(41) போலியான வேலி!
சிறு வயதில் எனக்குள் ஒரு அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருந்தது. அது வளர்ந்து, வளர்ந்து என்னைச் சுற்றி ஒரு வேலியை நானே போட்டுக்கொள்ளுமளவு ஆனது. என்றாவது ஒருநாள் நான் ஒரு மாபெரும் நிலைக்கு வருவேன், அப்போது மற்றவர்கள் என்னைப் பார்த்து, "இவனா? இவனைத் தெரியாதா? அங்கே வந்து தொங்கிக்கிட்டு நிற்பானே? அவர் வாலைப் பிடிச்சுக்கிட்டு அடியாள் மாதிரி சுத்துவானே? எங்கே போட்டோ எடுத்தாலும் வந்து தலையை நுழைச்சுக்குவானே? எங்கே பந்தி போட்டாலும் முதல்ஆளா வந்து உட்காரு வானே...? -இந்த மாதிரி எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக அன்று நான் போட்ட வேலி போலியானது என்பதை இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. பல நல்ல, நல்ல தருணங்களையும், வாய்ப்புகளையும் நானே போட்டுக்கொண்ட போலியான வேலியினால் இழந்திருக்கிறேன்.
உதாரணமாக சில நிகழ்வுகளை சொல்கிறேன்.
என் தந்தையாரின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன்தான் கனடாவில் வாழும் "இன்னிசை வேந்தர்' பொன்.சுந்தரலிங்கம். அவரும் நானும் ஒரேநாளில் கல்லூரியில் சேர்ந்தோம். அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைக் கல்லூரியில் சேர்ந்தார். அச்சமயம் அங்கே சீர்காழி கோவிந்தராஜனும் மாணவராக இருந்திருக்கிறார். நான் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் பி.யூ.சி.யில் இணைந்தேன்.
பிற்காலத்தில் என் அண்ணன் சுந்தரலிங்கம் சென்னையில் தன் மனைவியின் சகோதரர் மகன் திருமணத்திற்கு அழைத்தார். நானும் மனைவியும் கல்யாணத்துக்கு போயிருந்தோம். அங்கே டெல்லி கணேஷ் வந்திருந்தார். அவர் என் இனிய நண்பர்.
"நீங்க எப்படி இந்தக் கல்யாணத்துக்கு?'' என கேட்டார். "மணமகன் எனக்கு உறவென்றேன்''.
ஒரு சிறப்பான நடிகர், திருமணத்தின் மூலம் எனக்கும் உறவாகிறார். அன்று முழுவதும் அவரோடிருந்தேன். ஒன்றாக சாப்பிட்டோம். பல போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். பெருமையாகப் பேசிவிட்டுப் பிரிந்தோம். அதன்பின்னர் அந்த உறவை, தொடர்பை வளர்த்துக்கொள்ள நான் போட்ட போலியான வேலி தடை போட்டது. தற்போது ஒருசில நாட் களுக்கு முன்னர் அவர் மறைந்துவிட்ட செய்தி பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்தேன். போலி வேலி ஒரு நல்ல நடிகரும், பண்பாளருமான அவரை உறவாக வைத்தும் பலன் எதுவுமில்லாமல் ஆக்கி விட்டதே!
அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்த சீனிவாசராவ் அவர்களின் மகன் ராஜசேகர் என் மாப்பிள்ளை. என் மனைவியின் அக்கா மகள் பொன்னியின் கணவர். நான் எப்போதும் யாரிடமும் இதுபற்றி பேசுவதில்லை. ராஜசேகர் மகள் திருமணத்துக்கு சில ஆண்டுகள் முன்பு நடந்தது... அத்தனை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் வந்திருந்தனர். முதல்வரிசையில் அமர்ந் திருந்தனர். நானும் மனைவியும் அங்கிருந்தோம். வழக்கமான வணக்கங்களே தவிர, உறவுப் பேச்சே இல்லை. இங்கேயும் நான் போட்டிருந்த போலி வேலிதான் தடுத்தது.
என்னோடு படித்தவர்கள், நாடகங்களில் நடித்தவர்கள், திரையுலகில் என்னோடு பணியாற்றியவர்கள், என்னால் திரையுலகுக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர்கள், என்னால் கல்வி பெற்றோர் ஏராளம். நான் அவர்கள் யாரையுமே போய் பார்ப்பதில்லை. அதற்கும் நான் போட்டுக்கொண்ட போலி வேலிதான் காரணம்.
மொழிப் போராட்டங்கள், ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்கள், திரையுலகப் போராட்டங்கள் பலவற்றை நடத்தியிருக்கிறேன். எல்லாமே என் செலவில் தான். அதை வைத்து நான் எப்போதும் விளம்பரம் தேடியது கிடையாது. அதற்கு காரணம் போலி வேலிதான். இதையெல்லாம் வைத்து மற்றவர்கள் தங்களை விளம்பரப்படுத்துவார்கள். அதைப்பற்றியும் நான் கவலைப்பட்டது கிடையாது.
