cc

மிழ்நாட்டுக்கு வந்த பின்னாடி அறிஞர் அண்ணாவைப் பார்க்கணும், அவர் கூட பேசணும்- பழகணும்னு ஆசைப்பட்டேன். ஏங்கினேன். ஆனால் கலைஞரைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் நான் கொடுத்து வச்சவன். எதிர்பாராமல் கலைஞரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் அண்ணாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் தங்கி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லுரியில் பி.யூ.சி. படித்து வந்ததையும், அண்ணாவுடன் நெருங்கிப் பழகி வந்ததையும் சொன்னேனில்லையா...

1962 தேர்தல்

Advertisment

பி.யூ.சி. மாணவர்கள் அனைவரும் தி.மு.க. கொடியை கையில் ஏந்திக் கொண்டு, தினமும் வீதி வீதியாக அண்ணாவுக்குப் பிரச்சாரம் செய்து வந்தோம்.

அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாரின் மகன் எங்களோடு தான் படித்தான். ஆயினும் நாங்கள் அண்ணாவுக்கே பிரச்சாரம் செய்தோம்.

ஒ:ருநாள்...

Advertisment

நாங்கள் பிரச்சாரத்திற்கு கிளம்பிப் போய்க் கொண்டிருந்தபோது...

"ஒங்களோட பிரச்சாரம் செய்ய ஒரு வி.ஐ.பி. வரப் போறாரு. சின்னக் காஞ்சிபுரம் கடைத் தெருவுல அவரோட தலைமையில்தான் பிரச்சாரம் நடக்கப் போகுது. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு'' என்று சொன்னார்கள்.

"யாரா இருக்கும்?' என சந்தோஷமான சஸ்பென்ஸுடனும், அடக்க முடியாத ஆர்வத்துடனும் நாங்கள் காத்திருந்தோம்.

அப்போது ஒரு பியட் கார் வந்து நின்றது. கதவை முன்பக்கமாக திறப்பது போல் அந்த கார் இருந்தது. முன் ஸீட்டிலிருந்து, தோள் துண்டை சரி செய்துகொண்டே இறங்கினார் அவர்.

மாணவர்கள் மத்தியில் சந்தோஷ சலசலப்பு. முகங்களில் மகிழ்ச்சி. "டேய்... கலைஞர்டா. கலைஞர் வந்துருக்கார்' என ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள்.

எனக்கோ அதிர்ச்சி!

cc

"பார்க்குறதுக்கு நோஞ்சான் மாதிரி இருக்காரே? இவரா கலைஞர்?

பொறி பறக்கிற "பராசக்தி' பட வசனங்களையும், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட "மலைக்கள்ளன்' பட வசனங்களையும் நோஞ்சான் போல் இருக்கும் இவரா எழுதினது? இவரா கலைஞர்?' என அவரின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு என் மனம் நம்ப மறுத்தது. "இவர்தான் கலைஞர்' என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

கலைஞர் தலைமையில் சின்னக் காஞ்சிபுரம் கடைவீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

அன்று மதிய உணவு அண்ணா வீட்டில் கலைஞருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலையில்...

பெரிய காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.

மேடையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு, அதில் அமர்ந்திருந்தார் கலைஞர்... பேசுவதற்காக. நான் எனது பாக்ஸ் கேமராவில் ஏற்கனவே அண்ணாவை ஸ்பெஷலாக படம் பிடித்திருந்தேன். இப்போது கலைஞரை படம் பிடிப்பதற்காக... கூட்டத்தில் முண்டியடித்து மேடையின் அருகே சென்று விட்டேன். என்னைப் பார்த்த கலைஞர்...

"அந்தப் பையனை மேடையில் ஏற்றுங்கள்' என மேடையின் ஓரத்திலிருந்த கட்சிக்காரரிடம் சொல்ல... அவர் என்னை கை கொடுத்து தூக்கி மேடைக்கு ஏற்றினார். மேடையில் ஒரு ஓரமாக கலைஞரை புகைப்படம் எடுக்க வசதியாக உட்கார்ந்து கொண்டேன்.

கலைஞர் பேசத்துவங்கினார். அவர் பேசுகிற சம்பவம் அப்படியே கேட்டிருந்த நான் உட்பட எல்லோருக்குமே, காட்சிகளாக கண் முன்னே ஓடியது. பேச்சை பேச்சாக மட்டுமின்றி, அதை காட்சியாக கண் முன் நிறுத்தும் வல்லமை அவருக்கு வாய்த்திருந்தது.

நான் கண் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில்... பிரச்சாரத்திற்கு வந்த கலைஞரைப் பார்த்து விட்டு... "இப்படி நோஞ்சானா இருக்காரே?' இவரா கலைஞர்?' என நம்ப முடியாத நான், மாலையில் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போது, "இவர்தான் கலைஞர், இதுதான் கலைஞர் ஸ்டைல்' என வியந்து போனேன்.

கலைஞரின் வசனங்களை திரைப் படங்களில் கேட்டிருக்கிறேன். படித் திருக்கிறேன். ஆனால் கலைஞரின் பேச்சை முதன்முதலில் அன்றுதான் கேட்டேன்.

