சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலைக்காக அழைத்துவந்த 15 வயது சிறுமியை சூடு போட்டும் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தியும் வீட்டு உரிமையாளர்கள் கொலை செய்தது சென்னையையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முகமதுநிஷாத் தனது வீட்டில் வேலை பார்க்க ஆள்வேண்டும் என தனது சகோதரி சீமாபேகம் மூலம் ஆள் தேடியிருக்கிறார். அப்போது தஞ்சை பகுதியில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி அருந்ததி வேலைக்கு வந்திருக்கிறார். தந்தை இறந்த நிலையில், இடையில் படிப்பை நிறுத்தியிருந்த அருந்ததியை, கைக்குழந்தையுடன் இருந்த அவரது தாய் வேறு வழியின்றி வேலைக்கு அனுப்பியிருந்திருக்கிறார்.
முகமுதுநிஷாத், நாசியா தம்பதியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார் அருந்ததி. அருந்ததியைக் கேட்க யாருமில்லை என்பதால் இவர்கள் சிறுமியிடம் கடுமையாக வேலை வாங்கியதுடன், வேலை செய்ய மறுத்தால் கடுமையாகத் தாக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இவர்களது வீட்டுக்கு வந்துபோகும் கோவிலம்பாக்கம் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, வேலைக்காரி மகேஸ்வரி ஆகியோரும் சிறுமியை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வழக்கறிஞர் துணையுடன், தனது வீட்டு வேலைக்காரப் பெண் தீபாவளி தினத்தன்று தங்கள் வீட்டுக் குளியலறையில் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் முகமதுநிஷாத். இதையடுத்து போலீசார் வீட்டுக்கு வந்து குளியலறையில் இறந்துகிடந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையின்போது முகமதுநிஷாத், “"தீபாவளியன்று குளிக்க உள்ளே சென்ற அருந்ததி வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகத்தில் கதவைத் தட்டினோம்... பதிலில்லை. எனவே கதவை உடைத்துப் பார்த்தபோது சிறுமி தரையில் இறந்த நிலையில் கிடந்தார். என்ன செய்வதெனத் தெரியாமல் கதவைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக் குச் சென்றுவிட்டோம்''” எனத் தெரிவித் துள்ளனர். ஆனால் சிறுமியின் உடலில் சிகரெட்டால் சுட்ட தீக்காயங்கள், வேறு காயங்கள் இருந்ததைக் கவனித்த போலீசார், முகமதுநிஷாத், நாசியா ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களுக்கு சிறுமி அருந்ததியை வேலைக்குப் பார்த்துக் கொடுத்த சீமா, நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தியையும் விசாரித்ததில் உண்மை அம்பலமாகியுள்ளது.
நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவிக்கும் அமைந்தகரை போலீஸ், “"ஆரம்பம் முதலே சிறுமியை முரட்டுத்தனமாக அடித்து கடுமை யாக வேலைவாங்கி வந்திருக்கிறது நிஷாத் குடும்பம். நிஷாத்தின் குழந்தை மீது அருந்ததி பாசமாக இருந்ததும் அந்தக் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. சொன்ன வேலையைச் செய்யாதபோது அடி உதைகளுடன், சிகரெட் டால் சூடு வைத்தல், அயர்ன்பாக்ஸால் சூடு வைத்தல் போன்ற கொடுமைகளையும் அரங்கேற்றிவந்துள்ளனர். இவர்களது வீட்டுக்கு வரும்போது லோகேஷ்-ஜெயசக்தியும்கூட சிறுமியை அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில் தீபாவளியன்றும் கடுமையாக வேலைவாங்கிய முகமதுநிஷாத், லோகேஷ், நாசியா, ஜெயசக்தி ஆகியோர் சரிவர வேலை செய்யவில்லை என கடுமையாக அடித்ததுடன், சிகரெட், அயர்ன்பாக்ஸால் சூடுபோடவும் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் படுகாயமடைந்த சிறுமி மயங்கி விழுந்திருக் கிறார். இந்தநிலையில்தான் சிறுமியை குளிய லறைக்குள் கொண்டுசென்று போட்டுள்ளனர். சிலமணி நேரம் சென்றும் அருந்ததி எழுந்திருக்காத நிலையில் அவள் இறந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
சிறுமியின் மரணத்தால் திகைப்படைந்து போன முகமதுநிஷாத், வீடெங்கும் பத்தி உள் ளிட்ட நறுமணப் பொருட்களை ஏற்றிவைத்து உறவினர் வீட்டிற்குச் சென்று செலவிட்ட நிலையில், வேறுவழியின்றி வழக்கறிஞர் துணை யுடன் மறுநாள் புகார் கொடுத்திருக்கின்றார். இதில் சம்பந்தப்பட்ட லோகேஷ் மீது ஏற்கெனவே விருதுநகர் மாவட்டத்தில் கொலை வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது''’என்றது.
இதற்கிடையில் போலீஸ் விவரம் தெரிவித்து, அருந்ததியின் தாய் சென்னை வந்த நிலையில்... பிரேதப் பரிசோதனை முடிந்து அருந்ததியின் உடல் அவர் வசம் ஒப்படைக்கப் பட்டது. சிறுமியின் உடலை ஊருக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யக்கூட பணவசதி இல்லை என அண்ணா நகர் ஆணைய ரிடம் அவர் தெரிவித்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணா நகர் சுடுகாட்டில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுமி வெறுமனே உடல்ரீதியாகத் தாக்குதலுக்கு மட்டும்தான் உள்ளானாளா… அல்லது பாலியல்ரீதியாக அத்துமீறல் நடந்ததா என்பது பிரதேப் பரிசோதனை அறிக்கை வரும்போது மட்டுமே தெளிவாகும்.
இந்த வழக்கில் கைதான முகமதுநிஷாத், நாசியா, லோகேஷ், ஜெயசக்தி, சீமாபேகம், வேலைக்காரப் பெண் மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், சிறுமியைக் கொடுமைப்படுத்தியதற்காக போஸ்கோ சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 16 வரை இவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-சூர்யன்