11

சின்ன காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் தங்கி, பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படிப்பில் சேர்ந்தேன். கல்லூரியில் என் தமிழாசிரியர் மா.கி.தசரதன், விரிவுரை யாளர் மு.பி.பாலசுப்பிரமணியன், அண்ணாவின் 'ஐஞஙஊ கஆசஉ' ஆங்கிலப் பத்திரிகையில் பணி யாற்றிய தி.சு.கிள்ளிவளவன் (பின்னாளில் காங்கிரஸ் பிரமுகராக இருந்தவர்), அண்ணாவின் நண்பர் ராஜகோபால் வெங்கடாசலம் உள்ளிட் டோர் எனக்கு நன்கு பரிட்சயமாகி என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தார்கள்.

நான் தங்கியிருந்த அறையிலிருந்து பார்த்தால் அண்ணா எழுதிக்கொண்டிருப்பது தெரியும். சம்மணம் போட்டு உக்கார்ந்து மடியில் அட்டையும், பேப்பரும் வைத்து மிக விரைவாக எழுதுவார் அண்ணா.

பக்க எண் போட்டு எழுதும் அண்ணா... எழுதிய காகிதத்தின் மேல்பகுதியில் தன் நடுவிரலால் ஒரு அழுத்தம் கொடுத்து கீழ்நோக்கி தள்ளிவிட்டு, அடுத்த காகிதத்தில் எழுதுவார். இப்படியே... அவர் எழுதிய காகிதங்கள் அந்த அறை முழுவதும் பரவிக் கிடக்கும். அண்ணாவைப் பார்க்க வருபவர் யாரேனும் அந்தக் காகிதங்களை பக்க எண்படி அடுக்கி, அண்ணாவிடம் கொடுப்பார்கள். நான் என் அறையிலிருந்து இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.

Advertisment

எழுதி முடித்ததும், சைக்கிளை ஓட்டிக்கொண்டு தான் நடத்திவந்த "திராவிட நாடு' பத்திரிகை ஆபீஸுக்குப் போவார். சைக்கிள் பின்னாடியே அண்ணாவின் வளர்ப்பு நாய் ஓடும். அண்ணாவைப் பார்ப்பதற்காகவே நானும் சைக்கிள் பின்னாடியே ஓடுவேன்.

ஒருமுறை எங்கள் போராசிரியர் ராமலிங்கம், "மனித தெய்வம்' நாடகத்தை அண்ணா தலைமையில் நடத்தினார். அதில் எனக்கு ஒரு வேடம் கொடுத்தார். அண்ணாவிடம் ஒரு பேனாவைக் கொடுத்து, அதை எனக்கு பரிசளிக்கச் செய்தார் பேராசிரியர்.

"அண்ணாவிடம் நெருங்கிப் பழகவேண்டும்' என்ற உணர்வு எனக் குள் அதிகமாகிக்கொண்டே யிருந்தது. வழக்கம்போல் அண்ணா எழுதித் "தள்ளி'க் கொண்டிருந்தார். நான் அதைப் பார்த்துவிட்டு, அவரது வீட்டுக்குள் அவர் எழுதிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தேன். நான் வந்ததைக்கூட அண்ணா கவனிக்கவில்லை. எண்ணத்தை எழுத்தாக்கிக்கொண்டிருந்தார். நான் பரவிக் கிடந்த காகிதங்களை பக்கவாரியாக அடுக்கி அண்ணா எழுதி முடிக்கும் வரை காத்திருந்து, அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்தார்... அவ்வளவுதான்!

Advertisment

இலங்கையில் ஏ.எஸ்.மணவைத் தம்பி "திரைக்கலை' எனும் பத்திரிகையை நடத்திவந்தார்.

"அண்ணா மற்றும் கலைஞர் புகைப்படங்களை பிரசுரிக்க இங்க அரசாங்கம் அனுமதிக்கிறதில்ல. அவங்கள்லாம் பிரிவினைவாதிங் களாம். அதனால்... "திரைக்கலை' பத்திரிகையை அண்ணா படிக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்து அனுப்பணும்'' என கடிதமும், பத்திரிகையும் அனுப்பியிருந்தார்.

