன்மைகளைப் பகிர்ந்து வாழவும் கற்றுக்கொண்டவன். உறவுகளையும் நட்பையும் ஏணியாகவோ, தோணியாகவோ பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவன். நிதி சேர்க்கும் எண்ணம் வந்ததில்லை. நீதிக்காக போராடும் குணம் ரத்தத்திலேயே உண்டு. தமிழ்நாட்டின் இங்கர்சால் மறைவுக்குப் பின் அந்தக் குடும்பம் பட்ட கஷ்டங் களை கண்ணால் கண்டவன். இதய தெய்வம் மட்டும் இல்லாதிருந்தால்... எங்கள் பெர்னாட்ஷா புகழையே புதைத்திருப்பார்கள். இமயமே இடம் பெயரும்போது, சாமானிய சினிமாக்கார னாகிய எனக்கு எதுக்கு பேராசைகள்? வந்ததே போதுமென்று, வள்ளல் வாழ்ந்த காலத்திலேயே திருப்தியடைந்தவன். மற்றவர் மனதிலே இவனை ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்று வதற்கு முன்பே ஒதுங்கிப்போக பழகிக் கொண்டவன். எனக்கு முன்னிடம் தர விரும்பாதவர்களுக்கு நான் சுலபமாக தரிசனம் தர விரும்பாதவன். ஏனென்றால் என் மதிப்பு என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்.
"நோக்கமற்ற பயணம் தேக்கத்தில் தான் முடியும்', "விவேகமற்ற வீரம் வெற்றியை தராது.' இந்த இரு வரிகளும் என் திரைப்பயணத்தை சீராகக் கொண்டு செல்ல பெரிதும் உதவியது. நான் யாரென்று மற்றவர்கள் அறிவதற்கு முன்பே, என் செயல்கள் பாராட்டப்பட்டன. பலரும் என்னை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். என் முதல் படமான "புதிய பூமி'க்கே... ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் அவர்களை ஃபைனான்ஸ் செய்ய வைத்தேன். ஜேயார் மூவீஸின் இரண்டாவது படமான "எங்க மாமா' படத்தின் கதையை தேர்வு செய்தேன். மும்பை சென்று அந்தக் கதையின் உரிமையைப் பெற்றுவந்தேன். ஏவி.எம். அவர் களிடம் பேசி, அவரை ஜேயார் மூவீஸோடு இணைத்து "எங்க மாமாவை' தயாரிக்க வைத்தேன். ஏ.எல்.எஸ். ஸ்டுடியோவில் கேமரா டிபார்ட்மெண் டில் டிராலி தள்ளிக்கொண்டிருந்த பாஸ்கரை அழைத்து வந்து, ஜேயார் மூவிஸ் மானேஜராக வேலை செய்ய வைத்தேன். நான் தனியாக கம்பெனி ஆரம்பித்ததும் அவரும் தானாகவே என்னோடு வந்துவிட்டார். அதனால் அவரை என் கம்பெனியில் ஜ்ர்ழ்ந்ண்ய்ஞ் ல்ஹழ்ற்ய்ங்ழ் ஆக சேர்த்துக் கொண்டேன். என்னிடம் உதவியாளராக பணியாற்றிய மணி... பிற்காலத்தில் "ஓஹோ' பிலிம்ஸ் மணியாக மாறி, பலநூறு படங்கள் ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக மாறினார். என் நண்பர், விநியோகஸ்தர் தேவராஜ் குணசேகரிடம் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து "கண்ணே பாப்பா' என்ற படத்தை எடுக்கவைத்தேன். கவிஞர் கண்ணதாசன் அவர்களோடு அவர் சொல்லச் சொல்ல எழுதும் உதவியாளராக வந்த அவர் அண்ணன் மகன் பஞ்சு அருணாசலத்துக்கு ஒரு பாட லுக்கு நூறு ரூபாய் கொடுக்கவேண்டும். அதை நானே கொடுப்பேன். அதன்மூலம் அவரோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அவரிடம் நல்ல திறமை இருப்பதை உணர்ந்த நான், அவரை என் உதவியாளராக வரும்படி அழைத்தேன். அவர் தயங்கினார். ஏன் என்று கேட்ட போது, "தான் முதலெடுத்த படங்களும், தான் பணியாற் றிய சில படங்களும் பாதியில் நின்றுவிட்ட தால், தன்னை "பாதி பட பஞ்சு' என பெயரிட்டு விட்டார்கள்' என வருத்தத்தோடு சொன்னார். என் இதயம் கனத்தது. எங்க பக்கத்திலே யாராவது இறந்தால்தான் மாரிலடித்து அழுவார்கள். ஆனால் சினிமா விலே நல்லா வாழ்றவனைப் பார்த்து மாரிலடித்து அழுவார்கள்.
