சினிமா கொட்டகைகள் பல்கலைக் கழகங்களாக விளங்கிய காலம் ஒன்றிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் ஆரிய மாயையிலும், அக்ரஹாரத்து ஆதிக்கத்திலும் சிக்கித் தவித்த தமிழ்ச் சமுதாயம், மெதுவாக விடுபட்டு, திராவிட சித்தாந்தத்தை ஏற்க ஆரம்பித்தது.
மூடநம்பிக்கையிலும், முட்டாள்தனமான பக்தியிலும் அடிமைப்பட்டுக் கிடந்த நமது சமுதாயம், பகுத்தறிவு பக்கம் திரும்பியது. பாமரனும் சிந்திக்கத் தொடக்கினான். தைரியமாக சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று; சமநீதி, சமதர்மம், ஜாதி ஒழிப்பு, மத ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்... என வாழப் பழகினான்.
இதன் பலனாக 1950-களில் தமிழக அரசிய லில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இந்த மாற்றங்களை உருவாக்கி, மக்களை உணரவைத்த சாதனங்கள் இரண்டுதான்.
ஒன்று: சினிமாக் கொட்டகைகள் -இவைதான் மாலைநேர கல்விக்கூடங்கள்.
இரண்டு: சலூன் கடைகள் -ஏழைபாழை களின் நூலகங்கள் ஆயின.
இங்கிருந்து நிகழ்ந்த பரப்புரைகளால் உண்டான அரசியல் மாற்றத்தால்தான் 1967-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணா நிதி, கவிஞர் கண்ணதாசன், திருவாரூர் தங்கராசு, முகவை ராஜமாணிக்கம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பொதுவுடைமையாளராக இருந்தாலும் கூட) -போன்ற நூற்றுக்கணக் கானோரும், எம்.ஜி.ஆர்., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.வி.நாராயணசாமி -போன்ற நடிகர்களும் பட்டிதொட்டியெங்கும் கழகக் கொள்கைகளை; நாடகங்கள் வாயிலாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் சென்றடையச் செய்தனர்.
அண்ணாவின் "திராவிடநாடு', கலைஞரின் "முரசொலி', கண்ணதாசனின் "தென்றல்' -இப்படி கழகக் கொள்கைகள் பேசும் பத்திரிகைகள் பலவும், சலூன் கடைகளில் படிக்கக் கிடைக்கும் நிலை இருந்தது. உதாரணமாக.... நான் வீட்டில் இருந்த நேரங்களைவிட; பள்ளி -கல்லூரிகளில் இருந்த நேரங்களைவிட. சினிமா கொட்டகைகளில் கழித்த நேரமே அதிகம். கல்லூரிகளைவிட சினிமா கொட்டகைகளே எனக்கு பல்கலைக்கழகங்கள் ஆகின. கழகத் தலைவர்களின் பொதுக் கூட்டங்களே எனக்கு நூலகங்கள் ஆகின.
வெறும் வெறி பிடித்த ரசிகனாக நான் படங்களைப் பார்க்கப் போனவனல்ல.
"தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்
மானம் பெரிதென உயிர் விடுவான்.
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்'
-நாமக்கல் கவிஞரின் இந்தப் பாடலைத்தான் முதன் முதலில் நான் திரையில் கேட்டேன். (1954 எம்.ஜி.ஆர் நடித்த "மலைக்கள்ளன்' திரைப்படம்) என்னுள் எரிதணலாய் இருந்த மொழியுணர்வு "குப்'பென்று வியாபித்து எழுந்தது. அதனால்தான் "சிங்கள எழுத்து (சிறி) எதிர்ப்புப் போராட் டம்' நடந்தபோது, அதில் மிகச் சிறுவனாக இருந்த நான் கலந்துகொண்டேன். யாழ்ப்பாணம் அரசு அலுவலகம் முன்பாக நடந்த இந்தப் போராட்டத்தில், சிங்கள ராணு வம் சுற்றி வளைத்தபோதும்... பெரும் தலைவர்களுடனும் நானும் அச்சமின்றி கலந்துகொண்டேன்.