இதையெல்லாம்விட ஒரு பழக்கம் என் வழக்கமானது. யாராவது வி.ஐ.பி.க்களை சந்திக்கப் போவதானால் தனியாகப் போகமாட்டேன். என் னோடு யாரையாவது கூட்டிக்கொண்டுதான் போவேன். நான் ஒரு நிகழ்வுக்கு மட்டும் எப் போதும் தனியாகத்தான் போவேன். நான் போவது வருவது கூட யாருக்கும் தெரியாது. பேரறிஞர் அண்ணா மறைந்தபோது, எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கலைஞர் மறைந்தபோது, அண்மையில் முரசொலி செல்வம் மறைந்தபோது... கூட்டத்தோடு கூட்டமாகப் போவேன், அங்கேயே ஓரமாக நின்று அந்த மகானோடு நான் பழகிய நாட்களில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அழுவேன். அதுதான் அந்த ஆத்மாவுக்கான என் அஞ்சலி.
இதேபோல் யாருமில்லாத நேரங்களில் அவர்கள் நினைவிடங்களுக்குப் போய் நீண்டநேரம் அமர்ந்திருப்பேன். ஒருதடவை நடந்த நிகழ்வை சொல்கிறேன்... உங்களால் நம்பமுடியாது.
என் தம்பி மகளுக்கு ராமச்சந்திர மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் வேணும். எனக்கு உடையார் அய்யாவை நன்றாகத் தெரியும். ஆனால் நான் யாரிடமும், எப்போதும் சிபாரிசுக்குப் போகிறவன் அல்ல. அதுக்கு காரணமும் போலி வேலிதான். அன்று படப்பிடிப்பு முடிய இரவு பத்து மணியாகிவிட்டது. நேராக வீட்டுக்குப் போகாமல், மெரினா... எம்.ஜி.ஆர். நினை விடம் சென்றேன். அங்கே ஒருமணி நேர மாக கண்களை மூடிய நிலையில் மவுனமாக இருந் தேன். கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டேயிருந் தது. நான் கண்களைத் திறந்தபோது... சற்றுத் தள்ளி இருட்டான இடத்தில் ஒருவர் நின்றிருந்தார். அவர் பின்னால் இருவர்.
"என்ன தம்பி இந்த நேரத்திலே இங்கே?'' அருகில் சென்றேன்... அய்யா உடையார்.
"ஏதாவது பிரச்சினையா?'' அவரே கேட்டார்.
"படப்பிடிப்பு முடிய நேரமாச்சு...'' நான் தயங்கி னேன்.
"நீங்க கண்ணைத் திறக்கட்டும்... பேசிட்டுப் போகலாம்னுதான் நின்னுக் கிட்டிருக்கேன்'' அய்யா உடையார் சொன்னதை நம்பவே முடியவில்லை. நான் மெடிக்கல் சீட் பற்றி சொன்னேன். சீட்டும் கிடைத் தது... பணத்தில் சலுகையும் கிடைத்தது.
இதேபோல் இன் னொரு இரவில் நடிகர் பாண்டியராஜன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் என்னை சந்தித்தார். அதன்பின் அவர் என் "அட்ரா சக்கை... அட்ரா சக்கை', "பேத்தி சொல்லைத் தட்டாதே', "மனைவிக்கு மரியாதை' ஆகிய என் படங்களில் நடித்தார்.
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
எல்லைகளைக் கடந்தவர்... எட்டாத உயரத்தை தொட்டவர்!
கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். புரசை, வெள்ளாளத் தெருவில் என் தாத்தா வீட்டின் எதிர்வீட்டில் வசித்தவர். கழகத்தின் கொள்கைகளை மூன்றுமணி நேரம் விடாமல் பேசுவதில் வல்லவர்... நம்மவர்! எங்கள் உறவினர் கள் அனைவரும் அவரை சந்தித்துப் பேசுவார்கள். நான் மட்டும் ஒருநாளும் அவரைப்போய் பார்த்ததில்லை. இது அறுபதுகளில்...!
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். இந்த மூவரைத் தவிர வேறு கழகத் தலைவர்களை சந்தித்தவனல்ல. ஆனால் 2012ஆம் ஆண்டு நான் கோபாலபுரம் வீட்டு மாடியறையில் கலைஞர் அவர்களோடு தனியாக பேசிக்கொண்டிருந்தேன்... திடீரென லிஃப்ட் கதவு திறந்தது. அவர் வந்தார். வரவேற்று அவர் அமர்ந்ததும் நான் புறப்பட எழுந்தேன். கலைஞர், "இவரைத் தெரியுமா, "பெப்சி'யின் தலைவர் குகநாதன்'' என அறிமுகம் செய்தார். ஏற இறங்க சற்று புரியாத நிலையில் என்னைப் பார்த்தார் அவர்.
உடனே நான் "அண்ணே நான் உங்க எதிர்வீட்டுப் பையன் குகநாதன்'' என்றேன். அவர் கண்களில் இனம் புரியாத மகிழ்ச்சி. அந்த வயதிலும் சட்டென்று எழுந்து தன் மார்போடு என்னை அணைத்துக்கொண்டார்... நம்மவர், எம்மவர், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள். இப்போதுதான் எதையெல்லாம் நான் இழந்திருக்கிறேன் என்பது புரிகிறது!
-வி.செ.குகநாதன்