நான் பஞ்சண்ணனிடம் சொன்னேன். "அண்ணே.. என்னை நம்பி வாங்க. கடவுள் கிருபையுடன் உங்களை முழு பஞ்சுவாக ஆக்கிக்காட்டு கிறேன்'' என பலவந்தமாக அழைத்து வந்தேன். என்னோடு சில படங்கள் பணியாற்றினார். தங்கமான மனிதர். குற்றாலத்தில் ஒருநாள் அவர் எனக்கு புறா கறி சமைத்துக் கொடுத்தார். அவ்வளவு ருசியாக இருந்தது. இன்றுவரை என்னால் மறக்க முடியாது. என்னோடு "காசி யாத்திரை' என்ற நாடகத்திலும் பணியாற்றினார். இந்த நாடகத்தில்தான் சுருளிராஜனை நாயகன் வேடத்தில் அறிமுகம் செய்தேன். இந்த நாடகத்தை படமாக்க பல கம்பெனிகள் அணுகினார்கள். அதில் "தேன் கிண்ணம்' கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். தன் தொழில்நுட்பக் குழுவோடு வந்து நாடகம் பார்த்துவிட்டு ஒப்பந்தம் போட, மறுநாள் தன் அலுவலகத்திற்கு வரச் சொன்னார். நானும் போனேன், அவர் வாசலில் வந்து என்னை தன் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே ஹாலில் பஞ்சு அருணாசலம் அமர்ந்திருந்தார். "என்ன பஞ்சண்ணே...'' என நான் பேச ஆரம்பிக்க, கிருஷ்ணமூர்த்தி சார்... "நான் சொல்றேன்... நீங்க உள்ளே வாங்க'' என்று தன் அறைக்குள் அழைத்துப் போய் கதவை சாத்திக்கொண்டார்.
"என்ன ஸார்... எல்லாமே சஸ்பென்ஸா இருக்கே?'' எனக் கேட்டேன்.
"பஞ்சு ரொம்பநாளா என்கிட்ட ஒரு நல்ல காமெடி கதையிருக் குன்னு சொன்னாரு... அதை காலையிலே கேட்டேன்னு' சொன்னார். "கதை பிடிச்சிருக்கான்னு'' உடனே நான் கேட்டேன். "ஓரளவு "வொர்க்' பண்ணினா சரியா வரும்... அது அடுத்ததா எடுக்கலாம். முதல்லே "காசி யாத்திரை' என்றார்.
நான் சற்றும் சிந்திக்காமல் "ஸார் முதல்லே நீங்க பஞ்சண்ணன் கதையை எடுங்க... "காசி யாத்திரை'யை நானே எடுக்கிறேன்'' என்றேன். அவர் சம்மதிக்கவில்லை. வாதாடினார். அப்போது நான் சொன்னேன். "நாடகத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருக்கிறார். படத்தையும் அவரே இயக்கு வார். என் மானேஜர் பாஸ்கர், இந்த நாடகத்தை தன் சகோதரர்களுக்காக தயாரிச்சுக் குடுக்க சொல்லி கேட்டாரு. சுருளிராஜனையே கதாநாயக னாய் போடலாம்னு நினைக்கிறேன். இதெல்லாத் துக்கும் மேல நீங்க கைராசிக்காரர், பஞ்சண்ணன் உங்க படத்து மூலம் முழு பஞ்சு ஆயிடுவார்'' என விடாமல் பேசி அவரை சம்மதிக்க வச்சு... அந்த நல்ல சேதியை பஞ்சண்ணனிடமும் மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வந்தேன்.
ஆனாலும் கதையை கொடுத்து அங்கு பணியாற்றினாலும்... தவறாமல் என் வேலைகளுக்கு வந்து போவார். "காசி யாத்திரை' படப்பிடிப்பிலும் கலந்துகொள்வார். தெலுங்கு காமெடியன் பத்மநாபன் காசி யாத்திரை நாடகத்தை என்னிடம் வாங்கிப் போய் "ஆஜென்ம பிரமச்சாரி' என தெலுங்கில் எடுத் தார். அடுத்த நாடகமாக ஸ்ரீகாந்த் -சுருளிராஜன் நடிக்க 'இன்ச்ச் மாஸ்டர்' என்ற நாடகத்தை தயார் செய்தேன். அதில் பஞ்சண் ணன் பங்களிப்பும் உண்டு.
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்