(18) கதையின் கதை!
முதலில் நான் கொடுத்த கதையை "இது ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கு! வேற கதை ரெடிபண்ணுங்க'' எனச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
அடுத்ததாக நானும், டி.என்.பாலுவும் உருவாக்கிய கதையை ("நான்' படம்) "படத்தில் மக்களுக்கான மெஸேஜ் இல்லை' என்பதால் நிராகரித்தார்.
அதனால்... "மக்கள் திலகத்தின் மனசைக் கவர்கிற ஒரு கதையை எழுதியே ஆகவேண்டும்' என ஒரு தீவிரத்தில் இயங்கினேன். டைரக்டர் சாணக்யாவிடம் ஒரு ஹிந்திப் படத்தின் பாதிப்பில் உருவான கருவைச் சொன்னேன்.
"நல்லாருக்கு. ஆனா டாகுமெண்ட்ரி ஃபிலிமுக்கான கதை மாதிரி இருக்கு. இந்தக் கதைக் கருவை வச்சே பக்காவான கமர்சியல் கதையா உருவாக்க முடியுமான்னு பாரு'' என்றார்.
அந்தக் கதைக் கருவை முழு கதையாக்கினேன். திருப்தியாக இருந்தது. ஆனால், திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்துவது கடும் சவாலாகவே இருந்தது. நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ... உண்மை என்னன்னா, அந்த ஒரு கதைக்கு 30 விதமா திரைக்கதை எழுதினேன். ஆனாலும் எனக்கு திருப்தி வரவில்லை. ஒரு படைப்பு என்பது முதலில் அதை படைத்தவனை திருப்திபடுத்தவேண்டும். அப்படியான படைப்புதான் மற்றவர்களை திருப்திபடுத்தும்.
சுமார் ஐந்தாறு மாதங்கள் அந்தக் கதையோடு போராடினேன். ஜே.ஆர்.முவீஸ் மாடியில் இருந்த பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறைக்குள் உட்கார்ந்து சதா சிந்தித்துக்கொண்டிருந்தேன். சதா சிந்தித்துக்கொண்டிருந்த எனக்கு, சாதா ஸீன்களே மனசில் தோன்றிக்கொண்டிருந்தது.
மருத்துவ வசதியே இல்லாத ஒரு மலைக்கிராமத்துக்கு வரும் ஒரு டாக்டர் பற்றிய கதை. கதையின் அம்சம் சிறப்பானது என்றாலும், கதைப்போக்கு வறட்சியாக இருந்தது. அதனால் சிந்திக்கும் முறையை மாற்றினேன்.
அந்த மலைக் கிராமத்துக்கு டாக்டர் எப்படிச் செல்கிறார்?
இப்படி ஒரு கேள்வியை எனக் குள் எழுப்பினேன். இந்தக் கேள்விக்கு விடை தேடியதில் 6 மாதங்களுக்குப் பின் பதில் கிடைத்தது.
டாக்டர் கதிரவன், நகர்ப்புற மருத்துவமனையில் தன் பணியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். அப்போது சிலரால் கடத்தப்பட்டு மலைக்கிராமத்துக்கு கொண்டுவரப்படுகிறார். அங்கே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்குப் போராடும் தங்கள் கூட்டத்தின் தலைவன் காங்கேயனுக்கு சிகிச்சையளிப்பதற்காக டாக்டர் கடத்திவரப்பட்டிருக்கிறார். முதலில் டாக்டர் தனக்குரிய கடமையின்படி காங்கேயனின் உயிரைக் காப்பாற்றுகிறார். அதன்பிறகு, காங்கேயன் போலீஸால் தேடப்படுபவன் என்பதை அறிந்துகொண்டு போலீஸிடம் சரணடையும்படி அவனைக் கேட்டுக் கொள்கிறார் டாக்டர். அவன் மறுக்கிறான். அதுமட்டுமின்றி "டாக்டர் நம்மை காட்டிக் கொடுத்துவிடுவான்' என அவனும், அவனது கூட்டாளிகளும் டாக்டரைக் கொல்வதற்காக அவருடன் சண்டையிட, அங்கிருந்து சாதுர்யமாகத் தப்புகிறார் டாக்டர்.
இந்த முதல் காட்சி கிடைத்ததுமே மனதுக்குள் அடுத்தடுத்த காட்சிகள், பாத்திர அமைப்புகள் தோன்றின.
டாக்டர் கதிரவனின் (எம்.ஜி.ஆர்.) அப்பா (திருச்சி சௌந்தர்ராஜன்) பெரிய போலீஸ் அதிகாரி. காங்கேயனை (நம்பியார்) பிடித்தாக வேண்டும் என்றிருப்பவர். டாக்டரின் முறைப்பெண்ணும் (ஷீலா) டாக்டர். அத்துடன் மிக அழகானவள். டாக்டரை விரும்பும் வெள்ளந்தியான மலைவாசிப் பெண் (ஜெயலலிதா)... என கதாபாத்திரங்களுக் கிடையே தொடர்பு உண்டாக்கி... முழு திரைக் கதையையும் எழுதி முடித்தேன்.
டைரக்டர் சாணக்யா ஜே.ஆர்.மூவிஸ் முதலாளிகள் அனைவருக்கும் கதை மிகவும் பிடித்துப்போனது.
இப்படி "பழைய' சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் உருவானது... "புதிய பூமி!'
