(32) ஜெயலலிதாவின் காபூல் மாதுளை ரகசியம்!
நான் கொஞ்சம் முன்கோபக்காரன். பின் விளைவைப் பற்றி கவலைப்படாமல் பேசிவிட்டு, பின்னால் வருத்தப்படுவேன். அப்படி ஒரு நிகழ்வினால் நானும் நண்பர் எஸ்.பி. முத்துராமனும் பிரிய நேரிட்டது. அது தற்காலிகமானது என நினைத்த நான் மறுநாள் அவரைக் கூட்டி வர, அவரது வீட்டுக்குப் போனேன். அவர் வர மறுத்துவிட்டார். அப் போதுதான் அவர் ஏதோ ஒரு திட்டத்துடன் தான் பிரிந்து போயிருக்கிறார் என்பது புரிந்தது. ஐந்து படங்கள் என் தயாரிப்பிலும் என் எழுத்திலும் தொடர்ந்து பணியாற்றிய நண்பர், நான் உருவாக்கிய யூனிட்டையும் அழைத்துக்கொண்டு போய்விட்டதனால்... நான் தனித்து விடப்பட்டேன். உடல் நலமும் பாதிக்கப்பட்டேன். மனதளவிலும் உற்சாகம் குன்றிப்போனது. திரை உலகில் தொடரலாமா, வேண்டாமா என்றுகூடத் தடுமாறினேன். அந்த சமயத்தில் பல நண்பர்கள் என்னை சந்தித்து பலவிதமான அறிவுரைகளைச் சொன்னார்கள்.
அந்த சமயம்... ஒருநாள் காலை என் போன் அடித்தது. எடுத்துப் பேசினேன். "நான் அம்மு பேசுறேன்'' எதிர் முனையில் ஜெயலலிதா அவர்கள் பேசினார்கள்.
"இப்ப, உங்க அடுத்த படத்தோட விளம்பரம் வந்திருக்கணுமே ஏன் வரலே?'' என்று கேட்டார்.
"இடையிலே ஒரு குழப்பம்...'' நான் சொல்லி முடிப்பதற்குள் அம்மு இடைமறித்தார்.
"அந்த யூனிட்டை நீங்கதானே உருவாக்கி னீங்க. அவங்க போயிட்டா என்ன...? நீங்க டைரக்டர் ஆயிடவேண்டியதுதானே?''
சற்றும் நான் எதிர்பார்க்காததை... சாதாரணமாகக் கேட்டார்!
"இடையிலே ஒரு தடை வந்தா தயங்கி நிற்கக்கூடாது. அடுத்த கட்டத்துக்கு தாண்டிப் போயிடணும். சீக்கிரம் டைரக்டர் ஆக என் வாழ்த்துகள்'' எனச் சொல்லிவிட்டு போனை துண்டித்தார் என் முதல் பட நாயகி.
அதுவரை நான் சிந்திக்காத ஒரு புதிய கோணத்தில் என்னை சிந்திக்க வைத்தவர் ஜெயலலிதா அவர்கள். ஆனாலும் அதை வேத வாக்காக எடுத்து உடனே நான் செயல்பட வில்லை. அவர் சொன்னது ஓர் தூண்டுகோலாக இருந்ததே தவிர, பெரிய மாற்றத்தை எனக்குத் தரப்போகும் அறிவுரையாக அப்போது படவில்லை, இப்போது அவர் இல்லாத நிலையில் நினைத்துப் பார்க்கின்றேன்.
நான் இயக்குனர் ஆவதற்கு முதல்பொறி யாக இருந்தவர் என் முதல்பட நாயகிதானே? நான் எனது அடுத்த கதையை எழுதியபோது, முழு திரைக்கதையை (ஷாட் டிவிஷன் பண்ணி) ஓர் இயக்குனர் எழுதும் ள்ட்ர்ர்ற்ண்ய்ஞ் ள்ஸ்ரீழ்ண்ல்ற் போல் விபரமாக எழுதினேன். அந்தக் கதையை நான் தயாரிப்பாளர் ராமாநாயுடு அவர்களிடம் சொன்னபோது... அவரே தானாக முன்வந்து "இப்படத்தை நீயே டைரக்ட் பண்ணு'' என்று கேட்டுக்கொண்டார். ஐந்து விருதுகளை அள்ளிய "மதுரகீதம்' படத்தைத் தயாரித்ததோடு, என்னையே முதன்முதலாக இயக்குநராக்கினவர் ராமாநாயுடு. படம் பார்த்தபின், முதல் பாராட்டு ஜெயலலிதாவிடமிருந்துதான் வந்தது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்பவும் என் காதுகளில் ஒலிக்கின்றன. "நான் எது நடக்கும்னு எதிர்பார்த்தேனோ... அது நடந்துவிட்டது.'
