ss

சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜெயலலிதா அவர்களை "மணிப்பூர் மாமியார்' படம் மூலம் மீண்டும் நடிக்க சம்மதிக்க வைத்தேன். ஜெயலலிதாவுக்கு "கெமிஸ்ட்ரி புரொஃபஸர்' வேஷம். அதனால் மிக ஆர்வமாக ஒப்புக்கொண்டார்.

இளையராஜா இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள். இன்றும்கூட அந்தப் பாடல் எங்காவது ஒரு பக்கம் ஒலித்துக்கொண்டே யிருக்கிறது. ஏனென்றால் அந்தப் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். (ஓரிரு பாடல்கள் வேறு திரைப்படங்களில் பின்னாளில் பயன்படுத்தப்பட்டது.)

அடுத்தநாள் அனைவரும் படப்பிடிப்பிற்கு புறப்பட விமான டிக்கெட்டுகள், ரெயில் டிக்கெட்டுகள் என அத்தனையும் தயார் நிலையில் இருந்தது. அப்போதுதான் அந்த போன் வந்தது. யாரிடமிருந்து வந்தது...?

Advertisment

அந்த போன் ஒரு பெண்மணியிடமிருந்து வந்தது. "படப்பிடிப்புக்கு உன் கணவர் ஹைதரா பாத் போனால்... அவ னைக் கொன்றுவிடு வோம்'' என பலபேர் தொடர்ந்து போனில் மிரட்டினார்களாம். பயந்துபோய் இந்த சேதியை அப்பெண் மணி, கணவனிடம் சொல்லித் தடுக்கப் பார்த்திருக்கிறார்.

"போன்ல யாரோ வேண் டாதவங்க மிரட்றதுக்காக, ஷூட்டிங் போகாமல் இருக்க முடியுமா? என அந்தக் கணவர், மனைவி பேச்சை உதா சீனப்படுத்தியிருக்கிறார். அதனால் அவர் மனைவி எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி, "தன் கணவரை இந்தப் படத்திலிருந்து தவிர்க்க முடியுமா?' என்று கேட்டார். இருப்பதோ இருபத்துநாலு மணி நேரம். மறுநாள் புறப்பட வேண்டும். கடைசி நேரத்தில் என்ன செய்வதெனத் தெரியாமல் அப்பெண்மணிக்கு தைரியம் சொன்னேன். அரைகுறை மனதோடு அம்மையார் போனை துண்டித்தார். என்னால் பின்னால் நடப்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது.

ss

Advertisment

மறுநாள் மதியம் நாயகனாக நடிக்க வேண்டிய ஜெய்சங்கர் என் அலுவலகம் வந்தார். இப்படத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டார். அவர் எப்போதும் எல்லாரிடமும் நல்ல நட்போடு பழகுபவர். அவரால் யாருக்கும் தீங்கு விளையாது. அப்படிப்பட்டவர் சொன்ன விஷயங்களும், கேட்ட பாணியும் எனக்கே அவர் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது. எப்போதும், எதையும் துணிச்சலாக எதிர்கொண்டு பழகிய எனக்கு... இந்த விஷயத்தில் முரட்டுத்தனம் காட்டு வது புத்திசாலித்தனம் அல்ல என்பது புரிந்தது.

"நீங்க வீட்டுக்குப் போங்க... ஒரு மணி நேரத்தில் நான் வருகிறேன்'' எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டு, போயஸ் கார்டன் புறப்பட்டேன். அந்த நேரத்தில் ஜெயலலிதா என்னை எதிர் பார்க்கவேயில்லை. அதிலும் நான் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக கோபம் அடைந்தார். அவர் கோபத்தில் நியாயமிருந்தது. "படப்பிடிப்பை நிறுத்த வேண் டாம்... வேறு நாயகனைப் போட்டு நடத்திவிட லாம்'' என்றார். நான் சற்றுத் தயங்கினேன். இதற்குப் பின்னாலிருந்த பிரச்சினையை அவரும் அறிவார்... நானும் அறிவேன். நான் சற்று யோசித்துவிட்டு, "இப்படத்தில் நாயகனை மாற்றிவிட்டு... படப்பிடிப்பு முழுவதையும் சென்னையிலேயே நடத்தினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது'' என்று சொன்னேன். அது சரியென்று அவரும் ஒப்புக்கொண்டார்.

