cc

(35) குரல் கேட்டு நான் அழுதேன்!

தொலைபேசியில் ஏவி.எம். சரணவன் அவர்கள் என்னுடன் பேசினார்கள். அவர் கேட்ட முதல் கேள்வி, "உங்கள் படத்தில் நடித்த யோகிபாபு தற்போது நடிக்காத படங்களே இல்லையென்று சொல்லும் அளவு எல்லா படங்களிலும் அவரை என்னால் பார்க்க முடிகிறது. உங்கள் படம் நான் பார்த்தேன்... நல்லாத்தானே இருந்துச்சு, ஏன் இன்னும் ரிலீஸ் பண்ணல?''. ரெண்டாவது கேள்வி... "உங்க தாய் வீடுன்னு ஏவி.எம்.ம சொல்லுவீங்களே... இப்ப சிலகாலமா என்னைக்கூடப் பார்க்க வரலையே... ஏன் பிரதர்?'' என்று கேட்டார். எனக்கு அழுகையே வந்தது.

சரவணன் சார், சில வருடங்களுக்கு முன்னால் அளித்த பேட்டியில் என்னைப் பற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "நாங்கள் ஏவி.எம். சகோதரர்கள் தயாரிப்பில் இறங்கு வதற்கு முன்பாகவே அப்பச்சியோடு இணைந்து எங்கள் ஏவி.எம். கம்பெனியில் படம் எடுத்தவர் குகநாதன். அவர் எப்போதும் எங்கள் குடும்பத்தில் ஒருவர்'' என பதில் அளித்திருந்தார்.

Advertisment

அண்ணா நகரிலே வசிக்கின்ற என் அத்தை மகன் ரவி மஸ்கட், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளிலே தொழிலதி பராக பவனிவருகின்றவர். அவர் சேம்பர் ஆஃப் காமர்ஸில் திரு.ஏவி.எம். பாலு அவர்களை சந்தித்தபோது, "நான் குகநாதனின் நெருங்கிய உறவினர்' எனச் சொன்னதும், பாலு சார், "அப் படியா? அவர் எங்கள் ஏவி.எம். குடும்பத்தில் ஒருவர்'' என்று சொல்லி, அவரோடு ஒரு புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தார். அதேபோல் ரவி போன்பண்ணி, நடந்ததைச் சொல்லி... "எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு அண்ணா'' என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த ஏவி.எம்.முக்கு போவதை நான் தற்போது தவிர்த்துவிட்டேன். அதற்குக் காரணம் நமது மாண்புமிகு இன்றைய முதல்வரின் மெய்க் காப்பாளர்களில் ஒருவர். மூன்று நாட்களாக சரவணன் சார் எனக்கு போன்பண்ணி, "புதிய முதல்வர் ஸ்டுடியோவுக்கு வர இசைந்துள்ளார். அந்த சமயத்தில் நீங்கள் அவசியம் இங்கே இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். அதனால் சொன்ன நாளில், நானும் சொன்ன நேரத்துக்குப் போனேன். விழா நடக்கும் இடத்துக்கு 50 அடிக்கு முன்னால் ஒரு போலீஸ் ஆபீஸர் என்னை தடுத்து, "எங்கே போகிறீர் கள்?'' என்று கேட்டார். "சரவணன் சார் வரச்சொன்னார், அதனால் வந்திருக்கிறேன்'' எனச் சொன்னேன். "ஒரு நிமிஷம் நில்லுங்கள்'' என்று சொல்லிவிட்டு, சபாரி சூட் அணிந்த ஒரு ஆபீசரை அழைத்தார். அவர் அருகே வந்தவுடன்... என்னைப் பார்த்து, "உங்க பேர் என்ன?'' எனக் கேட்டார்.

நான் சிரித்தேன். 1967-ல் ஏவி.எம். அவர் களை என்னை அழைத்து, உள்ளே வந்தவன் நான். இதுவரையில் ஏவி.எம்.மில் "உங்க பேர் என்ன?' என்று என்னைக் கேட்டவர்கள் யாருமே இல்லை. இவருக்கு, நான் யார் என்று நன்றாகவே தெரியும், இருப்பினும் கேட்டார். நான் என் பெயரைச் சொன்னேன். உடனே அவர், நாலாவது படப்பிடிப்புத் தளத்திலே ஏ.ஸி. எல்லாம் போட்டு, மேஜை நாற்காலி எல்லாம் போட்டு, டிபனும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அங்க போங்க என்றார். உடனே எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. வேண்டுமென்றே காரை எடுத்துக்கொண்டு நாலாவது தளத்துக்குப் போனேன். அங்கே பி.ஆர்.ஓ. ரியாஸ் நின்றிருந்தார். "சார்... இங்க பத்திரிகையாளர் சந்திப்புதான் நடக்கப் போகுது. நீங்க ஏவி.எம். மோட செல்லப்புள்ள, முன்வழியாத்தான் போக ணும்'' என்று சொன்னார்.