"மதுரகீதம்', "மாங்குடி மைனர்', "மச்சானைப் பார்த்தீங்களா' ஆகிய படங்களை இயக்கி... இயக்குனர்கள் பட்டியலில் ஓர் இடத்தைப் பிடித்த பின்னர், போயஸ் கார்டன் போனேன். மிக்க மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றார்.
"நான், ஒரு கதை எழுதியிருக்கிறேன்... அதைக் கேட்க முடியுமா?''’என்று கேட்டேன்.
மறுப்பேதும் சொல்லாமல் பொறுமை யாக உட்கார்ந்து கேட்டார். கதை சொல்லி முடித்ததும் எழுந்து உள்ளே போய்விட்டார். சற்று நேரம் கழித்து அவரே கையில் ஒரு பெரிய கிளாசில் மாதுளம்பழம் ஜூஸோடு வந்தார், என்னிடம் தந்தார்.
"கதை பிரமாதம். கதாநாயகி கதாபாத்திரம் அற்புதம்'' என்றார்.
"காபூல் மாதுளம்பழ ஜூஸ் கொடுத்தாலே, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்'' என்றேன் நான்.
"இதை யார் உங்ககிட்ட சொன்னது?''
"அதை தெரிஞ்சவங்கதானே சொல்லியிருப்பாங்க''
"வேற என்ன சொன்னாங்க'' என வருத்தத்துடன் கேட்டார். சில நேரம் சொந்த வாழ்வின் சோகங்களைப்பற்றி சொன்னார். பிற்காலத்தில் அரசியலில் பெரும் புரட்சிப் பெண்ணாகக் கொண்டாடப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், சோகங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாமே வந்துபோனதை மனம் திறந்து என்னிடம் பேசினார்கள். அதை எல்லாம் கேள்விப்பட்டுத்தான் நான் அங்கு போனேன் என்பது அவருக்குத் தெரியாது.
எப்போதும் எதையாவது அவர் சொன் னால் கேட்டுக் கொள்வேனே தவிர, நானாக எதையும் சொல்லமாட்டேன். அவரோடு எனக்கிருந்த பழக்கம் அவ்வளவுதான். தான் விரைவில் அமெரிக்கா போக நினைப்பதாக வும் சொன்னார். எதை எதையோ தவிர்ப்பதற் காகத்தான் அவர் வெளிநாடு போக நினைக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். அவர் உள் மனதில் ஏற்பட்டிருந்த இந்த எண்ணத்தை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்களிடம் முதலில் சொன்னவன் நானாகத்தான் இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் விரக்தியான எண்ண ஓட்டத்தை மாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் "நான் சொன்ன கதையிலே யார் நடிச்சா நல்லா இருக்கும்?''னு கேட்டேன்.
"எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா நடிச்சா அது வெள்ளி விழாப்படம், ஆனால் முடியாதே? நீங்க யாரை ஒப்பந்தம் பண்றதா உத்தேசம்?''
"உங்களை மனசிலே வைச்சுத்தான் ஈட்ங்ம்ண்ள்ற்ழ்ஹ் கங்ஸ்ரீற்ன்ழ்ங்ழ் கதாபாத்திரத்தை எழுதினேன்."
"நிஜமாவா?'' ஒரு குழந்தையைப் போல் ஆவலோடு கேட்டவர்... "அப்ப அந்த தமிழ்ப் பேராசிரியர் கதாபாத்திரம்...''
அவர் முடிக்கு முன்னரே "ஜெய்சங்கர்'' என்றேன்.
"அவர்தான் உங்க நண்பராச்சே? சினிமா வுக்கு வர்றதுக்கு முன்னாடியே அவரும் நீங்க ளும் கூத்தபிரான் நாடகங்களிலே நடிச்சிருக்கீங் களாமே'' எனக் கேட்டார் அவர்.
''என்னங்க நீங்க. எங்கண்ணன் எம்.ஜி.ஆர். மாதிரி எப்பவோ எங்கேயோ நடந்த விஷயங் களை எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. இந்தப் பழைய கதை எல்லாம் யார் உங்களுக்கு சொன்னது?''