"ஏங்க... காந்தம் இரும்பை ஈர்க்கிறதா? இரும்பும் இசைவதனால் காந்தம் கவர்கிறதா?' சம்பந்தமில்லாமல் கேட்டேன். கேட்க வேண்டிய இடத்திலே போய் கேளுங்க. அதுக்குத்தான் உங்களுக்கு உரிமை இருக்கே? ஆனால் நாயகன் யாருன்னு சீக்கிரம் முடிவு பண்ணி படப்பிடிப்பை ஆரம்பிங்க'' என்று ஒரு கண்டிப்புடன் சொன்னார்.

அவரின் ஆதங்கத்தையும், அவசரத்தையும் புரிந்துகொண்ட நான் தீவிரமாக சிந்தித்தேன். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வித மாக நான், விஜயகுமார், ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து "மாங்குடி மைனர்' படத்தை எடுத்திருந் தேன், படத்தை எம்.ஜி.ஆர். அவர்களே பார்த்து, என் கைகளைக் குலுக்கி என்னைப் பாராட்டினார். விஜயகுமார் கையிலே பச்சை குத்த வச்சு கட்சியிலே சேர வைத்தேன். அதனால் "மணிப்பூர் மாமியார்' படத்தில் விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து ஜெயலலிதாவிடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார். சென்னை லிஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் படப்பிடிப்பைத் தொடங்கினேன். மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஜெயலலிதா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். உற்சாகத்துடன் நடித்தார். தமிழ்ப் பேராசிரியரும், ரசாயன விரிவுரையாளரும் வகுப்பறையில், கல்லூரி வளாகத்தில், விடுதியில் மோதிக்கொள்ளும் சூப்பர் காட்சிகளைப் படமாக்கினேன்.

ஒரு காட்சியில் தமிழ்ப் பேராசிரியர், காதலை வெறுக்கும் ரசாயன விரிவுரையாளரான -நாயகிக்கு காதல் உணர்வைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாத்ஸாயனர் எழுதிய "காமசூத்ரா' புத்தகத்தை வேறு பல புத்தகங்கள் மத்தியில் வைத்துக் கொடுத்துவிடுவார். நாயகி தன் அறைக்குப் போனபின் அட்டை போடப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பார். வேண்டுமென்றே அந்த சமயம் பார்த்து நாயகன், நாயகி அறைக்குள் வந்துவிடுவார். நாயகி தடுமாறிப் போவார். என்ன பேசுவது, புத்தகத்தை மறைப்பதா, சில வரிகள் படித்ததால் ஏற்பட்ட உடல் நடுக்கம் வியர்வையை துடைப்பதா? என புரியாமல் உளறுவார்.

தமிழ்ப் பேராசிரியர் அருகில் அமர்ந்து ஏன் தடுமாற்றம் என விசாரிப்பார். அம்மையார் நெற்றியில் கை வைத்துப் பார்த்து, "உடல் ஏன் இவ்வளவு கொதிக்கிறது... டாக்டரை வர வழைக்கவா?'' என்றெல்லாம் கேட்பார். தன் திட்டம் வேலை செய்யத் தொடங்கியதில் நாயகனுக்கு மகழ்ச்சி. அவர் கிளம்பிப் போய்விடுவார். அவர் போனதும் புத்தகத்தை தூக்கி எறிந்துவிட்டு, முக வியர்வையைத் துடைத்துவிட்டு, குளிர்நீர் எடுத்து குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்.

அன்றைக்கான, தான் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்ததனால் விஜயகுமார் போய்விட்டார். மாலை ஆறு மணி ஆகி விட்டதனால் ஜெயலலிதாவிடம் "நீங்களும் புறப்படுங்க. மீதியை நாளைக்கு எடுக்கலாம்'' என்று சொன்னேன். "இல்லை... இந்தக் காட்சியில் மிகச்சிறிய பகுதியே மீதமிருக்கிறது. அதை முடித்துவிட்டால் காலையில் புதுக் காட்சியோடு ஆரம்பிக்கலாம்'' என்று அமர்ந்துவிட்டார். நானும் தொடர்ந்து அவசர அவசரமாகப் படப்பிடிப்பை நடத்தினேன்.

இடையில் என்னை அருகே கூப்பிட்டார். "நாயகன் என் நெற்றியில் கை வைத்து பார்த்ததும் அவரோட ரியாக்ஷன் குளோஸ் அப் எடுத்தீர்கள். அவர் கை என் நெற்றியில் பட்டதும் என் உணர்வுகளை "குளோஸ்-அப்' எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே... எடுக்கவில்லையே?'' எனக் கேட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன்.

