கிட்டப்பா கலையரங்கம் உட்பட சில நாடக மன்றங்களில் நாடக ஹீரோவாக நடித்துவந்த நான், "குகஜி' நாடக மன்றம்’ என்ற சொந்த நாடகக் குழுவை ஆரம்பித்தேன்.
"பகற்கனவு'’ என்கிற நாடகத்தை எழும்பூர் மியூஸியம் தியேட்டரில் அரங்கேற்றம் செய்தேன். ஜெமினி கணேசன், சாவித்திரி, ராஜ சுலோசனா, இயக்குநர் பீம்சிங், "பாசமலர்'’ படத் தயாரிப்பாளர் மோகன், வக்கீலும் -காங்கிரஸ் பிரமுகருமான மணிவர்மா, இணை இயக்குநர் பட்டு ஆகியோர் முன்னிலையில் அரங்கேற்றம் பண்ணி னேன். சிவாஜி நாடக மன்ற நடிகை இந்திராதேவி நாயகியாக நடித்தார். இந்த நாடகம் வெற்றிகரமாக சென்னையிலும், வெளி யூர்களிலும் நடந்துகொண்டிருக்கும்போதே, அடுத்த நாடகமாக ‘"அணையா ஜோதி'’ நாடகத்தை அரங்கேற்றம் செய்தேன்.
நான் அழைக்காமலேயே ‘"அணையா ஜோதி'’ நாடகத்தைப் பார்க்க வந்திருந்த ஒரு பிரபலம், நாடகம் முடிந்ததும் என்னுடைய ஒப்பனை அறைக்கு வந்து, என் கதையையும், நடிப்பையும் பாராட்டியதுடன்… என்னை தனது உதவியாளராக வேலை செய்ய அழைப்புவிடுத்தார். அந்தப் பிரபலம்... ‘"பாலும் பழமும்', "ஆலயமணி', "பணமா பாசமா',’ "தீர்க்கசுமங்கலி'’ போன்ற பல பிரபல வெற்றிப் படங்களின் கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியம் அவர்கள். நான் அவரிடம் உதவி கதாசிரியனாகச் சேர்ந்தேன்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த "தாழம்பூ', "கலங்கரை விளக்கம்'’ ஆகிய படங்களில் ஜி.பாலசுப்பிரமணியத்துடன் பணிபுரிந்தேன்.
எம்.ஜி.ஆர்., இலங்கை சென்றுவிட்டு திரும்பிய அன்று, அவரை விமானநிலையத்தில் சென்று வரவேற்பதற்காக எனது திரைக்கதை கலை குருநாதர் பாலசுப்பிரமணியத்துடன் நானும் ஒரு பெரிய மாலையை வாங்கிக்கொண்டு சென்றோம். ஆனால் விமானநிலையத்திற்கு வெளியேவரை கடுமையான கூட்டம்.
"சார்… நாம இங்க அவரைப் பார்த்து மாலை போடுறது சாத்தியமில்ல. வாங்க நாம ராமாவரம் வீட்டுக்கு போய் காத்து நிற்போம். அங்க அவர் வரும்போது கண்டிப்பா பார்த்திடலாம்'' என நான் சொன்னேன்.
அதுவும் நல்ல யோசனைதான் என எண்ணினார்.
இருவரும் மாலையுடன் ராமாவரம் சென்றோம். அங்கும் நிறையபேர்கள் காத்திருந்தார்கள். ஆனாலும் நாங்களும் காத்திருந் தோம். எம்.ஜி.ஆர்., வந்ததும் எங்களை கவனித்துவிட்டார். அப்போது நான் எம்.ஜி.ஆரை தூரத்திலிருந்து தரிசிப்பவனாகத் தான் இருந்தேன்.
"பாலு… இங்க வாங்க''…என அழைத்த எம்.ஜி.ஆர்., “"ஒரு ஸ்கிரிப்ட் உடனே ரெடி பண்ணுங்க''’எனச் சொன்னார்.
மறுநாள்…ஸ்டுடியோவில் தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.சின்னப்ப தேவரிடம் “"நாளைக்கு பாலு ஒரு கதை சொல்லுவார்''’எனச் சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக கதையை ரெடி செய்யவேண்டுமே?…
அப்போது சென்னையில் THE PITILESS THREE’எனும் ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் படத்தின் கதையின் பாதிப்பில் ‘"மூன்றெழுத்தில் என் மூச்சிருக் கும்'’என்ற தலைப்பில் ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதி, பால சுப்பிரமணியத்திடம் கொடுத்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதில் சிற்சில மாறுதல்களைச் செய்து, தேவரிடம் கதையைச் சொன்னார் பாலசுப்ர மணியம்.
"நானும் அந்த இங்கிலீஷ் படத்தைப் பார்த்தேன். அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கிட்டு, நல்லாத்தான் கதை பண்ணீருக் கீங்க'' எனச் சொன்னார் தேவர். எம்.ஜி.ஆரிடமும், "கதை நல்லா இருக்கு முருகா'' எனச் சொல்லிவிட்டார்.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என நான் வைத் திருந்த டைட்டிலை "முகராசி' என மாற்றினார் தேவர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக மிக முக்கியமான கேரக்டரில் ஜெமினிகணேசன் நடித்தார்.