"இப்ப அதுவா முக்கியம்? இந்தப் படத்தை எப்ப ஆரம்பிக்கப்போறீங்க?''
"நீங்க தேதிய தந்ததும் ஆரம்பிச்சிடலாம்''
"அப்படியா?'' எனக் கேட்டவர்... தானே டயரியை எடுத்துப் பார்த்து ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்கள் ஒதுக்கித் தந்தார்கள். அதே தேதிகளை ஜெய்சங்கரிட மும் பெற்றுக்கொண்டு ஹைதரா பாத்தில் ஒரே மூச்சில் படப் பிடிப்பு நடத்த எல்லா ஏற்பாடு களையும் பண்ணினேன்.
அந்த சமயத்தில் நாடக உலகில் மிகவேகமாக வளர்ந்து வந்த விசு அவர்களை வசனம் எழுத ஒப்பந்தம் செய்தேன். முழு வசனங்களையும் எழுதச் சொல்லி "ஃபைலை' பெற்றுக் கொண் டேன். சுருளிராஜனையும், பிரவீணாவையும் நகைச்சுவை ஜோடியாக ஒப்பந்தம் செய்தேன். ராஜ சுலோசனா மணிப்பூர் மாமியாராக நடிக்க ஒப்பந்த மானார். படத்தின் பெயர் "மணிப் பூர் மாமியார்' என முடிவு செய்யப் பட்டது. இளையராஜா இசை யமைத்தார். ஏவி.எம். ஆர்.ஆர். தியேட்டரில் ஒட்டுமொத்தமாக ஆறுபாடல்களும் பதிவு செய்யப்பட்டன. பாடல் பதிவின்போது வந்து பாடல்களைக் கேட்டு பாராட்டினார். அந்த பாத்தி ரத்துக்கான ஆடை அணிகளை, தானே தேர்வு செய்து வாங்க விரும்பினார் ஜெயலலிதா. பணம் கொடுத்து அனுப்பினேன். அவரே ஆடை அலங்கார டிசைனரையும் அழைத்துப் போய் எல்லாவற்றையும் வாங்கி வந்தார்.
ஆனால்... படம் நின்று போனது. அதற்குக் காரணம்...
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்
___________
என் இனிய தமிழ் சொந்தங்களே...!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசியலாக்குவதும், "திராவிட நல்திருநாடும்' என்ற வரிகளை நீக்குவதும் அறிவற்ற செயல். இதை எவர் செய்தாலும், அவர்கள் தமிழ் இன விரோதிகள் அல்ல, துரோகிகள்! ஒரு தேசிய இனத்தையும், அதன் மொழியையும், உணர்வையும் இழிவுபடுத்த நினைப்பது ஈனத்தனத்தின் எல்லையாகும். மொழிவழி வாழும் ஒரே இனம் தமிழினம். நமது மொழி வளத்தை, அரசியலுக்காக மேடைகளிலே போற்றுவது போல் நடிப்பவர்கள் கூட இச்செயலை வரவேற்கமாட்டார்கள். இச்செயலை கண்டிக்காமல் இருக்கும் தமிழனோ, தமிழச்சியோ, எந்தக் கட்சியில் இருந்தாலும்... அவர் தமிழ்த்தாயின் மகனாகவோ, மகளாகவோ இருக்க அருகதையற்றவர்! கனகவிசயரை இமயத்திலிருந்து கல் சுமந்து வரவைத்து கண்ணகிக்கு கோட்டம் அமைத்த இனம் தமிழினம். அந்த சேரன் செங்குட்டுவனை மறப்போமா?
உலகம் பூரா பரவிக் கிடக்கும் என் ரத்த உறவுகளே... தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை மனப்பாடம் செய்து... தினமும் ஒருதடவை பாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்! தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இப்பாடலை அட்டையில் எழுதி வீட்டு முகப்பில் தொங்கவிடுங்கள். சிறுவர்கள், சிறுமிகள் வீதிகளில் போகும்போதும், வரும்போதும் இப்பாடலை சத்தமாகப் பாடி மகிழுங்கள். கலைஞர்களே! உங்களின் எல்லா கலைப்படைப்புகளிலும் இப்பாடலை இணைத்து உலகம் சுற்றவிடுங்கள்.
-வி.செ.குகநாதன்