அந்தச் சிறுவயதில், பன்னிரண்டு வயதிற்குள் இருந்த அந்த அறியாத வயதில்.... நான் முதலில் என்ன நினைத்தேனென்றால், திரைப்படங்களில் நாயகன் பேசும் வசனங்கள், பாடும் பாடல்கள், போடும் சண்டைகள் என அத்தனையும் அந்த நாயகனுக்கே சொந்தமானவை என்று நம்பினேன். அவர்களே எழுதிப் பேசுகிறார்கள், அவர்களே எழுதிப் பாடுகிறார்கள் என்றே மிக உறுதியாக நம்பியிருந்தேன்.
யாழ்ப்பாணம் ராணி தியேட்டரில் "மலைக்கள்ளன்' படம் பார்த்தேன். இந்தப் படத்தில் குமாரவீரன் எனும் மலைக்கள்ளன், மலைக் குகையில் வசிப்பார். அப்துல்ரகீம் எனும் வேஷத்தில் ஊருக்குள்ளும் வசிப்பார். பூங்கோதையாக பானுமதியும், வீரராஜனாக ஸ்ரீராமும் நடித்திருப்பார்கள். (நான் படம் பார்த்த வயதில் அவர்களின் பெயரெல்லாம் எனக்குத் தெரியாது)
ஒரு காட்சியில் பூங்கோதையை பலவந்தமாக அடைய முயலுவார் வீரராஜன். அப்போது மலைக் கள்ளன் அங்கு தோன்றி, கத்தி வீசுவார்.
"யாரடா நீ?'
"கற்புக்கரசியை காப்பாற்ற வந்த கடவுள், துஷ்ட நிக்ரர்களை சிஷ்ட பரிபாலனம் செய்ய வந்த ஆண்டவன் எடுத்த அவதாரம், திக்கற்ற ஒரு பெண்ணின் வேதனையைப் போக்க வந்த தெய்வத்தின் திருவுருவம் என்றெல்லாம் எண்ணி விடாதே! நான் மலைக்கள்ளன்' என்பார் எம்.ஜி.ஆர். -இப்படியான வசனங்களில் பகுத்தறி வின் யதார்த்தம் மிளிரும். பொதுவாக நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பும்போது, "சரி.. நான் வரட்டுமா?' என்போம்.
பானுமதியுடனான காதல் உரையாடல் ஒன்றின்போது...
எம்.ஜி.ஆர் கிளம்புவதற்காக "நான் வரட்டுமா?' என்பார். உடனே பானுமதி "எங்கே?' என்று கேட்பார்.
"உன் அருகில்தான்' என்பார்.
இந்த குறும்பு வசனங்களில் காதலின் ஜோதி ஒளிரும். வீரத்தை விவேகமா சொன்ன விதமாகட்டும், "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' பாட்டாகட்டும்... இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது.
எம்.ஜி.ஆரே யாழ்ப்பாணம் ராணி தியேட் டருக்கு நேரில் வந்து பேசுவதாகவும், சண்டையிடு வதாகவும், பாட்டுப் பாடுவதாகவும் அசைக்க முடியாத நம்பிக்கையில் படம் பார்த்தேன்.
மலைக்கள்ளன் படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வெளியே வந்து விசாரித்த பிறகு தான்... "கலைஞர் எழுதிய வசனத்தை எம்.ஜி.ஆர் பேசி நடிக்கிறார்' என்பதை தெரிந்துகொண்டேன்.
ஆனால் பேனா... பிந்திக்கொண்டது! முகம்... முந்திக்கொண்டது!
ஆனாலும் ஒரு தேவதூதனாய் எம்.ஜி.ஆர் எனக்குத் தெரிந்தார். என் மனதில் அவரை அப்படியே உணர்ந்தேன். ஒப்பனை முகங்களை ஒப்பற்ற மனித தெய்வங்களாக கொண்டாடிய வயது அது. அதெல்லாம் திரைப்படக் கதாநாயகர்களின் குற்றமல்ல. அந்த வயதில் எனது அறியாமை.
