ck

(19) தடைக்கு மேல் தடை!

டைரக்டர் சாணக்யா, ஜே.ஆர்.மூவிஸ் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் "புதிய பூமி' கதையைச் சொன்னேன். எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வத்துடன் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முக்கால்வாசி கதையை சொல்லியிருந்த நிலையில்... எம்.ஜி.ஆரின் உதவியாளர் உள்ளே வந்து, "நடிகர் நாகேஷ் சார் உங்களை அவசரமா பார்க்கணும்னு சொல்றார்'' என்றதும், "வரச்சொல்'' என எம்.ஜி.ஆர். சொன்னார்.

சடாரென உள்ளே நுழைந்த நாகேஷ் படாரென எம்.ஜி.ஆரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். பதறிப்போன எம்.ஜி.ஆர்., நாகேஷை தூக்கி தன் அருகில் உட்கார வைத்துவிட்டு, எங்களைப் பார்த்து "மிச்ச கதையை நாளைக்குக் கேட்கிறேன்'' எனச் சொல்லி அனுப்பினார். என் கதை குறித்த எம்.ஜி.ஆரின் கருத்து என்ன என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியாத வருத்தம் எனக்கு.

Advertisment

நாகேஷ் ஏன் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார்?

எம்.ஜி.ஆரை நாகேஷ் சந்திப்பதற்கு ஒருவாரம் முன்பிருந்தே நாகேஷ் வீட்டில் நடந்த அவரது மைத்துனர் மரணம் பற்றிய பரபரப்புச் செய்திகள்தான் காரணம். அது தற்கொலை, தூக்கு மாட்டிக்கொண்டார்... என்றெல்லாம் பத்திரிகை களில் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. அது சம்பந்தமாகத்தான் எம்.ஜி.ஆரை சந்திக்க வந்திருக்கிறார் நாகேஷ்.

கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம்? என்கிற பேச்சு எழுந்தது. நான் ஜெயலலிதாவை மன தில் நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட எல்லோரும் அப்படி நினைத்திருந்தார்களோ என்னவோ?

Advertisment

எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார்... நான் ஜெயலலிதா பேரைச் சொன்னேன்.

"சரி போய் கதை சொல்லிட்டு வாங்க'' என்றார் எம்.ஜி.ஆர்.

அப்போது சென்னை தி.நகர், சிவஞானம் தெரு வீட்டில் வசித்துவந்தார் ஜெயலலிதா. அவரும் நானும் ஒன்றாக நடிப்புப் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள். (காண்க: பாக்ஸ் மேட்டர்)

"கதையை சொல்லுங்க குகன்'' என்றார் ஜெயலலிதா.

அவர் என்னை "குகன்' என்று கூப்பிடுவார்... அவரை நான் "அம்மு' என்று கூப்பிடுவேன்.

கதையைச் சொன்னேன்.

"இன்னும் கொஞ்சம் ஹீரோயின் கேரக்டர டெப்த்தா குடுக்கலாமே?'' என்றார்

"ரெண்டு நாள் டைம் கொடுங்க, ஹீரோயின் கேரக்டரை வித்தியாசமா மாத்திர்றேன்'' என்றேன்.

"எம்.ஜி.ஆர். ஒத்துக்கமாட்டாரே?''

"நான் கேரக்டரை டெவலப்பண்ணிட்டு சார்ட்ட சொல்லிர்றேன்'' எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

டைரக்டர் சாணக்யா, ஜே.ஆர். மூவிஸ் அலுவலகம் வந்தார். தயாரிப்பாளர்களிடமும், என்னிடமும் "எம்.ஜி.ஆர். சார் கால்ஷீட் கொடுத்துட்டார் படத்துக்கு. ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கச் சொல்லிட்டார்'' எனச் சொன்னார். நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

ck

எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஸ்டுயோவுக் குச் சென்றேன். அங்கே எம்.ஜி.ஆர். -ஜெயலலிதாவின் டூயட் பாடலான "சின்னவளை முகம் சிவந்தவளை...' பாடல் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அவர் பார்வையில் படும்படியான இடத்தில் நின்றுகொண்டேன்.