முழுமையாக திரைக்கதை தயாரானதும்... கதையைச் சொல்வதற்கு எம்.ஜி.ஆரிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்கப்பட்டது. அவரும் தனது ராமாவரம் தோட்ட வீட்டுக்கு வரச்சொன்னார். அங்கே போனோம்.
கதையை விரிவாகச் சொல்லிக்கொண்டே வந்தேன்.
கிட்டத்தட்ட 90 சதவிகித கதையை திரைக்கதை வடிவில் நான் எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருந்த நிலையில்...
திடீரென நடிகர் நாகேஷ் அங்கே வந்தார். நாங்கள் யாருமே எதிர்பார்த்திராதபடி எம்.ஜி.ஆரின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார் நாகேஷ்.
நாங்கள் பதறிப்போனோம்.
நாகேஷை தழுவித் தூக்கி தன் அருகில் அமர வைத்தார் எம்.ஜி.ஆர்.
"மிச்சக் கதையை நான் நாளைக்கு கேக்கிறேன்'' எனச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.
நாகேஷ் ஏன் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார்?
இந்தக் கேள்வியைத் தாண்டி... "என்னுடைய கதை பற்றி எம்.ஜி.ஆர் என்ன அபிப்பிராயப்பட்டார் என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியாமல் போனதே' என்கிற கவலை என்னை அரித்தது.
எம்.ஜி.ஆரின் காலில் நாகேஷ் ஏன் விழுந்தார்?
"புதிய பூமி' என்னாச்சு...?
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
__________
துரைமுருகனின் அரங்கேற்றம் ஆகாத ஒத்திகை!
சீன யுத்தம் நடந்தபோது...
மேடைகளில் ஒலித்த என் "போர்ப்பறை...' இந்திய தேசமே அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து மண்ணுக்காக... மானம் காக்க போராடிய வேளை. அண்ணா, "அன்னை பூமியை காப்போம்' என குரல் கொடுத்தார். எம்.ஜி.ஆர்., நேரு அவர்களை சந்தித்து பெரும் நிதி வழங்கினார். கண்ணதாசன் "ரத்தத் திலகம்' என்ற உணர்ச்சிமிக்க படத்தை சிவாஜி -சாவித்ரியை வைத்து எடுத்தார். நான் என் பங்குக்கு "போர்ப்பறை' என்ற நாடகத்தை எழுதினேன். உணர்ச்சிபொங்கும் வசனங்களை எழுதினேன். பலருக்கு படித்துக்காட்டினேன், பாராட்டினார்கள். வசனங்களை உணர்ச்சிபொங்க பேச ஒரு நடிகர் வேண்டும். அப்போது எனக்கு கல்லூரியில் அனல் பறக்க மேடைகளில் பேசும் துரை முருகன் நினைவுக்கு வந்தார். அவர் அழகாகவும் இருப்பார். நடிக்கவேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு இருந்ததை நானறிவேன். அவரையே அணுகி, நடிக்க வரவழைத்தேன். சில நாட்கள் ஒத்திகைக்கு வந்தார். ஆர்வத்தோடு நடித்தார்.
ஆனால் மேடைப்பேச்சு போல் வசனங்களை பேசியது... எடுபடாது. அதன்பின் வேறு வேலைகள் இருந்ததால் அவரால் ஒத்தி கைக்கு வரமுடிய வில்லை. வேறு வழியின்றி நானே நடிக்கும் நிலை ஏற்பட்டது. தர்மபிரகாஷ் மண்டபத்தில் அரங்கேற் றம். பல பிரபலங்கள் நாட கம் காண வந்திருந்தார் கள். அனைவருமே நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து பாராட்டினார்கள். அன்று எனக்கொரு புதிய நண்பர் கிடைத்தார். அவர்தான் பாலமுருகன். சிவாஜி நாடக மன்றத்துக்காக "நீதியின் நிழல்' என்ற நாடகத்தை எழுதியவர். பெரியண்ணன் அவர்களின் சாந்தி பிலிம்ஸ் கம்பெனிக்கு, "அன்புக் கரங்கள்' என்ற படத்தை எழுதிக்கொண்டிருந்தார். இன்னு மோர் நண்பரும் அந்த நாடகம் மூலம் கிடைத்தார். அவர் என்னிடம் மறுநாள் வந்து, "இந்த நாடகத்தை எங்கள் கல்லூரி சார்பாக அனைத்துக் கல்லூரிகள் நடத்தும் நாடகப் போட்டியில் நடத்த தர முடியுமா?' என்று கேட்டார். "என்னால் வரமுடியாது... ஆனால் நாடகத்தை தருகிறேன்' என்று சொல்லிக் கொடுத்தேன்.
"எவ்வளவு பணம் வேண்டும்?' என்று கேட்டார்கள். "இதுக்கு விலை கிடையாது. தாங்கள் வெற்றி கரமாக நடத்துங்கள், அதுபோதும்' என்றேன். "அந்த நாடகம் அவர்களுக்கு ஏழு பரிசுகளை பெற்றுத் தந்ததாக'ச் சொல்லி மகிழ்ந்தார்கள். இன்றுவரை எனது நண்பராக இருக்கும் அவர், முன்னாள் அமைச்சரான ராஜாராம் அவர்கள் இளவலான காந்தராஜ்தான் அவர். தற்போது ஓய்வுபெற்ற மருத்துவராக இருக்கிறார். அவர் படித்து, இந்தப் பரிசுகளைப் பெற்றபோது, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்தார்.