நான் பேராசிரியர் ராமலிங்கத்திடம் சொன்னேன். அவர் அண்ணாவிடம் சொல்லி அனுமதி பெற்றுத் தந்தார்.

என்னிடம் "பாக்ஸ் கேமரா' இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அண்ணாவின் வீட்டுக்குப் போனேன்.

11

"பேராசிரியர் ராமலிங்கம் சொன்னாரே...''

"நீதான் போட்டோ எடுக்கப் போறியா... எடுத்துக்க'' என்றார்.

"திரைக்கலை' பத்திரிகையை அண்ணா உட்கார்ந்து படிப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டேன்... பல கோணங்களில். அதற்குள் அண்ணா, அந்தப் பத்திரிகையை முழுவதுமாகப் பார்த்துவிட்டார்.

நான் எடுத்த புகைப்படங்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தேன். அண்ணாவை புதிய "வியூ'வில் பார்த்த மணவைத் தம்பி, அட்டைப் படமாக வெளியிட்டார். வாசகர்களும், அண்ணாவின் புகைப்படத்தால் ஈர்க்கப்பட... பத்திரிகை விற்பனை அமோகமாக இருந்தது.

எனக்கு இரண்டு புத்தகம் அனுப்பி வைத்தார்கள். அதில் ஒன்றை அண்ணாவிடம் கொடுத்தேன்.

"ஓ...! அட்டைப் படமா! போட்டோ நல்லா எடுத்திருக்கியே!'' என பாராட்டினார்.

1961-ஆம் ஆண்டு இது நடந்தது. அண்ணாவிடம் முதன் முதலில் நான் வாங்கிய பாராட்டு இது!

அண்ணாவின்'HOME LAND' ஆபீஸில் வைத்து "நடிப்பிசைப் புலவர்' கே.ஆர்.ராமசாமி, "லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ஆர்., ஈ.வெ.கி.சம்பத், டி.வி.நாராயணசாமி உள்ளிட்ட கலை -அரசியல் இயக்க பிரபலங்களை பார்ப்பேன். அடிக்கடி பலர் அண்ணாவை சந்திக்கவும், அண்ணாவிடம் கதை எழுதி வாங்கவும் அங்கே வருவார்கள்.

ஒருநாள்... அண்ணாவும் அவரது நண்பர்களும் 'HOME LAND' ஆபீஸில் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் காஞ்சி கிருஷ்ணா தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டு "கதை பிரமாதம்'' எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அண்ணாவை (வேடிக்கை) பார்ப்பதற்காக... அலுவலக வாசற்கதவருகே நின்றிருந் தேன்.

"அப்படி என்ன கதை?'' என அண்ணா கேட்க, அந்த நண்பர் சொல்லிக்கொண்டே வந்தார். ஒரு இடத்தில் கதையின் போக்கையே மாற்றி, தவறாகச் சொல்ல...

என்னையுமறியாமல் "அது அப்படி இல்ல' என்றேன்.

11

அண்ணா, என்னை ஏறிட்டுப் பார்த்து அருகே கூப்பிட்டு... "நீ படம் பார்த்தியா? அப்ப அதை கரெக்ட்டா சொல்லு'' என்றார்.

"சார்... சொல்ற ஸீன்ல டயலாக் இருக்காது, ஆனா அதுக்கு மூணு ஸீன் முன்னாடியே... டயலாக்ல விபரமா சொல்லியிருப்பாங்க'' என்றேன்.

அந்த இங்கிலீஷ் டயலாக்கையும் ஸ்டைலா பேசிக் காட்டினேன்.

நான் (யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) ஜாஃப்னா யுனிவர்ஸிடி காலேலஜில் படித்தவன். அப்போது பிரின்ஸிபலாக இருந்தவர் அமெரிக்கரான மிஸ்டர் பாங்கர். அதனால் ஆங்கிலத்தில் தெளிவும், விரைவுமான உச்சரிப்புடன் ஸ்டைலாகப் பேசுவேன்.