சிறிது நேரம் கழித்து என்னைக் கவ னித்துவிட்டு "என்ன...?'' என ஜாடையாகக் கேட்டார்.

"ஹீரோயின் கேரக்டர கொஞ்சம் சேஞ்ச் பண்ணணும்...'' என்றேன்.

"ம்... நீ அம்முகூட படிச்சேல்ல..'' எனச் சொல்லிச் சிரித்தார்.

அந்தச் சிரிப்பில் அவர் அந்த மாற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இதற்கிடையே வசனம் எழுதுவதற்காக தி.மு.க. பிரமுகர் எஸ்.எஸ்.தென்னரசு அவர்களை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார். நானும் தென்னரசு வும் மகாபலிபுரம் "டெம்பிள் பே' ஹோட்டலில் பத்து நாட்கள் தங்கியிருந்து வசனத்தை எழுதி முடித்தோம். முதல்நாள் படப்பிடிப்பின்போது என்னையும், தென்னரசுவையும் தன்னுடன் சாப்பிட வைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார் எம்.ஜி.ஆர்.

நான்கு நாள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பின் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்த வேறு படங்களின் படப்பிடிப்புகளுக்கு சென்றுவிட்டார்.

"புதிய பூமி'யின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு கொஞ்சநாட்கள் முன்பு எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். நான் இடிந்துபோனேன்.

நான் எம்.ஜி.ஆருக்கு "புதிய பூமி' கதையைச் சொல்லப் போனபோது எதிர்பாராதவிதமாக நாகேஷ் பிரச்சினை வந்து தடங்கல் உண்டானது. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் எம்.ஜி.ஆர். துப்பாக்கி யால் சுடப்பட்ட பேரிடி! படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணுவதாகச் சொன்னவர்கள், "இனி சினிமாவில் எம்.ஜி.ஆரின் நிலைமை எப்படியோ?' என ஃபை னான்ஸ் தராமல் பின்வாங்கினார்கள். மொத்தத்தில் ஜே.ஆர்.மூவிஸ் கம்பெனி களையிழந்து போனது.

இந்த காலகட்டத்தில் நான் திரைக் கதையை மேலும் மெருகூட்டி திறம் படுத்தும் பணியில் ஈடுபட்டேன். கவிஞர் பூவை.செங்குட்டுவனும் நானும் நெருங்கிய நண்பர்களா னோம். என் திரைக்கதையில் செய்த மாற்றங்களை அவரிடம் அவ் வப்போது சொல்வேன். வில்லனும், ஹீரோவும் சவால்விட்டு மோதும் ஒரு காட்சியை உருவாக்கினேன். அதன் முடிவில்... இதுவரை எம்.ஜி.ஆர். படங் களில் வராத அளவு பிரபலமாகக் கூடிய ஒரு பாடலை வைக்கவேண்டும் என்கிற விருப்பத்தை பூவை .செங்குட்டுவனிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். அந்தப் பாடலை எழுதுவதற்கான மும்முரத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்.

எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சைக்குப் பின் "காவல் காரன்' படத்தின் மிச்ச காட்சிகளை எடுத்து முடித்து வெளியிட்டது சத்யா மூவிஸ். சென்னை குளோப் தியேட்டரில் (பின்னாளில் அலங்கார் என அந்த தியேட்டரின் பெயர் மாற்றப்பட்டது) "காவல்காரன்' வெளி யாகியிருந்தது. நான் அங்கு அந்தப் படத்தைப் பார்த்தேன்.