அப்போது... நான் மனதில் என்ன நினைத்தேன் தெரியுமா?

"அண்ணா என்ற அறிவுக்களஞ்சி யத்தை முதலில் நான் சந்திக்காமலிருந்தால்... அன்றே... காஞ்சியில் உங்கள் பின்னால் வந்திருப்பேன்'.

காஞ்சியில் அண்ணாவுடன் பழகிய பின், கலைஞரின் காஞ்சிபுரம் பேச்சை முதன்முதலாக கேட்டபின் அதிலிருந்து அண்ணாவின் பொதுக் கூட்ட பேச்சைக் கேட்கத் தவறுவதில்லை. கலைஞ ரின் பொதுக்கூட்ட பேச்சையும் கேட் கத் தவறுவ தில்லை. கலைஞரின் எழுத்தின் மேல் எனக்கு ஏற்கனவே காதல்.

அவரின் பேச்சைக் கேட்டபிறகு அவர் மீதே காதல் வந்து விட்டது என்று சொல்லலாம்.

ஒருமுறை... அண்ணாவின் வீட்டில் அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழக பிரபலங்களின் மேடைப்பேச்சு சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நாவலர் நெடுஞ் செழியனின் பேச்சு எப்படிப்பட்டது?' என கலைஞர் கேட்டார்.

"எதுக்குய்யா விமர்சனமெல்லாம்? வேண்டாம்யா' என அண்ணா சொல்ல, கலைஞர் விடாப்பிடி யாக கேட்க...

பொருட்காட்சி களில் சுற்றப்படும் "ஜெயண்ட் வீல்' எனப்படும் பிரமாண்ட ராட்டினத்தை நாவல ரின் பேச்சுக்கு உதா ரணமாகக் காட்டினார் அண்ணா...

நாவலர் பேசும் போது... "அன்றைக்கே அப்படிச் சொன்னார் கள்...' என ராட்சச ராட்டினத்தின் பெட்டி, உச்சிக்குச் செல்வது போல குரலை உயர்த்து வார்.

cc

திடீரென... அந்தப் பெட்டி கீழே வருவது போல குரலைத் தாழ்த்தி... "மக்களுக்காகத்தான் அப்படிச் சொன்னார்கள்' எனப் பேசுவார்.

இப்படி ஜெயண்ட் வீலை நாவலர் நெடுஞ்செழியன் பேச்சுக்கு உதாரணமாகச் சொன்னதும்...

"அண்ணா... நான் பேசுறது எப்படி?'' என கலைஞர் கேட்க, "எதுக்கு அதெல்லாம்'' என அண்ணா மறுக்க.... "சொல்லுங்க அண்ணா. நீங்க மனசில் பட்டதைச் சொன்னீங்க. நான் அதை ஏத்துக்கிறேன்'' என கலைஞர் விடாப்பிடி பண்ண..."குழந்தை அழுதா... தாய் என்ன செய்வா? கிலுகிலுப்பையை ஆட்டி, சத்தம் வரவப்பா. உடனே குழந்தை அழுகையை நிறுத்திடும். குழந்தை பெரிசான பின்னாடி... "ஒரு ஓலக்கொட்டான்ல, உள்ள நாலஞ்சு சின்னச் சின்ன கல்லுகளைப் போட்டு செஞ்ச கிலுகிலுப்பையைக் காட்டி, அம்மா நம்ம அழுகையை நிறுத்திருக்காளே?' என ஆச்சரியப் படும். அப்படித்தான் லட்சம் பேர் முன்னாடி நீ பேசினாலும், அவ்வளவுபேரும், நீ என்ன சொல்றியோ... அதை செய்யக் கிளம் பிடுவாங்க. பாதித் தூரம் போனதும்தான்... "ஆமா, என்ன சொன் னாரு?'னு யோசிப்பாங்க. உன் பேச்சோட வலிமை அப்படி.''

"அண்ணா... உங்கள் பேச்சு எப்படி?'' என கலைஞர் கேட்க.... "நீ கேட்பேன்னு எனக்கு நல்லாத் தெரியும். சொல்றேன்.''

உதிரிப்பூக்களை சரமாவோ, மாலை யாவோ கட்டும் போது... ஒரு பாத்திரத்துல தண்ணீர் வச்சிருப் பாங்க.

நாரை தண்ணியில நனைச்சு, ஒவ்வொரு பூவையும் எடுக்கும் போதும் அதையும் லேசா நனைச்சு கட்டு வாங்க. இப்படி பொறுமையா கட்டி முடிச்சுப் பார்த்தா... அது அழகிய மாலையா இருக்கும்.

அதுபோல... மக்களுக்கு தேவையான வார்த்தைகளை மக்கள்ட்டருந்தே எடுத்து, அதை மாலையா கோர்த்து அதை மக்கள்ட்டயே விட்டுட்டு வந்துடுவேன்...'' என்றார் அண்ணா.

இதோ ஈழம்... UNFOLDING

(திரை விரியும்)

படம் உதவி : ஞானம்

cc