அதிகாரப்பூர்வம் இல் லாத... அதேசமயம் எம்.ஜி. ஆருக்காக நான் எழுதிய கதை "முகராசி' கதை. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடித்தனர். அதிகாரப்பூர்வமாக என் பெயர் போட்டு வந்த, எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய கதை "புதிய பூமி.' இதிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி ஜெயலலிதாதான்.
என் குருநாதர் ஜி.பால சுப்பிரமணியத்திடம்தான் நான் திரைக்கதை எழுதும் நுட்பங்களைக் கற்றுக்கொண் டேன். மிக நுணுக்கமாக எனக்கு கற்றுக்கொடுத்தார். அந்த நன்றியை நான் மறக்க வில்லை. பிற்காலத்தில் நான் தயாரிப்பாளர் ஆனதும், எனது நிறுவனப் படங்களில் திரைக் கதை அமைப்பதற்கு அவரை பணியில் அமர்த்தி, மாதச் சம்பளம் கொடுத்துவந்தேன். அது எனக்கு பெரும் மனநிறைவைத் தந்தது.
நானும் டி.என்.பாலுவும் (கதா சிரியர் -இயக்குநர்) நல்ல நண்பர்கள். ஒருநாள் என்னை "ஜே.ஆர்.மூவிஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார்.
"எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போகிறார்கள். அதுக்கு ஒரு நல்ல கதையை எதிர்பார்க்கிறாங்க. உன்கிட்ட கதை இருந்தா சொல்லு'' என விபரம் சொன்னார் டி.என்.பாலு.
நான் ஏற்கனவே ஜே.ஆர்.மூவிஸ் உரிமையாளர்கள் பற்றியும், அந்த அலுவலகத்திற்கு அன்றைய தி.மு.க. பிரமுகர்கள் பலரும் வருவார்கள் என்பதையும் சொல்லியுள்ளேன்.
தயாரிப்பாளர்களிடம் விரைவில் கதை தயார் செய்து தருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அப்போது பி.காம் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி மாணவர் தலைவராக இருந்தேன். கல்லூரி விழாவிற்கு எம்.ஜி.ஆரை அழைத்திருந்தோம். நான் வரவேற்புரை நிகழ்த்தினேன்.
"நடிக்கவே தெரியாத ஒருவரை சிறப்பு விருந் தினராக அழைத்து வந்து விழா நடத்திக்கொண்டி ருக்கிறோம்...'' என நான் சொன்னதும், எம்.ஜி.ஆர். ஒரு குழப்பத்தோடு என்னைப் பார்த்தார்.
"குகன்... எம்.ஜி.ஆரோட வெறித்தனமான ரசிகராச்சே... ஏன் இப்படிப் பேசுறான்?' என்றெல் லாம் மாணவர்களிடையே சலசலப்பு. நான் தொடர்ந்து, "வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர் எம்.ஜி.ஆர்.'' என்றதும்... ஒரே கரகோஷம்!
எம்.ஜி.ஆர். என்னிடம் விசாரிக்க... "புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவுல அண்ணன் வீட்ல இருக்கேன்; பி.காம். படிக்கிறேன்'' என்றேன்.
மறுநாள்... எங்கள் தெருவே பரபரத்துப் போனது; மக்கள் கூட்டம் நிரம்பியது. எம்.ஜி.ஆரின் கார் எங்கள் தெருவுக்கு வந்தது. அவரின் காரை அடையாளம் கண்டுகொண்டவர்கள் திரண்டுவிட் டார்கள். எங்கள் வீட்டை விசாரித்துக்கொண்டு... கார் எங்கள் வாசலில் வந்து நின்றது.
"எம்.ஜி.ஆர். சார் உங்களை கூட்டிவரச் சொன்னார்'' என்றார் டிரைவர்.
நான் மகிழ்ச்சியில் திகைத்துப் போனேன்...
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்
______________
முத்துவேலர் ஸ்டேஜ்!
நான் திரையுலகில் பிரபலமானதும், என் நாடக மன்றத்தின் பெயரை "முத்துவேலர் ஸ்டேஜ்' என மாற்றினேன். என் துரோணர் கலைஞர் அவர்களின் தந்தையார் பெயரே முத்துவேலர். சுருளிராஜன், பிரமிளா, ஸ்ரீப்ரியா அக்கா மீனாட்சி ஆகியோர் நடிக்க "காசி யாத்திரை' என்ற நாடகத்தை பல நூறு தடவை தமிழகம் முழுவதும் நடத்தினோம். தொடர்ந்து "வாடகை வீடு', "கல்யாணராமன்', "எங்கள் தமிழினம் தூங்குவதோ' போன்ற பல வெற்றிகரமான நாடகங்களை நடத்தினோம். அவை திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. என் நாடகங்களில் நடித்த என் நண்பர்கள் பலர் படங்களிலும் நடித்தனர். அந்த நண்பர்களையெல்லாம் இன்றும் எண்ணியெண்ணி மகிழ்வதுண்டு. அது சினிமா நட்பல்ல... அவர்கள் ஆத்ம நண்பர்கள். அந்த மகிழ்ச்சியான நாட்கள் மீண்டும் வருமா என நான் அடிக்கடி ஏங்குவதுண்டு.