நான் அதை மறந்துவிட்டு விஜயகுமாரை "உங்க வேலை முடிஞ்சுது நீங்க போகலாம்'' என அனுப்பிவிட்டேன். "பரவாயில்லே மேடம். நாளைக்கு எடுத்துக்கலாம்'' என்று சொன்னேன். "எதுக்கு நாளைக்கு? அவர் கையிலே போட்டிருந்த மோதிரத்தை காஸ்ட்யூமரை கொண்டுவரச் சொல்லுங்க'' என்றார். மோதிரம் வந்தது. அதை என் கையிலே போடச் சொல்லி, என் கையை தன் நெற்றியில் வைக்கச் சொல்லி அந்த ஷாட்டை எடுக்கவைத்தார்.

அவர் வெறும் நடிகை மட்டுமல்ல... அன்றே அஷ்டாவதானியாக இருந்தவர். பற்றுள்ளவராக, பாசம் உள்ளவராக, இரக்க சுபாவம் உள்ளவராக, நம்பிக்கைக்கு உரியவராக, நன்றியுள்ளவராக இருந்த அவரின் கடைசி முடிவு மட்டும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. பிற்காலத்தில் அவரை ஏதோ ஒரு தோஷம் மிகவும் பாதித்திருக்கிறது. அது பழக்க தோஷம்தான் என்று "சோ' அவர்கள் என்னிடம் சொன்னது இப்போது என் நினைவில் வந்துபோகிறது.

"மணிப்பூர் மாமியார்' படம் ஏழாயிரம் அடிவரை வளர்ந்திருந்தது. எடுத்த வரைக்கும் எடிட் செய்து படத்தைப் பார்த்தேன். நகைச்சுவை, காதல், பழிவாங்குதல் என கதை வேகமாக நகர்ந்தது. அதைப் பார்க்க வேண்டும் என ஜெயலலிதா அவர்கள் விரும்பினார்கள். ஏவி.எம். ஏ.சி தியேட்டரில் போட்டுக் காண்பித்தேன். பார்த்துவிட்டு "நான் எதிர்பார்த்ததைவிட மிக நன்றாக வந்திருக்கிறது'' என பாராட்டினார்கள். பாடல்களை ரிலீஸ் செய்ய இசை வெளியீட்டு விழா நடத்தினோம். பாடல்கள் பட்டிதொட்டி யெங்கும் மிக பிரபலமாயின.

அந்த வேளையில்தான் என் ஃபைனான்சியர் என் அலுவலகம் வந்தார். "மணிப்பூர் மாமியார் படத்துக்கு தொடர்ந்து தன்னால் பண உதவி செய்யமுடியாது' என காரணமில்லாமல் கைவிரித் தார். எப்போதும் எனக்கு உதவி செய்யக்கூடிய ஏவி.எம். அவர்களும் அந்த சமயத்தில் காலமாகி விட்டார். நான் திகைத்துப்போய் நின்றேன்.

வேறு சில ஃபைனான்ஸியர்களிடம் பேசினேன். "வேற படம் எடுங்க... தர்றோம். இந்தப் படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணமுடியாது' என்றார்கள். என் படங்களைத் தொடர்ந்து வாங்கும் விநியோகஸ்தர்களும் படத்தை வாங்க, தயக்கம் காட்டினார்கள்.

அந்தச் சமயம் அரசியலிலும், சினிமாவிலும் மிகப்பிரபலமாக இருந்த அவர் "படத்தை கொஞ்சகாலத்திற்கு நிறுத்தி வையுங்கள்' என்றார். நான் அழுதுவிட்டேன். படம் நிறுத்தப்பட்டதற்கு அல்ல... எனக்கு மிக வேண்டியவர்களின் மனசை புரிந்துகொள்ளாமல் இந்தப் படத்தை எடுத்ததற்காக.

படத்தை நிறுத்திவிட்டேன். இதனால் கோபமான ஜெயலலிதா என்னை அழைத்தார். ஆனால் நான் அவரை சந்திப்பதை முழுவதுமாகத் தவிர்த்துவந்தேன். உடனே விசுவுக்கு போன் செய்து, "ஸ்கிரிஃப்ட் ஃபைலை கொண்டாங்க, நாம் இந்தப் படத்தை முடிப்போம்' என்று சொல்ல... அவரோ, "மேடம் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதும் குகநாதன் சாருடையது. வசனம் மட்டும்தான் நான்...' எனச் சொல்லிவிட்டார். அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது "மணிப்பூர் மாமியார்' படம்.

பேரறிஞரோடு பழகிய நான்... மூதறிஞரை சந்தித்த அனுபவம்...

(திரை விரியும்)