25. கமல்ஹாசனிடம் சொல்லாதீங்க...!
குப்த பேரரசில் குமரகுப்தர் மந்திரி சபையில் இருந்த சுபந்து என்பவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய... பௌத்த கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் ஒரு காதல் இலக்கியம் தான் "வாசவதத்தா'.
மதுரா நகரத்தின் பேரழகி வாசவதத்தா. அவளின் அழகிற்கு மன்னர்களே அடிமை களாகக் கிடந்தார்கள். ஆனால் அவளோ பௌத்த பிரச்சாரகரான பிக்கு உபகுப்தரின் அழகில் மயங்கி இருந்தாள். லௌகீக இன்பம், துன்பம் தரக்கூடியது -என அவளுக்கு சரியான நேரத்தில் புரிய வைத்தார் உபகுப்தர்.
இந்த மையக் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, "அன்புத் தங்கை' படத்தில் ஒரு நாட்டிய -நாடகமாக இணைத்தேன். படத்தின் கதாநாயகன் முத்துராமன், கதாநாயகி ஜெயலலிதா. கதையின்படி "வாசவதத்தா'வாக ஜெயலலிதா நடிப்பார். புத்த பிக்கு உபகுப்தராக நடிக்க, சாந்தமான தோற்றம் கொண்ட நடிகர் தேவைப்பட்டார்.
அந்தச் சமயத்தில்... சிறுவனாகவும் இல்லாமல், முழு இளைஞனாகவும் இல்லாமல் வளர்ச்சிப் பருவத்தில் இருந்தவரும், எனது நண்பர் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராகவும் இருந்த கமல் என்னைப் பார்க்க அடிக்கடி வருவார்.
இந்த பாடல் காட்சியில் உபகுப்தராக கமல் நடித்தால்; அவரது எதிர்காலத்திற்கு மேலும் ஒரு படிக்கட்டாக அமையும் என எண்ணிய நான், ஜெயலலிதா அவர்களிடமும் சொன்னேன்... அவர் மறுக்கவில்லை.
அந்த பாடல் காட்சியில் உபகுப்தரின் மேல் காதல் ததும்பும் இளம் பெண் வாசவத்தையாக நடன நடிப்பில் ஜொலித் திருப்பார் ஜெயலலிதா.
வாசவதத்தைக்கு உலகியலின் சராசரி லௌகீக வாழ்க்கையின் துன்பத்தை காலம் கற்பிக்கட்டும் எனும்விதமாக....
"போகம் அழைக்கிறது...
புத்தனுக்கு வேலையில்லை!
மோகம் அழைக்கிறது....
முனிவனுக்கு வேலையில்லை!
காலம் அழைக்கட்டும்...
கண்திறந்து பார்க்கட்டும்
வருகின்றேன் பெண்மையே.... வருகின்றேன்'
எனச் சொல்லிவிட்டுப் போவார்.
வாசவதத்தை வயோதிகம் அடைந்து, உடலின் அழகொழிந்து, கேட்பாரற்று இருக்கையில்... மனத் துயர் அடைந்து நிற்பாள். அப்போது அங்கு வரும் உபகுப்தர்... "காதலை பொய் என்றேனே... கவனிக்கவில்லை நீயே' என எடுத்துச் சொல்லி, போகியர்களுக்கும், ஞானியர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துரைப்பார்.
இளமைத் துள்ளல் -வயோதிக அனுபவ பக்குவம் என இருவிதமாக வாசவதத்தையாக ஜெயலலிதா அசத்தியிருப்பார். கமலும் உபகுப்தராக உணர்ந்து, உள்வாங்கி நடித்திருப்பார். பாடலை அதிஅற்புதமாக எழுதியிருந்தார் கவியரசு கண்ணதாசன்.
அந்தப் பாடல் காட்சியை மட்டும் திரையில் போட்டுப் பார்த்தபோது, ஜெய லலிதாவை நாயகியாகவும், கமல்ஹாசனை நாயகனாகவும் ஜோடி சேர்த்து ஒரு படத்தை உருவாக்கினாலென்ன? -என்கிற யோசனை எனக்குள்.
இதை நான் கமலிடம் சொன்னபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவருக்கு ஒரு நியாயமான சந்தேகமும் இருந்தது.
"மிகவும் புகழுடன் திகழும் ஒரு கதாநாயக நடிகை என்கூட ஒரு முழு படத்திலும் கதாநாயகியா நடிப்பாரா?' என கேட்டார்.
"ஒரு நல்ல கதையைப் பிடிச்சு, அவர்கிட்ட சொல்லலாம். கதை பிடிச் சிருந்தா... உடனே சம்மதம் சொல்லுவார்' எனச் சொன்னேன் நான்.
அந்தச் சமயத்தில் இந்தியில் ரேகா, ரன்தீர்கபூர், சத்ருஹன் சின்ஹா நடிப்பில் "ராம்பூர் கா லஷ்மண்' என்கிற படம் வெளியாகி, வெள்ளிவிழா படமாக ஓடிக்கொண்டிருந்தது. "அந்தப் படமும், அதன் கதாநாயகி பாத்திரப் படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என ஒரு பேட்டியில் ஜெயலலிதா சொல்லியிருந்தார். நான் பம்பாய் சென்று, அந்தக் கதையை தமிழில் படமாக்கும் உரிமையை வாங்கிவந்தேன்.
