(30) பெண்கள் கௌரவித்த பெத்த மனம் பித்து!
நடிகர் முத்துராமன் அவர்களை வைத்து பல படங்களை நான் எழுதி, தயாரித்திருக்கிறேன். அவரும் ஜெயலலிதாவும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்குப் பிடித்த படம் "சூரியகாந்தி.' இந்தப் படம் பற்றி அடிக்கடி என்னிடம் சிலாகித்துப் பேசுவார். தனக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த படங்கள் நல்ல வெற்றியைத் தந்ததால் அவர்களை தனது ராசியான ஜோடியாக நினைத்தார் முத்துராமன்.
அவர் என் கம்பெனி தயாரிப்பில் நடித்த மூன்றாவது படம் "பெத்த மனம் பித்து'. இந்தக் கதையை நான் அவரிடம் சொன்னதும், "அருமையான கதையை எழுதியிருக்கீங்க என என்னை ரொம்பவே பாராட்டிவிட்டு, "கதாநாயகியாக சாரதா இல்லேன்னா கே.ஆர்.விஜயாவை ஒப்பந்தம் செய்தா நல்லா இருக்கும்... கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும்' என்றார். அதை பலமுறை வலியுறுத்திச் சொன்னார்.
நானோ... ஜெயாதான் (ஜெயா குகநாதன்) கதாநாயகி என்பதில் பிடிவாதமாக இருந்தேன். மிக அழுத்தமான பாத்திரத்தில் ஜெயாவால் சோபிக்க முடியுமா? என்கிற சந்தேகம் அவருக்கு. "எனக்கோ... ஜெயாவால் அந்த பாத்திரத்தில் மிளிர முடியும்' என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனால் ஜெயாவே நடித்தார். படம் செம ஹிட்டடித்தது. பல ஊர்களில் நூறு நாட்கள் ஓடியதுடன், வசூலையும் வாரிக்குவித்தது.
"பெத்த மனம் பித்து' படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா இரண்டு முறை கொண்டாடப்பட்டது ரொம்ப விசேஷமாக இருந்தது. தயாரிப் பாளர் என்கிற முறையில் நான் நடத்திய வெற்றிவிழாவில் அன்றைய முதல்வர் கலைஞர் கலந்துகொண்டு, கேடயங்களை வழங்கிச் சிறப்பித்தார். இரண்டாவது வெற்றிவிழாவை முத்துராமன் ரசிகர் மன்றத்தினர் நடத்தினர்.
நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்த இந்த விழாவில் பெரும்பாலும் பெண் பிரபலங்களே கலந்துகொண்டது ஹைலைட்டாக அமைந்தது. ஜெயலலிதா கேடயங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெண்களே கலந்துகொண்டனர். (இந்த புகைப்படத்தில் இருப்பது ஜெயசுதா, ஜெயா, மேடம் சௌந்தரா கைலாசம் (காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மாமியார், ஜெயலலிதா, பானுமதி, சாவித்திரி, மனோரமா மற்றும் கேடயத்துடன் நான்.) பெண்களைப் பெருமைப்படுத்தும் ஒரு கலைவிழா போல் அந்த விழா அமைந்தது.
அந்த மேடையில்தான் ஜெயலலிதாவின் மேடைப் பேச்சைக் கேட்டேன். பிற்காலத்தில் அரசியலில் பிரச்சார பீரங்கியாக மாறுவார் என்று அப்போது யாரும் கனவில்கூட நினைத்திருக்க முடியாது. "பெத்து மனம் பித்து' படத்தை மேம்போக்காகப் பாராட்டாமல், படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு விமர்சித்து பாராட்டினார். எனக்கு கேடயம் தரும்போது... "இதுமாதிரி பெண்களுக்கான படங்களை எழுதித் தயாரித்து பெருமையான உயரத்தை நீங்க அடையணும்' என வாழ்த்தினார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த புகைப் படத்தை பொக்கிஷம் போல இன்றளவும் பாதுகாத்து வருகிறேன்.
எல்லோர் மீதும் காலம் தன் சுழற் கண்ணாடியை சுழலவிட்டு வேடிக்கை பார்க்கும். அப்படித்தான் ஜெயலலிதா மீதும் சுழலவிட்ட நேரம். பிற்காலத்தில் இறுக்க மான; யாருமே நெருங்க முடியாத, எதற்கும் அஞ்சாத சிங்கநிகர் பெண்ணாகக் காட்சி யளித்த ஜெயலலிதா, சினிமாவில் சரிவைச் சந்தித்துக்கொண்டிருந்த நேரம்.... அன்புக்கும், பாசத்துக்கும் மிகவும் ஏங்கும் பெண்ணாகவே இருந்தார். தன் அம்மாவுக்குத் தெரியாமல்கூட அடுத்தவர்களுக்கு உதவிசெய்வதை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர்களின் கஷ்டங் களில் பங்கேற்று, நல்ல அறிவுரைகளை மென்மையான வார்த்தைகளில் உருக்கமாகப் பேசி உணரவைப்பார். நம்பி வாழ்ந்த இதயம். எங்கோ நம்பிக்கைத் துரோகம் நடந்தது. பூ ஒன்று புயலான கதை இவர் வாழ்விலும் நடந்தது.
