(13) இதோ... ஈழம்! UNFOLDING
சின்னத்திரை, வெள்ளித் திரை, டிஜிட்டல் திரை, நாடகம்... என பல பரிமாணங்கள். இவற்றையே மூச்சாகவும், உயிர்த் துடிப்பாகவும் கொண்டு வாழ்ந்த நான், வீட்டில் என் மனைவியிம் வாங்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அளவே கிடையாது. காரணம், சுடுதண்ணீர் வைச்சுக் குடுக்கக் கூட எனக்குத் தெரியாது. எழுதுவது, படிப்பது, படம் பார்ப்பது, படம் எடுப்பது, படம் இயக்குவது... இவைதான் என் வாழ்க்கை, என் பொழுதுபோக்கு எல்லாமே! இடையில் இணைத்தது மொழிப்பற்று, ஈழ ஆதரவு. மனிதச் சங்கிலி, வீரவணக்க ஊர்வலம், எழுச்சிப் பயணம், இன எழுச்சி மாநாடுகள் என என் செலவில் எமது தமிழர் அய்க்கிய முன்னேற்றக் கழகம் சார்பில் பல நிகழ்வுகள்.
"எங்கள் தமிழினம் தூங்குவதோ'' ஜெய்கணேஷ், "படாபட்' ஜெயலட்சுமி, சார்லி, வாசுவிக்ரம் இப்படி பல பிரபலங்கள் நடித்த நாடகத்தை தமிழ்நாடு பூராவும் நடத்தி நல்ல பெயர் வாங்கினேன். அனைத்து அரசியல் தலைவர்களும் அரவணைத்து ஆதரவு தந்தார்கள். ஈழப் போராளிகளுக்கு எண்ணிக்கை தெரியாத அளவு பிரபல இசையமைப்பாளர்களை வைத்து பல உணர்ச்சி பொங்கும் பாடல்களை பதிவு செய்து கொடுத் தேன். அந்த காலகட்டத்தில் மலரப் போகும் ஈழம் பற்றி ஒரு ஆவணப் படம் எடுக்க எண்ணி "இதோ ஈழம்'' என பெயரிட்டு ஆரம்பித்தேன்... அதற் குள் நெஞ்சம் பதறும் கோர நிகழ்வு கள்... வரலாற்றை திருப்பிப் போட்ட மனிதநேயமற்ற இன அழிப்பு. அந்த சுவடுகளில் நடந்த பல உண்மை நிகழ்வுகள், ஈவு இரக்கமற்ற செயல்கள், நாளைய நகர்வு பற்றிய சிந்தனைகள் அனைத்தையும் உள்ளடக்கி ஈழத் தமிழர்களின் உணர்ச்சிக் காவியமாக அந்த மக்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும், கலாச்சார கலை, மொழி, சமயம் பற்றிய ஈடுபாடுகளை யும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படும் திரைக்காவிய மாக உருவாகத் தொடங்கியுள்ளது என் "இதோ ஈழம்... UNFOLDING'.
இதில் பல பிரபலங் களை, வெவ்வேறு மொழி நடிக, நடிகையரையும் அணுகியுள்ளேன். உலக மக்கள் அனைவரும் இதைப் பார்க்க வேண்டும்... ஈழத் தமிழர்களின் நேற்றைய, இன்றைய, நாளைய தேவை களை அரசியல் விடியல் களை, வேண்டிய சுதந் திரத்தை, எவ்வழியில் பெற வேண்டும் என்பதையெல் லாம் என் கதாபாத்திரங்கள் பேசுவார்கள். நீதி கேட்பார்கள். இது மெகா ஹிட் பாகுபலி அல்ல, பொன்னியின் செல்வனும் அல்ல. நடந்த வரலாறு... நடமாடிய கதாபாத்திரங்கள்... சரித்திரம் படைத்த வீரதீரமிக்க களப்போராட்டங்கள்... நாளைய ஈழ விடியலுக்கான அரசியல் தீர்வு. சம்பந்தப்பட்ட வல்லுனர்களின் வழிகாட்டுதலோடு.... மலருகிறது "இதோ ஈழம்''. இதற்கான முதலீடு செய்ய விரும்புவோரை இணைத்தே உருவாகும்.
பிரபல இசையமைப்பாளர்கள்... இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து பல குறும்படங்களை தயாரித்து இயக்கிய இயக்குநர், படத் தொகுப்பாளர்... ஒளிப் பாதிவாளர் என ஒரு இளைஞர் கூட்டம் உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. Investors are invited... மூன்று Promoக்கள் வெளிவரும்.. அவற்றைப் பார்த்த பின்னால் முடிவெடுங்கள்.