"அன்புத் தங்கை' படத்தில் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு ஏவி.எம். எட் டாவது ஃபுளோரில் நடந்துகொண்டிருந்தது. அங்கே இருந்த ஜெயலலிதாவிடம் கமலை அழைத்துக்கொண்டு போய் நின்றேன்.
"என்ன குகநாதன்?''
"கதை ரெடி, இதோ... ஹீரோவும் ரெடி. நீங்க எப்ப தேதி தரப்போறீங்க?''
-இப்படி நான் கேட்டதும், எது பற்றியும் பேசாமல் நடிக்க சம்மதித்தார். கமலுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. பலமுறை எனக்கு நன்றி சொன்னார்.
மறுநாள்...
"அன்புத் தங்கை' ஜெயலலிதாவுக்கான ஷூட்டிங் இல்லை. மாலையில் தொலைபேசி மூலம் என்னை அழைத்தார். வீட்டுக்குப் போனேன். காஃபி தந்து உபசரித்தார்.
பொதுவாக ஜெயலலிதா, தான் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லிவிடுவார். ஆனால் அன்று வேறு வேறு விஷயங்களைப் பேசிவிட்டு என்னை அழைத்த காரணத்திற்கு வந்தார். "கமல் நல்ல திறமைசாலி.... ஆனா, பெரிய ஹீரோக்கள் எல்லார் கூடவும் நடிச்சிட்டிருக்க நான், கமல் கூட இணைஞ்சு முழுப் படமும் நடிச்சா சோபிக்காது. ஒருவேளை, படம் தோல்வி யடைஞ்சா, அதுக்கு முக்கியமான காரணமா இது அமையலாம். நீங்க நஷ்டப்படக் கூடாது; உங்களோட நன்மை கருதியே இதைச் சொல் றேன். இதை கமல்கிட்ட சொல்லி, அவரை மனவருத்தம் அடையச் செய்யவேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டார்.
நான் இன்றுவரை கமலிடம் இந்த விஷயத் தைச் சொன்னதில்லை. படத் தொடக்க வேலை யைத் தள்ளிப் போட்டேன். காரணம் தெரியாத கமல், என்மீது வருத்தப்பட்டார். ஆனால்... "ஜெயலலிதாவின் கணிப்பு சரி' என்பதை கமல் அரங்கேறிய "அரங்கேற்றம்' படத்தை திரையில் பார்த்தபோது புரிந்துகொண்டேன்.
என் யூனிட்டைச் சேர்ந்த டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் திடீரென என்னை விட்டு விலகிச் சென்றதுடன், எனது யூனிட்டில் இருந்த பெரும்பான்மையானவர்களையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார். நான் திகைத்துப் போய் நின்றபோது....
"அந்த யூனிட்டை உருவாக்கினதே நீங்கதானே! அப்படியிருக்கையில் நீங்களே ஒரு டைரக்டரா உருவாக முடியாதா? தடை ஏற்பட்டா தயங்கி நிக்கக்கூடாது... தாண்டிப் போகணும்' என எனக்கு ஊக்கமளித்தவர் ஜெயலலிதா.
நானும் வெற்றிகரமான இயக்குநரானேன்.
ஒருநாள்.... என் படத்தின் நாயகியின் தாயார் கலங்கிய கண்களோடு என் அலுவலகம் வந்தார்...
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
_________
சூப்பர் ஜோடி!
நான் சினிமாவுக்குள் நுழைந்த 16-17 வயதில் தமிழ் சினிமா என்றால் எம்.ஜி.ஆர்.தான். "முதலும் அவரே முடிவும் அவரே' என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் "வெண்ணிற ஆடை' படம் பார்த்த நான், ஜெயலலிதா நன்றாக நடித்திருக்கிறார் என எண்ணிக்கொண்டேனே தவிர... ஜெயலலிதாவுடன் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிய தில்லை. ஆனால் கதையம்சம் எப்படி அமைக்கப் பட்டிருக்கிறது? என்பதற்காக பல படங்களை பார்க்கையில் ஜெயலலிதாவின் படங்களைப் பார்ப்பதுண்டு. புரசைவாக்கம் மேகலா தியேட் டரில் "ஆயிரத்தில் ஒருவன்' படத்தை முதல் நாள் -முதல் காட்சி பார்த்தேன். பெரும் பூரிப்பு அடைந்தேன். ஏனென்றால்... நான் சகலமுமாக நம்பியிருக்கும் அண்ணன் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தாலும், அது வண்ணப்படமாக இருந்ததாலும், அந்த ஜோடி ரசிகர்களிடம் அதிக வசீகரத்தை எளிதில் பெற்றது. எம்.ஜி.ஆரின் வேகம், அழகு இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்கும் ஒரு நாயகி அமைந்திருப்பதாக என் உள்மனம் புளகாங்கிதம் அடைந்தது.