"பார்த்தேன்... சுசீலா பார்த்தேன்... அந்தப் பரிதாபத்தைப் பார்த்தேன்' என எம்.ஜி.ஆர். வசனம் பேசும்போது துப்பாக்கியால் சுடப்பட்டதால் அவரின் உடைந்திருந்த குரலைக் கேட்டு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

"காவல்காரன்' படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. "புதிய பூமி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. நான் என்னோடு நட்புடன் பழகிய கனகசபை செட்டியார், தேவராஜ், குணசேகரன் ஆகியோரை "புதிய பூமி' படத்தின் ஃபைனான்ஸியர்களாவும், விநியோகஸ்தர்களாகவும் அழைத்து வந்தேன். அதனால் பணத்தட்டுப்பாடு இன்றி படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. புதிதாக சேர்க்கப்பட்ட காட்சிகளை, நான் எம்.ஜி.ஆரிடம் சொல்ல, எம்.ஜி.ஆர். என்னை மனம்விட்டுப் பாராட்டினார்.

நாங்கள் உருவாக்கியிருந்த பாட்டைக் கேட்டு வியந்துபோன எம்.ஜி.ஆர்....

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

________

ஜெ.வும், சோவும், நானும் ஒண்ணா படிச்சவங்க!

cc

நாடக உலகில் என்னுடைய வளர்ச்சியையும், நல்ல பெயரையும் தொடர்ந்து கவனித்துவந்த என் அண்ணன் ராஜசிங்கம், "என்கூட வாங்க தம்பி'' என ராயப்பேட்டைக்கு அழைத்துச் சென்றார். அது நாடக -திரைப்பட நடிகர்களான "டி.கே.எஸ். பிரதர்ஸ்'-ல் டி.ú.க.சண்முகம் அவர்களின் வீடு. சண்முகம் அண்ணாச்சியிடம் எனது நாடகங்களைப் பற்றியெல்லாம் சொல்லி, "உங்களோட டி.கே.எஸ். நாடகக் குழுவுல என் தம்பியையும் சேர்த்துக்கங்க'' எனக் கேட்டுக்கொண்டார். எனது நடிப்பு ஆர்வத்திற்கு அண்ணன் இப்படி சப்போர்ட் பண்ணுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஏற, இறங்க பார்த்த சண்முகம் அண்ணாச்சி... "என் தலைமையில "யுனெஸ்கோ' ஆதரவுடன் திருமதி. ஒய்.ஜி .பார்த்தசாரதி அவர்கள் மாலை நேர நாடகப்பள்ளி நடத்துகிறார். நுங்கம்பாக்கத்துல இருக்கிற பத்ம சேஷாத்ரி ஸ்கூல் கேம்பஸ்லதான் இந்த டிராமா ஸ்கூல் இருக்கு. ஒரு வருஷம் உங்க தம்பி அங்க நடிப்பு பயிற்சி பெறட்டும். அதன்பின்னாடி எங்க நாடகக் குழுவுல சேரட்டும்'' எனச் சொல்லி அந்த டிராமா ஸ்கூலில் சேர்த்துவிட்டார். டி.கே.சண்முகம், டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் படித்த அரசு மற்றும் உஷா, ஒரு ஆங்கில நாடக நடிப்புப் பயிற்சியாளர் ஆகியோர் அந்த ஸ்கூலில் நடிப்புப் பயிற்சி, குரல் பயிற்சி, உடல்மொழி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தனர். அது மிக நல்ல பயனுள்ள பயிற்சி. அந்த டிராமா ஸ்கூலில் சோ, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, கமலி, நமச்சிவாயம், நான் உட்பட... 15 பேர்கள் படித்தோம். அங்கேதான் ஒய்.ஜி.மகேந்திரன் எனக்குப் பரிச்சயமானார். அப்போது அவர் பள்ளி மாணவர். இந்தப் பயிற்சிக் காலத்தில் இரண்டு நாடகங்கள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இரண்டிலுமே முக்கிய கதாபாத்திரத்தில் நானே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்குப் பயிற்சி அளித்த அரசு மற்றும் உஷா ஆகியோரிடம் கமலும், ரஜினியும் கூட பயிற்சி பெற்றிருக் கிறார்கள்.