Advertisment

இதற்குள் என் மனைவி, எஸ்.பி.முத்துராம னுக்கு போன்பண்ணி... விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் பதில் என்ன சொன்னார் தெரியுமா? "ஏவி.எம்.ல அவர யாரும்மா தடுக்க முடியும்? சும்மா விளையாடாதீங்க'' என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டார்.

நான் பாலு சாருக்கு போன் பண்ணினேன். அவர் அவருடைய வீட்டிலிருந்தார். அங்கிருந்தபடியே அவர் சொன்னார், "நானே பங்ஷனுக்கு வரல... அதனால அவசரப்படாதீங்க குகநாதன், சரவணன் சார் அப்படிச் செய்யமாட் டார். இதுல ஏதோ தப்பு நடந்திருக்கு'' என எனக்கு ஆறுதல் சொன்னார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சரவணன் சார் போனில் வந்தார். "பத்து பேர் பெயரை அனுப்பினேன். அதில் உங்கள் பெயர் சேர்க்கப் பட்டது. ஏன் இந்த தவறு? நீங்க அவங்ககிட்ட பேசாமா நேரே உள்ளே வரவேண்டியது தானே... உங்க ஸ்டுடியோ தானே?'' என்றும் கேட் டார். அதன்பின்னால் சரவணன் சாரை சந்திக்க நான் விரும்பினால், அவரது ராதாகிருஷ்ணன் சாலை வீட்டுக்குப் போவேனே தவிர, இந்த நிமிடம் வரை ஏவி.எம். ஸ்டுடியோவுக்குள் நான் போனதில்லை. பாவம் முதல்வர்... அவர் தன்னுடைய சக்திக்கு அதிகமாகவே மக்க ளுக்காக உழைத்துக்கொண் டிருக்கிறார். இந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

அடுத்தது என் யோகிபாபு படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஏனென்றால், ஒரே வரியில் சொல்லுகிறேன்... தற்போது திரையுலகம் எம்.ஜி. ஆர். காலம்போல் இல்லை. 1977, என் "மாங்குடி மைனர்' படம் சென்ஸாரால் தடை செய்யப் பட்டது. அன்றிரவுவே எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து படத்தைப் பார்த்தார். ஒரு வாரத்துக்குள் தடை நீங்கியது. படம் ரிலீஸானது... எனக்குப் பணம் கொட்டியது.

ராம.நாராயணன் அவர்கள் மறைந்த பின்னால், அந்த யூனிட்டை வைத்து யாருமே படமெடுக்க முன்வரவில்லை. ஆனால் நான் அவர்களை வைத்துத்தான், இந்த யோகிபாபு படத்தை செய்தேன். அந்த யூனிட்தான் எனக்கு இந்த படத்தை செய்து தந்தார்கள். அதன் ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். ஆனால் இந்தப் படத்தின் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது.

ஏன்? எனக்கே பதில் கிடைக்கவில்லை.

சரவணன் சாருக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதி யாகச் சொல்லுகிறேன். சினிமா தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் தொழில் அல்ல... பிற மாநிலங்களிலும் நடக்கிறது. நான் பல பிற மாநிலங்களில் படம் செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல... பிற நாடுகளிலும் நடக்கிறது.

என் தொழில் அரசியலோ, ஆன்மிகமோ அல்ல... சினிமா மட்டும்தான்!

இந்த இடத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

ss

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்

ஆதவன் மறைவதில்லை

ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்

அலைகடல் ஓய்வதில்லை

பாடல் மட்டுமோ...? அதைப் பாடி திரையில் நடித்தவர்தான் எனக்கு வழிகாட்டி!

avm

அவரது "உலகம் சுற்றும் வாலிபன்' சந்திக்காத சூழ்ச்சிகளா?

செந்தமிழே நீ பகை வென்று

முடி சூடி வா!

என் அடுத்த படம் இதே யோகிபாபு நடிக்கின்ற "லிங்கன் காத்தமுத்து'. அது தடைகளை மீறி வரும். ஏனென்றால்... அதனை தயாரிக்கப்போகிறவன் நான்... வி.செ.குகநாதன்!

(திரை விரியும்)