நான் ஆங்கிலத்தில் பேசிய லாவகம் அண்ணாவுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இது நான் அண்ணாவிடம் பெற்ற இன்னொரு பாராட்டு!

இப்போது நான் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். அண்ணாவுக்குப் பிடித்தவனுமாக இருந்தேன்.

1962 தேர்தல்!

அண்ணாவுக்காக மாணவர்களைத் திரட்டி நான் செய்த பிரச்சாரம்...!

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

பந்தலுக்கும் உதவாது; பாடைக்கும் உதவாது!

என் நண்பர் ஜெய்சங்கர் ஒருநாள் அவருடைய நண்பர் ஒருவரை என்னிடம் அறிமுகப்படுத்தி... "இவரு புரொடியூஸராகணும்னு ஆசைப்படுறார். இவர்கிட்ட விபரம் பேசிக்கங்க குகன்'' என்றார். அதன்பின் அந்த நண்பர் சுப்ரமணிய ரெட்டியார் அடிக்கடி என் அலுவலகம் வருவார்.

"நவநீதா ஃபிலிம்ஸ்' என்ற கம்பெனியை ஆரம்பித்து இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் பணியாற்றி, பட்டு என்பவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்து ஏவி.எம். ராஜன், ரவிச்சந்திரன், சாவித்திரி, லட்சுமி ஆகியோரை வைத்து "புகுந்த வீடு' என்ற படத்தை ஆரம்பித்தார். பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் கதை-வசனம். ஒருநாள்... டைரக்டர் பட்டுவும், சுப்பிரமணிய ரெட்டியாரும் என் ஆபீஸுக்கு வந்து, "புகுந்த வீடு' படத்தின் சில காட்சிகளை மாற்றியமைத்து வசனம் எழுதித் தரும்படி கேட்டனர்.

"இன்னொருவர் எழுதும் படத்தில் நான் தலையிடுவது சரியா இருக்காது'' என மறுத்தேன்.

"படம் ஜெயிக்கணும் சார். நீங்க எழுதுற விஷயத்தை வெளியே தெரியாம பார்த்துக்கிறோம்'' என வற்புறுத்தியதாலும், பட்டு என் நெடுநாள் நண்பர் என்பதாலும் தட்ட முடியாமல் எழுதிக் கொடுத்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவர்கள் அழைத்ததால்... சென்றேன். அங்கிருந்த பிரகாசம், என்னை வழிமறித்து "என் கதையில் நீங்க எப்படி எழுதிக் கொடுக்கலாம்?' என தகராறு செய்தார்.

நான் அவரை தனியாக அழைத்துப் போய் "இந்தப் படத்திற்காக நான் சில காட்சிகளை எழுதிக் கொடுத்ததை வெளியே சொல்லமாட்டேன். விஷயத்தைப் பெரிசுபண்ணாதீங்க'' என்று சமாதானம் செய்தேன்.

ஏ.எஸ்.பிரகாசம் என்னைவிட சிறந்த கதாசிரியர் என்பதை மனப்பூர்வமாகச் சொல்கிறேன். அதற்கு உதாரணம்... "அக்கரைப் பச்சை' படம்.

"புகுந்த வீடு' படத்திற்காக என் பெயர் வராமல் நான் எழுதிக்கொடுத்த காட்சிகள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. அதில் எல்லோருக்கும் பிடித்த; எனக்கும் பிடித்த ஒரு வசனம்... "உளுத்துப் போன மூங்கில் பந்தலுக்கும் உதவாது; பாடைக்கும் உதவாது' என நோய்வாய்ப்பட்ட ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம்.

படம் ஹிட்! ஆனால் நண்பர் ரெட்டியார் என்னை வேறொரு விஷயத்தில் இருட்டடிப்பு செய்த சம்பவத்தை அடுத்துச் சொல்கிறேன்.