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
________
என்னை இருட்டடிப்பு செய்தவர்!
ஜெய்சங்கர் தனது நண்பர் சுப்பிரமணிய ரெட்டியாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும், அவரின் "புகுந்த வீடு' படத்துக்கு, அவர்கள் கேட்டுக்கொண்டபடி நான் எழுதித் தந்தேன். இதுபற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பின்னர் என் நல்ல நண்பராகிவிட்ட ரெட்டியாரை, ஏவி.எம். அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கச் சொன்னார். நான் அழைத்துப்போய் அறிமுகம் செய்து வைத்ததோடு, அப்பச்சி அவர்களை "புகுந்த வீடு' படத்தைப் பார்க்கவும் ஏற்பாடு செய்தேன். படத்தின் விநியோக உரிமையை தமிழ்நாட்டில் இரண்டு ஏரியாக்களுக்கு வாங்கியதுடன்... அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும், இந்தி மொழியிலும் தயாரிக்கும் உரிமைகளையும் ஏவி.எம். அவர்கள் வாங்கிக்கொண்டார். இதன் பின்னால் சுப்பிரமணிய ரெட்டியார் என்னுடன் தன் நட்பை அதிகமாக வளர்த்துக்கொண்டு, தினமும் பலமணி நேரம் என்னோடுதான் இருப்பார். அப்போது நான் "கனிமுத்துப் பாப்பா' என்ற படத்தை எழுதி தயாரித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படம் ஒன்பதாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் அதை போட்டுப் பார்க்க விரும்பி ஏற்பாடு செய்தேன். பொதுவாக என் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது யாருக்கும் காட்டமாட்டேன். ரெட்டியார் அடம்பிடித்து என்னோடு வந்து ஒன்பதாயிரம் அடிகளைப் பார்த்துவிட்டு "நானும் இதில் சேர்ந்துகொள்கிறேன்... என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நவநீதா பிலிம்ஸ் வழங்கும் குகநாதனின் "கனிமுத்து பாப்பா' என விளம்பரம் செய்யயலாம். இதற்கு மேலான செலவுகளை நான் செய்கிறேன். "புகுந்த வீடு' நூறாவது நாளில் இதை ரிலீஸ் செய்தால் எனக்கு நல்லபேர் கிடைக்கும்' என பிடிவாதம் பிடித்தார். பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நானும் ஒப்புக்கொண்டேன். அந்தப் படமும் பெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ரெட்டியார் "புகுந்த வீடு" படத்தின் நூறாவது நாள் விழாவை ஏவி.எம். அவர்கள் தலைமையில், சிவாஜி சார் முன்னிலையில் ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடத்தினார். அன்று அவர் பேசும்போது, என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எல்லாம் தன்னால் ஆனதாக பேசினார். அப்போதுதான் ஒரு பிரபல இயக்குநர் என்னிடம் சொன்ன ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது... "சினிமாக்காரன் தூங்கும்போது கூட காலை அசைத்தபடிதான் தூங்கவேண்டும். இல்லேன்னா சங்கு ஊதிடுவான்'' என்றார்.
மிகவும் சிரமப்பட்டு எஸ்.பி.முத்துராமனை இயக்குநர் ஆக்கியே தீரவேண்டும் என்ற நோக்கத்துக்காக நான் எடுத்த படத்தில் தந்திரமாக உள்ளே நுழைந்து... என் படம் என அவர் மார்தட்டவும், பல வருடங்கள் கழித்து தன் ஊரில் ஒரு விழா அமைத்து அதற்கு முத்துராமனை அழைத்து மேளதாளம் முழங்க நான் அறிமுகம் செய்த இயக்குநர் என பேசி மகிழ்ந்திருக் கிறார்.
அதன் பின்னால் ஜெய்சங்கரை நான் சந்தித்தபோது... "என்ன குகன்... என்னைத் தொல்லைப்படுத்தினதாலே நீங்க சமாளிப்பீங்கன்னு உங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சா, இப்படியா ஏமாளியாவா இருப்பீங்க?''ன்னு கேட்டார்.
"ஒரு மூணு மாசம் பொறுங்க சங்கர்... அப்ப தெரியும் குகநாதன் யாருன்னு...'' என்று சொல்லிவிட்டு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கிட்டு குற்றாலம் கிளம்பிவிட்டேன். அங்கே உருவான கதைதான் என்னை உச்சத்துக்கு கொண்டுபோனது.
ஜெய்சங்கர் அறிமுகப்படுத்திய நண்பரைப் பற்றிச் சொன்னேன். ஜெய்சங்கரைப் பற்றிய நிறைய சொல்லவேண்டும்... பின்னால் சொல்கிறேன்.