கலை உலகிலிருந்து சிலகாலம் விலகியிருந்தார் ஜெயலலிதா. அவருக்கு ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம் இருந்தது. ஓய்வெடுக்கவும், தோட்ட பராமரிப்பை செய்யவும் அடிக்கடி ஐதராபாத் செல்வார். அந்த சமயத்தில் சோபன்பாபு நடித்த சில படக் களுக்கு கதை எழுதிக்கொண்டிருந்தனால்... நான் அங்கே, தயாரிப்பாளர் டி.ராமநாயுடுவின் கெஸ்ட்ஹவுஸில் நீண்ட நாட்கள் தங்கி யிருந்தேன்.
டி.ராமாராவ், ராகவேந்திரராவ், ராகவா, பாப்பையா, தாசரி நாராயணராவ்... ஆகியோருக் கெல்லாம் நான் கதைகள் எழுதிக்கொண்டு, மிகவும் பிஸியாக இருந்தேன். அதனால் ஜெயலலிதாவை அடிக்கடி ஐதராபாத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். தன்னைப் பற்றி மனம்விட்டு என்னிடம் பல விஷயங்களைப் பேசுவார். அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தது என் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதுபற்றி நான் அவரிடம் கேட்கமாட்டேன்.
நான் இந்தி உட்பட வேறு மொழிப் படங் களுக்கு கதை எழுதச் சென்றபின், ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. சுமார் இரண்டு வருடங்களாக அவரைச் சந்திக்கவில்லை. அந்த சமயத்தில் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா வுக்குத் உதவியாக இருந்தவர்கள், மேக்-அப் மேன் கோபால் மற்றும் கார் ஓட்டுநர் மாதவன் ஆகிய இருவரும்தான்.
ஒருநாள் காலை... என் அலுவலக தொலைபேசி ஒலித்தது. எடுத்தேன்.
"நான் அம்மு பேசுறேன்...''
என் முதல்பட கதாநாயகி யாச்சே... மறக்க முடியுமா? உடனே புரிந்துகொண்டு "சொல்லுங்க'' என்றேன்.
"நான் யாருனு தெரியுதா?''
"சினிமா உலகைப் பொறுத்த வரைக்கும் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அடுத்ததா, என் மனசிலே நிலைச்சிருக்க திரைக் கலைஞர் நீங்கதானே... உங்களை எப்படி மறக்க முடியும்?''
"கொஞ்சம் நேரிலே பேசணும்... வரமுடியுமா?''
"உடனே வர்றேன்'' எனச் சொல்லிவிட்டு போயஸ் கார்டன் போனேன்... சந்தித்தேன்.
என்னைப் பற்றி விசாரித்தார். என் திரையுலக வளர்ச்சி பற்றியும் தனது மனமகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
"என்னோட வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடலாம்னு இருக்கேன்'' என்றார்.
அவரது குணம் எனக்குத் தெரியும். அதனால் நான் உடனடியாக மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
வீட்டை நிறைய ஆல்ட்டர் செய்திருந்தார். அதையெல்லாம் எனக்கு சுற்றிக் காண்பித்தார். காபி கொடுத்து உபசரித்தார்.
கிளம்பும்போது நான் சொன்னேன்... "தயவுசெஞ்சு அவசரப்படாதீங்க. மறுபடியும் ஒருமுறை ஷூட்டிங்கிற்கு வீட்டை வாடகைக்கு விடுறது பத்தி பேசலாம்'' என்றேன்.
அடுத்த சந்திப்பில் ஜெயலலிதாவின் கண்களில் கண்ணீர் இல்லை... அவரின் குரல் தழுதழுத்தது. எனக்குக் கண்களில் நீர் திரையிட்டது...
(திரை விரியும்)
______________
அதிகாரத்திற்கு ஆசைப்படாத செல்வம்!
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையாக, மொழிப்பற்றாளர்களின் செம் மொழிப் பூங்காவாக, கழகத்தின் கருவூலமாக விளங்கும் கோபாலபுரத் துப் பண்ணையிலே.... எருது வாகனத்து இதயமற்றோன் நுழைந்து ஒரு ஆணிவேரை அறுத்தெடுத்துப் போன இரக்கமற்ற செயலும், அதனால் துவண்டு விழுந்து துடித்த மாசற்ற உறவுகளும், "மன்னனே ஆனாலும் நான் சாய்வதற்கென்றிருந்த ஒற்றைத் தோளையும் இழந்தேனே' எனக் கதறி நின்ற காட்சியும், காதல் கணவரின் நெஞ்சிலே விழுந்து கதறிய தமிழ்ச்செல்வியையும் ஊடகத்தில் கண்டு பரித்தவித்துப் போனவர்களில் நானும் ஒருவன். பறிபோனது சாதாரண செல்வமல்ல... முரசொலித்த செல்வம் -பன்னீர்செல்வம். தன்னிகரற்ற பல திறமைகளை தன்னுள் அடக்கிய அன்புச் செல்வம். பதவிகளுக்கு ஆசைப்படாத; ஆனால் எதற்கும் தகுதியுள்ள செல்வம். கல்லூரி நாட்களிலேயே அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அந்த குடும்பத்தின் குட்டியப்பா! உழைக்கத் தயங்காத அந்தச் செல்வச் சிலந்தியின் ஆன்மா சாந்தியடையட்டும். அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. -வி.செ.குகநாதன்