தொடர்ந்து தியேட்டர் தியேட்டராகச் சென்று எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்தேன். வின்ஸ்சர் தியேட்டரில் "குலேபகாவலி' படம் பார்த்தேன். அதில் புலியுடன் எம்.ஜி.ஆர் போடும் சண்டையைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். இதனால் எம்.ஜி.ஆர் என் இதயத்தில் அப்பிக் கொண்டார். அவருடைய பேச்சு, உடையலங்காரம், வசன உச்சரிப்பு, சண்டை உத்தி, நடிப்பு, பாடல், ஸ்டைல்... இப்படி எல்லாம் சேர்ந்து அவரைத் தூக்கி வைத்தது.
சினிமாதான் என் எதிர்காலம் என முடிவு செய்து, "சினிமாவுல வந்தா, எம்.ஜி.ஆர் மாதிரி வரணும்' என முடிவெடுத்துக்கொண்டு என் படிப்பைத் தொடர்ந்தேன்.
இலங்கையிலிருந்து எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய கடிதம்...
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்
_______________
செல்லரித்த சுவரில் சித்திரம்?!
மதுரகீதம் கதைச் சுருக்கம்: டாக்டர் ராதாவின் (ஸ்ரீவித்யா) கிளினிக்கிற்கு வரும் கமலக்கண்ணன் (விஜயகுமார்) "மொத்தமாக தூக்கமாத்திரை கேட்பான். தூக்கமாத்திரைகளுடன் வைட்டமின் மாத்திரைகளையும் கலந்து கொடுத்த ராதா, கமலக்கண்ணனை பின்தொடர் வாள். அவன் தற்கொலைக்கு முயன்றும், வைட்டமின் மாத்திரைகள் என்பதால் உயிருக்கு ஆபத்து வராது.
கமலக்கண்ணனுக்கு பெரிய பாடகராக வேண்டும் என்பது விருப்பம். சான்ஸ் கிடைக்காத விரக்தியில் இருக்கும் அவனை, தனது குடும்ப நண்பரான இசை யமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாத னிடம் அறிமுகப்படுத்தி வைப்பாள் ராதா. அதன் மூலம் சினிமாவில் பெரிய பாடகராகும் கமலக் கண்ணணை தன் மகள் வசந்திக்கு (ஸ்ரீப்ரியா) திருமணம் செய்துவைக்க விரும்புவார் தயாரிப்பாளர் செட்டியார் (அசோகன்). ஆனால் இதில் ஒரு சிக்கல்... வசந்தி திருமணத்திற்கு முன்பே யாரிடமோ ஏமாந்து கர்ப்பமாகி பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். குடும்ப டாக்டரான ராதாவிடம் இந்தப் பிரச்சினையைச் சொல்லி செட்டியார் வருத்தப்பட, அந்தக் குழந்தையை தன் குழந்தை யாக ஏற்றுக்கொள்வாள் ராதா. தனது முன்னேற்றத்திற் காக பல முயற்சிகளை எடுத்த ராதாவை விட்டுவிலக, அந்தக் குழந்தையை காரணமாக முன் வைப்பான் கண்ணன். இதனால் கண் காணாத இடத்திற்குச் செல்வாள் ராதா.
கண்ணன் -வசந்தி திருமணம் முடிந்த நிலையில்... மீண்டும் அவர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ராதாவுக்கு. அப்போதுதான் இந்த உண்மைகள் வசந்திக்கு விளங்கும். உடனே ராதாவுக்கும், கண்ணனுக்கும் திருமணம் செய்துவைக்க வசந்தி முயலுவாள். ஆனால்... புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கும் ராதா "செல்லரித்த சுவரில் சித்திரம் வரைய ஆசைப்படுறீங்க' எனச் சொல்லிவிட்டு, வீணையை எடுத்து வாசிப்பாள். வீணையில் நரம்பு அறுந்துபோகும். ராதா உயிரற்று விழுவாள்.